அறைகளே இல்லாத புங்கா வீடுகள்! ஒவ்வொரு அறைக்கும் ஒரு புங்கா! எங்கே?

Bhunga house
Bhunga houseImage Credit: Shutterstock
Published on

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் மிகக் குறைந்த செலவில், மரபு வழியில், புவி அதிர்ச்சியைத் தாங்கக்கூடியதாக வட்ட வடிவிலான புங்கா (Bhunga) வீடுகள் கட்டப்படுகின்றன. 

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில், 1819 ஆம் ஆண்டு மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் எட்டாகப் பதிவாகியிருந்தது. அதுவரை நடந்த நில நடுக்கங்களில், அதுவே அதிகமான ரிக்டர் அளவாகும். அந்த நிலநடுக்கத்தில், தேரா, காத்ரா, மோதலா ஆகிய நகரங்களில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன. 

இந்த நிலநடுக்கப் பாதிப்புக்குப் பிறகு, அந்தப் பகுதியிலிருந்த கட்டுமானப் பணியாளர்கள் ஒன்று கூடி நிலநடுக்கத்தால் பாதிக்காத வீடுகளைக் கட்டுமானம் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தனர். அதன் பிறகு, தங்களின் மரபார்ந்த பழைய கட்டடக் கலையில் இருந்து, மண் வீடுகளின் தொழில் நுட்பத்தைக் கொண்டு, புதிய வகையில் வட்ட வடிவமான வீடுகளை உருவாக்கத் தொடங்கினர். அந்த வீடுகளே, ‘புங்கா வீடுகள்’ என அழைக்கப்படுகின்றன.

இந்தப் புங்கா வீடுகள் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் வடபகுதியில் உள்ள கிராமப்பகுதிகளில் பெருமளவு கட்டப்பட்டன. குறிப்பாக பந்நி, பச்சாவ் ஆகிய பகுதிகளில் அதிகமாகக் கட்டப்பட்டன. 

பந்நி பகுதியானது கற்களும், ஜல்லிகளும் இல்லாத பகுதி என்றாலும், களிமண் நிறைந்த பகுதியாக இருந்தது. அதனால் கட்டுமானத்துக்குக் களிமண்ணைத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவியது. மேலும், இப்பகுதியில் பல வகையான மரங்களும் புற்களும் காணப்பட்டதால், இவற்றையும் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்திக் கொண்டனர். 

இதே போன்று, கட்ச் மாவட்டத்தின் பச்சாவ் பகுதி கட்ச் பாலைவனப் பகுதியைச் சேர்ந்ததாகும். இங்கு காலோ துங்கர், கரோ துங்கர் என்னும் இரு மலைகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள் சுண்ணாம்புக் கற்களையும் கட்டுமானப் பொருள்களாகக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள், களிமண்ணையும் மரங்களையும் புற்களையும் கொண்டே கட்டப்படுகின்றன. புங்கா வீடுகளின் கட்டுமானப் பொருட்களை, மற்ற பகுதிகளில் இருந்து தருவிக்காமல், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே சுய சார்புடன் கட்டுமானம் செய்கின்றனர்.

முதலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இந்த வீடுகளை கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் வழியாக, கட்ச் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இவ்வகை வீடுகள் கட்டப்பட்டன.

புங்கா வீடுகளின் அமைப்பு கால நிலைகளுக்கு ஏற்பத் தாங்கும் நுட்பம் பெற்றவை. குஜராத் மாநிலத்தின் இந்த வடபகுதி பாலை நிலப் பகுதி என்பதால், அதிக வெப்பம் வீட்டுக்குள் இறங்காத வண்ணம் இந்த வீடுகளின் தொழில் நுட்பம் உள்ளது. ஒரே ஒரு அறை கொண்ட புங்கா வீடுகளின் சுவர்கள் அடர்த்தியானவை. மேற்கூரை வெப்பத்தைக் கடத்தா வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். புங்காவின் சுவர்களின் காற்றும் வெளிச்சமும் வருவதற்காக சன்னல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இந்திய இராணுவ துணைத் தளபதியான தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி!
Bhunga house

புங்கா வீடுகள் பல அறைகளின் தொகுப்பாக உள்ளன. ஒவ்வொரு அறையும் வட்டவடிவில் கட்டப்பட்டிருக்கின்றன. ‘வாஸ்’ என அழைக்கப்படும் தாழ்வாரம் ஒவ்வொரு புங்காவையும் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இந்தத் தாழ்வாரப் பகுதிகளில்தான் அவர்களின் பெரும்பாலான தினசரி வேலைகள் நடைபெறுகின்றன. 

ஒரு புங்காவுக்குள் எந்த அறையும் கிடையாது. படுக்கையறையாக ஒரு புங்காவும், வரவேற்பறையாக ஒரு புங்காவும் பயன்படுத்தப்படுகிறது. சமையலறைப் புங்கா, ‘ரன்தனியூ’ என்று அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் போது, புதியதாக புங்காக்கள் உருவாக்கப்படும்.

பொதுவாக பூகம்பத்தால் வீடுகள் பாதிகப்பட, வீட்டின் மூலைகள் ஒரு காரணமாக ஆகிறன. இதனால் வீடுகளில் மூலைகளை தவிர்க்க, புங்கா வீடுகளை வட்ட வடிமாகக் கட்டுகின்றனர். இதுவே இதன் தனிச்சிறப்பு ஆகும். அதுபோல நீளம் குறைந்த சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நிலநடுக்கத்தைத் தாங்கும் நிலைத்தன்மை கட்டடத்துக்குக் கிடைக்கிறது. கூரைகள் புற்கள் அல்லது ஓலையால் அமைக்கப்படுவதால் கூரையின் பளு குறைவு. அதனால் நிலநடுக்கத்தால் மேற்கூரை இடிந்து விழ வாய்ப்பும் குறைவு. 

2001 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த நிலநடுக்கத்தில் புங்கா வீடுகள் எந்தப் பாதிப்புமடையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வீட்டின் உறுதிக்கு சான்றாகவும் இது உள்ளது. 

இவ்வகை வீடுகள் பாதுகாப்பனவை மட்டுமின்றி அழகானவைகளாகவும் உள்ளன. பண்டிகைக் காலங்களில், பெண்கள் வீட்டின் புறச் சுவர்களில் அழகான வண்ணம் தீட்டுகிறார்கள். உள்ளே கண்ணாடிச் சில்லுகளைக் கொண்டு பூ வடிவத்தில் சித்திரங்கள் உருவாக்குகிறார்கள். புங்கா வீடுகளின் அமைப்பு இன்று குஜராத்தையும் தாண்டி, பிற மாநிலங்களையும் சென்றடைந்திருக்கிறது.

தற்போது, இந்த வட்ட வடிவ அமைப்பு முறையில், பல இடங்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்தில் தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com