

கி.பி. 1871 இல் ஆங்கிலேய இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளிலும் பஞ்சாப் மாகாணங்களிலும் நாடோடிக் கூட்டமாக இடம் விட்டு மாறி மாறி திருட்டு, கொள்ளை போன்ற செயல்களைப் பரம்பரையாக செய்து கொண்டிருந்த மக்களை அடக்குவதற்காக ஆங்கிலேயர்களால் குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதிலும் சுமார் 213 சாதிகளை குற்றப் பழங்குடியினர் பட்டியலில் பிரிட்டிஷ் அரசு இணைத்திருந்தது.
தமிழகத்தில் இந்த சட்டம் 1914 ம் ஆண்டு மே 4 ம் தேதி முதல் முறையாக மதுரையின் அருகிலுள்ள கீழ்க்குயில்குடி எனும் கிராமத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. இந்த கிராமம் மதுரை - தேனி நெடுஞ்சாலையில் இருக்கும் நாகமலை புதுக்கோட்டையிலிருந்து 3 கி. மீ தொலைவில் உள்ளது. மதுரையிலிருந்து சுமார் 12 கி. மீ தொலைவில் அமைந்துள்ள கீழக்குயில்குடி வரலாற்றுச் சிறப்புமிக்க சமணமலைக்கு பெயர் பெற்றது.
இச்சட்டத்தின் படி, 12 வயதிற்கு மேற்பட்ட குறிப்பிட்ட சாதி பிரிவு ஆண்கள் (இந்த பிரிவில் 79 சாதிகள் இருந்தன) தினமும் இரவானதும் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது தாலுகா அலுவலகத்தில் போய் தங்கிவிட வேண்டும்.
காலையில் கைரேகை அல்லது கையொப்பம் போட்டு வெளியே வர வேண்டும்.
இந்த சட்டம் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1949 ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காட எந்த வக்கீலும் முன் வரவில்லை.
இவ்வழக்கில் துணுச்சலாக தானாகவே வாதாட முன் வந்தார் ஜார்ஜ் ஜோசப் எனும் கேரளா வக்கீல். அவர் அப்போது மதுரையில் வக்கீல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் மகாத்மா காந்தியுடன் நல்ல நட்பில் இருந்தவர். பல தலித் உரிமைகளை சட்டத்தின் மூலமாக போராடி பெற்றுக் கொடுத்தவர்.
ஜார்ஜ் ஜோசப் கேரள மாநிலத்தின் செங்கனூரில் 1887 ம் ஆண்டு பிறந்தவர். லண்டனில் சட்டம் படித்தவர். 1909 ம் ஆண்டு இந்தியா வந்து 1918 ம் ஆண்டு மதுரையில் வக்கீல் தொழிலை செய்து வந்தார். தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், அகமுடையர் மட்டுமே அதிகமாக குற்றப் பரம்பரைச் சட்டப்படி கொடுமைப்படுத்தப்பட்டனர்.
பெருங்காமநல்லூர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள கிராமமாகும்.
இங்கு ஏப்ரல் 3, 1920-ல், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை 'குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு' (Criminal Tribes Act) எதிராகப் போராடிய, பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 பேர் (ஒரு பெண் உட்பட) காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பெருங்காமநல்லூரில் 16 பேரை சுட்டுக் கொன்ற பிரிட்டிஷ் காட்டுமிராண்டி அதிகாரிகளை நீதிமன்றங்களுக்கு இழுத்து வந்தவர் ஜோசப் மட்டும் தான். அந்த சட்டத்தை விரட்டியடிக்க பல்வேறு வழிகளில் வாதாடி வந்த நிலையில் 1938 ம் ஆண்டு காலமாகிவிட்டார்.
பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஏற்க இயலாது என்றும், அப்பகுதி மக்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கி நிவாரணம் தேடுங்கள் என்றும் பாராளுமன்றம் அறிவுறுத்தியதன் பேரில் கள்ளர் சமுதாய சீரமைப்புக்கென தனியே ஒரு துறையை உருவாக்கி, நலத் திட்டங்களைத் தொடங்க ஆங்கில அரசு வழிசெய்தது.
அதன் படி பெருங்காமநல்லூர் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இப்பகுதியில் தொடங்கப்பட்ட முதல் சீர்மரபினர் / கள்ளர் பள்ளியாகும்.
இது ஆங்கிலேயர் காலத்துக் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு 1920-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று திறக்கப்பட்டது.
கைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு, சிறைப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் குரல் கொடுத்து வந்தார். சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார். மக்களைப் போராட்டங்களத்திலும் ஒருங்கிணைத்தார். ஜோசப் என்ற பெயர் வாயில் நுழையாததால், மக்கள் அவரை ரோஜாப்பூ என்று அழைத்தனர். இன்றும் அவர் பெருங்காமநல்லூர் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறார். இன்று வரை குழந்தைகளுக்கு ரோஜாப்பூ துரை என்று பெயர் சூட்டும் வழக்கம் அம்மக்களிடம் இருந்து வருகிறது.
இந்த நிகழ்வில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக பெருங்காமநல்லூரில் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் 3 அன்று அங்குள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
கொடூரமான இந்த குற்றப் பரம்பரைச் சட்டம் முதலில் அமல்படுத்தப்பட்ட கிராமத்தில் அந்த கறையை போக்க நினைத்ததோ என்னவோ பிரிட்டிஷ் அரசு முதல் முறையாக இந்த கிராமத்தில் தான் தமிழகத்தின் முதல் பெண்கள் பள்ளியைத் தொடங்கியது.
ஆங்கிலேயர் காலத்தில், மதுரையில் துவங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி கீழக்குயில்குடியில் உள்ளது. 1924ல் இப்பள்ளி 'பிறந்தது'. இதுகுறித்த கல்வெட்டை இன்றும் அந்த பள்ளி தாங்கிக் கொண்டிருக்கிறது. அதனுடன் கைத்தொழிலாக கைத்தறி யூனிட் ஒன்றையும், ஒரு வங்கியையும் தொடங்கியது.