

-ஆர். வெங்கடேஷ்
பல நூறு தலைகள் கண்ட பண்டைய மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. வாயால் ஊதினால்கூட அதிகமாய்க் காற்று வரலாம். மற்றபடி காற்று வேறெப்படியும் உள்ளே நுழைந்து விடாதவண்ணம், அவ்வறை கவனமாகக் கட்டப்பட்டிருந்தது. சௌந்தருக்கு டையைத் தளர்த்தினால் ஆயுளில் ஒருநாள் கூடுமோ என்றுகூட சம்சயமிருந்தது. பக்கத்தில் விரைப்போடு விற்பனை மேலாளர் வாசுதேவ்.
இது அநீதி. நேரடியாகக் கேட்டுவிட வேண்டும். எப்படி இப்படி நிகழலாம்? அதைவிட இவர்களுக்குக் கருணையோடு புத்தி புகட்டவேண்டும், அவுன்ஸ் அவுன்ஸாய். செளந்தர் சின்னப்பையன்தானே பேசவேண்டும். தன் மோகனப் புன்னகை, வசீகரப் பேச்சில் விழாதவர் உண்டோ? வாசுதேவ் நேரம் பார்த்தார். பதனொன்று. இங்கே அரைமணி. அப்புறம் ஆபீஸ் பதினொன்றே முக்காலுக்கு மற்றொரு அப்பாயிண்மென்ட்.
எடிட்டர் அறையிலிருந்து தணிகாசலம் வெளியே வந்தார்.
"அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார். கூப்புடுவாரு."
சௌந்தர் புன்னகைத்தான். வாசுதேவ் இன்னும் கனிவாய். பிரச்னையே தணிகாசலத்தால்தான்.
சௌந்தர் புத்தகத்தோடு வந்தபோது, தணிகாசலம் புத்தகத்தை மேலும் கீழுமாய், உள்ளும் புறமுமாய், கிழிக்காத குறையாய்ப் பார்த்துவிட்டு, முதலில் 'ரொம்ப நல்லாயிருக்கு' என்று விட்டு, அப்புறம் சட்டம் பேசினார்.
"ரெண்டு காப்பி வேணும் சார், ரெவ்யூவுக்கு.''
"நார்மலா ஒரு புக்தான் தரது. ஹிந்துவுக்கெல்லாமே அப்படித்தான்" என்றான் சௌந்தர்.
"ஹிந்து அப்படி இருக்கலாம் சார். நம்ம பத்திரிகையில் ரெண்டுதான். ஒண்ணு ரெவியூவருக்கு. ஒண்ணு ஆபீஸ் காப்பி."
இதை ஒரு பெரிய செய்தியாய் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அப்போதைக்கு, "இத இப்ப வெச்சுக்கங்க சார். இதுலயே இன்னொரு காப்பி கொண்டு வரேன்" என்றான்.