
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விட்டு விட்டு நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சென்னையில் திறக்கப்படும்போது, தெற்கிலிருந்து படையெடுக்கும் வாகனங்களால் டோல் கேட்டுகள் மட்டுமல்ல, சாலைகளும் பிதுங்கித்தான் வழிகின்றன! இதனால் ஏற்படும் எரிபொருள் இழப்பும், பொன்னான நேர இழப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. இது கடந்த சில வருடங்களாகவே வாடிக்கையாக நடக்கும் நிகழ்ச்சியாகி விட்டது. ஆனால் அரசோ, போக்குவரத்துத் துறையோ இது குறித்து அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
அரசுத் தரப்பிலிருந்து வேண்டுமானால் இப்படிக் கூறலாம்: ’நாங்கள் வண்டலூரிலும், பெருங்களத்தூரிலும் மேம்பாலங்கள் கட்டி விட்டோம்; இரும்புலியூருக்கும் பெருங்களத்தூருக்கும் இடையேயுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப் படுத்தி விட்டோம்!’ என்று.
இவையெல்லாம் செய்தது போக்குவரத்தைச் சீராக்கத்தானே! ஆனால் அது நடைபெறவில்லையே! அதற்குத் தீர்வு காண வேறென்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டாமா?
இரண்டு உலக மகா யுத்தத்திற்கான காரணங்களை இரண்டாகப் பிரித்துச் சொல்வார்கள். உடனடிக் காரணங்கள் (Immediate Causes) மற்றும் நிரந்தரக் காரணங்கள் (Permanent Causes) என்று. அதுபோலவே நாமும் யோசிக்கலாம்.
உடனடியாகச் செய்ய வேண்டுபவை
விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறக்கும் நாளில், ஐ.டி.,கம்பனிகள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய (Work From Home) பர்மிஷன் கொடுத்து விட வேண்டும். ஒரு நாள் தாதமதமாக அவர்கள் சென்னை வரச் செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்களின் செயல்பாட்டைத் தாமதப்படுத்த முடியாதாகையால், தேவையெனில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதைத் தாமதப்படுத்தி விட்டு, அதற்குப் பதிலாகச் சனிக்கிழமைகளில் அவை இயங்கச் செய்யலாம்.
ஒருவர், இருவருக்காகக் கார் விடுவதை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தடை செய்து, முழுமையான பயணிகளுடன், ஃபைவ் சீட்டர் என்றால் 5 பேரும், செவன் சீட்டர் என்றால் 7 பேரும் பயணிக்க உத்தரவிட வேண்டும்.
கட்டப்பட்டுள்ள மேம்பாலங்களுக்குக் கீழுள்ள சாலைகளும் செயல்படும் இடங்களில், கனரக வாகனங்களைக் கீழ் சாலையில் இயக்கவும், மேம்பாலங்களில் லைட் வெகிக்கிள்ஸ் செல்லவும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
இது போன்ற தருணங்களில் அதிக எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தீபாவளிக்கான முன்பதிவு, ஆரம்பித்த 10 நிமிடங்களில் முடிந்து விட்டது என்று வரும் செய்திகள் ஈண்டு நினைவு கூரத்தக்கதோடு, பயமுறுத்துவதாகவும் உள்ளன.
நிரந்தரமாகச் செய்ய வேண்டுபவை
சென்னை ஒரு நிறைவு நிலை (Saturation Point)யை அடைந்து விட்டதால், புதிய கம்பனிகள் தொடங்காமல், அவற்றை மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடங்கச் செய்ய வேண்டும்.
எந்தெந்தத்துறைகளின் நிர்வாகங்களை இரண்டு, மூன்றாகப் பிரிக்க முடியுமோ அவற்றைப் பிரித்துத் திருச்சி, மதுரை, நெல்லை போன்ற நகரங்களுக்கு மாற்ற வேண்டும். கார் வாங்க விழைவோருக்கு, அதனை நிறுத்த உரிய இடம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். சாலைகளில் மட்டுமே நிறுத்துபவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
விடுமுறை முடிந்து பெரிய எண்ணிக்கையிலான வாகனங்கள் சென்னை திரும்புகையில், நெடுஞ்சாலையின் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்தி வைக்க அனுமதிக்கவே கூடாது.
சாலை விதிகளின்படி, குறிப்பிட்ட வேகத்தில் செல்ல முடியாத பழைய கார்களையும் இது போன்ற தருணங்களில் சாலைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. மீறி வருபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் பரீட்சார்த்த முறையில் செய்து பார்த்து, நல்ல விளைவுகளை ஏற்படுத்துமானால் நிரந்தரமாக்க வேண்டும்.