சிறுகதை: அக்பர் பீர்பால் - சீனநாட்டுமண்!

அக்பரின் கோப உத்தரவை கூட புத்திசாலித்தனமாகச் சவாலாக்கி, சீன மண்ணை இந்திய மண்ணாக மாற்றி வைத்த பீர்பாலின் நகைச்சுவை நிறைந்த தந்திரக் கதை
Akbar Birbal Story
Akbar Birbal Tamil Short StoryCredit: AI Image
Updated on
Kalki strip
Kalki strip

Akbar Birbal Tamil Short Story - மன்னன் அக்பரும் பீர்பாலும் இனிய நண்பர்களாக இருந்தாலும், சில சமயம் அக்பருக்கு ஆத்திரமும் கோபமும் வந்துவிட்டால், முதல் வேலையாக பீர்பாலை நாடு கடத்திவிடுவார்; பீர்பாலும் சென்றுவிடுவார்‌.

அன்றும் அக்பருக்குப் பீர்பால் மீது கோபம் வந்தது‌. உடனே அவர், "நீ இந்தியாவிலேயே இருக்கக்கூடாது; இந்திய மண்ணில் நடமாடக் கூடாது!" என்று உத்தரவிட்டார். "சரி, இந்தியாவை விட்டே சென்று விடுகிறேன்," என்று கூறியபடி பீர்பாலும் சென்று விட்டார்.

"வெளிநாடு செல்லப் போகிறேன் என கூறிவிட்டேன்; ஆனால், எவ்விதம் சக்கரவர்த்தியைக் காணாமல் இருக்கப் போகிறேன்?" என பீர்பால் வருந்தினார்‌. சீன நாட்டைச் சென்றடைந்த பீர்பால், எப்போதும் மன்னரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்‌. அக்பரும், "பீர்பால் வெளிநாடு சென்றுவிட்டாரே!" என்று வருந்தினார். பீர்பாலால் அதிக நாட்கள் அங்கு இருக்க முடியவில்லை; எனவே, அவர் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார். வரும்போது சில மூட்டைகளில் சீன நாட்டு மண்ணைக் கொண்டுவந்தார்‌.

பீர்பால் சீனாவிலிருந்து வந்துவிட்டதை அறிந்த அக்பர், தன் தலைமைக்காவலாளியை அழைத்தார். "இந்திய மண்ணை மிதிக்கக் கூடாதென்று சொன்ன பிறகும் திரும்பி வந்துவிட்ட பீர்பாலை உடனே சபைக்கு அழைத்து வா!" என்று கட்டளையிட்டார்.

காவலாளி சென்று பீர்பாலிடம் விஷயத்தைக் கூறினார்‌. பீர்பால் சீனாவிலிருந்து கொண்டுவந்த மண்ணைத் தன் வீட்டைச் சுற்றிப் பரப்பி வைத்திருந்தார். அவர் காவலாளியிடம் மிகவும் மகிழ்ச்சியுடன், "என் வீட்டின் முன்னும் பின்னும் சீன மணலைக் கொட்டி வைத்திருக்கிறேன். மன்னன் பேச்சைத் தட்டாமல், இந்திய மண்ணில் கால் வைக்காமல் இருந்து வருகிறேன்‌," என்று கூறி அந்த மணலைக் காட்டினார். பின் காவலாளியிடம், "வாருங்கள், என் வண்டியிலேயே போவோம்," என்று கூறி அவரைத் தன் வண்டியில் ஏற்றினார்‌. அந்த வண்டியிலும் சீன மண் நிரப்பப்பட்டிருந்தது.

சபையில் பீர்பாலைக் கண்டதும் அக்பருக்குள் மகிழ்ச்சி பொங்கியது. இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவரிடம், "என்ன பீர்பால், என் உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லையே?" எனக் கேட்டார்.

அதற்குப் பீர்பால், "மன்னனே! தாங்கள் கூறிய வண்ணம் நான் இந்திய மண்ணில் நடமாடவில்லையே! சீனாவிலிருந்து கொண்டுவந்த மண்ணில்தான் நடமாடி வருகிறேன்‌. என் வண்டியிலும் சீன மண் உள்ளது‌; என் வீட்டைச் சுற்றியும் சீன மண் உள்ளது‌. வேண்டுமென்றால் இந்தக் காவலாளியைக் கேட்டுப் பாருங்கள்," என்றார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அப்பாவால் முடிந்த திருமணம்!
Akbar Birbal Story

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் காவலாளியைப் பார்க்க, அவனோ, "மன்னரே! பீர்பால் கூறுவது உண்மைதான். அவர் வீட்டைச் சுற்றிச் சீன மண்ணைப் பரப்பியுள்ளார்; வண்டியிலும் சீன மண் உள்ளது," என்றான்.

அப்போதும் மன்னனுக்குப் புரியவில்லை. அவர் மீண்டும் பீர்பாலைப் பார்க்க, பீர்பால் சிரித்துக்கொண்டே, "மன்னரே, உண்மைதான்! நான் சீனாவிலிருந்து கொண்டுவந்த மண்தான் இது, டெல்லி மண் அல்ல. 'இந்திய மண்ணில்தானே நடமாடக் கூடாது' என்று ஆணையிட்டீர்கள்‌? எனவே, சீன நாட்டு மண்ணைப் பரப்பி, அதன் மீதுதான் நடமாடி வருகிறேன். நான் உங்கள் ஆணையை மீறவில்லை," என்றார்.

இதைக் கேட்டதும் அக்பர் வாய்விட்டுச் சிரித்தார். பிறகு, "நான் ஏதோ ஆத்திரத்தில் கூறிவிட்டேன்‌. அதற்காகச் சீன மண்ணைப் பரப்பி அதன் மீது நடக்கிறீர்களா? உங்கள் அறிவே அறிவு!" என்று கூறி, பீர்பாலைப் பாராட்டித் தழுவிக் கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com