

1. தற்காப்பு
நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று ஆராய்வதற்கு இது நேரமில்லை. உடனே ஏதாவது செய்து ஆக வேண்டும். என்ன செய்யலாம்? எதைச் செய்தால் இந்த சூழல் மாறும் என்று யோசித்துக் கொண்டு இருந்தான் மோகன்.
ஒரு வாரத்திற்கு முன்புதான் தன், மச்சானிடம் ஏற்பட்ட மனக் கசப்பால் சற்று ஆடித்தான் போய் இருந்தான்.
அதற்கு முழுக் காரணமும் தன்னைச் சார்ந்தது என்று இப்போது உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தான்.
ஏன் நாம் அத்தான் சொல்வது போல் அவர் கம்பெனியில் மேலாளராக பணி செய்யக்கூடாது?
இதில் என்ன கெளரவம் குறைந்துவிடப்போகிறது! மேலும் நமக்கு கட்டட கலையும் தெரியும், அதில் உள்ள சிரமங்களும் அதை எப்படி கையாள்வது குறித்த 10 வருட அனுபவமும் இருக்கிறது.
இதை வைத்துத் தான் 'கந்தன் கன்ஸ்டிரக்ஸன்' முதலாளியான முருகன் நமக்கு, ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
முருகன் எங்களுக்கு ஒரு நல்ல குடும்ப மாப்பிள்ளை என்பதைத் தாண்டி, தன் ஹார்டுவேர்ஸ் பிசினஸ்க்கு தன் வாடிக்கையாளர்கள் மூலம் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவும் உதவி இருக்கிறார்.
என்ன என் பேராசை, அவரைக் கேட்காமல் ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு, ஒரு பெரிய பில் தங்கி வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டி, அசல், பாக்கி என தன் தொழிலையே முடித்துக் கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது எந்த கடனும் இல்லை; மனைவியும் எல்லாவற்றையும் உணர்ந்து இருக்கிறாள்.
இப்போது தன் தங்கைக்கு வளைகாப்பு; அப்பா இல்லாததால் குறைந்தது 4 பவுனுக்கு ஏதாவது சீர் செய்ய வேண்டும்.
“செய்வோம்” என்றாள் ஆண்டாள் - மோகன் மனைவி.
“ஒரு யோசனை; யாருக்கும் தெரிய வேண்டாம். நேற்று உங்கள் வீட்டு மாப்பிள்ளையுடன் பேசினேன். உங்களுக்கு மாதம் ரூபாய் 50,000 சம்பளம் என்றார். அதில் இருந்து 10 மாதத்திற்கு ரூபாய் 25,000 வீதம் பிடித்துக் கொள்ள நானே உறுதி அளித்தேன்.”
“இப்படி செய்தால் நாமும் சீரும் செய்யலாம்; சிரமம் இல்லாமல் நம் வாழ்விலும் ஒரு வழி உருவாகும்” என்றாள்.
உண்மை தான். வேலைக்கு செல்ல ஆயத்தமானான்.
2. சிலையை விட்டு தெய்வம் புறப்பட்ட கதை...
அன்று ஞாயிறு. காலை 12 மணி இருக்கும். வீட்டு வாசல் கதவின் அருகில் ஒரு கம்பீரமான நபர் நின்று கொண்டு இருந்தார்.
அவர் கோட்டும், சூட்டும் அணிந்து இருந்தார். நல்ல சிகப்பு நிறம். வயது 45 வரை இருக்கலாம்.
வாசல் அருகில் ஒரு ஜீப் நின்று கொண்டு இருந்தது; அதன் மேற்கூறையில் சிகப்பு கலர் லயிட் எரிந்து கொண்டு இருந்தது.
வீட்டிற்குள் வரலாமா என்று கேட்டவரை “வாங்க” என்று சொல்லி வரவேற்றான் செல்லதுரை.
குடும்பத்தில் உள்ள அனைவரையும் கூப்பிட்டார் அந்த நபர். மனைவி மக்கள் என்று ஒன்று திரண்டனர். முதியவர்கள் இருவர் உட்பட மொத்தம் 7 நபர்கள், அதில் 3 குழந்தைகள்.
ஆக முதியவர்கள் துரையின் பெற்றோர்கள் தான் என்று முடிவுக்கு வந்தார் அந்த வெள்ளை நிற ஆசாமி.
நீண்ட கவரை எடுத்தார்; அன்புதுரையிடம் கொடுத்து, எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பெரியவர்கள் இருவரையும் அழைத்தார். அவர்கள் காலில் விழுந்து வணங்கினார்.
இந்த நிகழ்வுகள் எல்லாம் புகைப்படம் மற்றும் ஒளிப்படமாக எடுக்கப்பட்டது.
'சால்வைகள்' செல்லதுரைக்கு போத்தப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் கொடுக்கப்பட்டன. மனைவி செல்லம்மாள் பூங்கொத்தை பரிசாக பெற்றாள்.
என்ன நடக்கிறது என்று எல்லோரும் வியந்தனர்.
அவரே மேலும் சொன்னார்;
“நான் உங்கள் மாவட்டத்தின் கலெக்டராக நாளை பொறுப்பு ஏற்க உள்ளேன். உங்கள் சேவையால் ‘சின்னப்பட்டி’ கிராமம் தொடர்ந்து 10 வருடங்களாக 'பசுமை கிராமம், தூய்மை கிராமம், தன்னிறைவு கிராமம்' என மாநில அளவிலும், இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் பேசப்பட்டு வருகிறது என்றால், அதற்கு உங்களுடைய அளப்பரிய உழைப்பே காரணம்” என்றார்.
நாளை என் பதவி ஏற்பு விழாவில் இந்தப் ‘புகைப்படம்’ மற்றும் ‘ஒளி நாடா’ வெளியிட திட்டமிட்டு உள்ளேன் என்று சொன்னவுடன் எல்லோரும் சிலை ஆனார்கள்.
தெய்வம் மட்டும் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டது.
மெதுவாக கவரை எடுத்து படிக்கலானான்.
அதில் அவனுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு இருந்தது.
இது நாள்வரை தூய்மை காவலராக தன் பணியினை செய்தவனுக்கு நாளை செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட தொடங்கினான்.