

உலகின் நம்பர் ஒன் மக்கட் தொகை கொண்ட நாடாக மாறிய பிறகு, நாம் சந்திக்கும் பொதுத் தேர்தல் இது. சட்டமன்றத் தேர்தல் என்பது நமது மாநிலத்தை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு யார் ஆள வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் ஒரு முக்கிய நிகழ்வு. அந்த அடிப்படையில் தான் தேர்தலைத் திருவிழா என்றே அழைக்கிறோம். உள்ளூர்க் கோயில் திருவிழா நேரத்தில் உற்றாரும், உறவினர்களும் கூடி உற்சாகம் பொங்க நேரத்தைக் கழிப்பதே திருவிழா ஆகும். அப்படியான ஒரு சூழ்நிலை நிலவ வேண்டும் என்பதற்காகவே தேர்தலைத் திருவிழா ஆக்கியுள்ளோம்.
ஆனால், இந்தத் திருவிழா போட்டியில் பங்கேற்கும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யப் போதுமான அவகாசம் அளிப்பதுதானே முறை?
ஏன் இந்த அவசரம்?
எட்டே நாட்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், அவற்றில் 4 நாட்கள் விடுமுறையில் கழிகின்றனவாம்.
மீதமுள்ள நான்கு நாட்களுக்குள் தான் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் நாமினேஷன் பேப்பர்களை உரிய அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம்.
வேலை நாட்களில் விடுமுறை அறிவிப்பதும், விடுமுறை நாட்களை வேலை நாட்களாக மாற்றுவதும் நமது நாட்டில் புதுமை இல்லையே! அதி முக்கியமான தேர்தல் நேரத்தில் மட்டும் அவற்றை மறந்து போவது எந்த விதத்தில் நியாயம்?
திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வர மட்டும் நீண்ட காலங்கள் எடுத்துக் கொள்ளுகின்ற அரசுகள், பாலங்களைப் பல வருடங்களாகக் கட்டி பயணம் செய்வோரையும், பாதசாரிகளையும் மாற்று வழியில் இழுத்துச் சுற்ற வைக்கும் அரசுகள், தேர்தலில் மட்டும் போதுமான நேரம் தருவதில் கறார் காட்டுவது எதனால்?
உண்மையில் இது அரசியல்வாதிகளுக்கு வைக்கும் செக் அல்ல.
ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்படும் சோதனை!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வாக்கு அளிப்பதோ ஏப்ரல் 23ல். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதோ மே4ல்! அதற்கு மட்டும் அவ்வளவு இடைவெளி ஏன் என்று கேட்டால், ஏதேதோ காரணங்களைச் சொல்வார்கள்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற மக்களாட்சித் தேர்தல் எந்தக் குறைக்கும் உட்படாமல் மிகச் சிறப்பாக நடந்தேற வேண்டும் என்று எண்ணுவதில் தவறேதும் இல்லையே!
இத்தோடு மட்டுமல்ல....
ஒவ்வொரு மெகா சீரியலின் எபிசோடு தொடக்கத்தில் பொறுப்புத் துறப்பு (Disclaimer) என்று ஒரு கார்டு வரும். அதனைப் படிக்க ஒரு 10 வினாடிகள் ஒதுக்கினால் கூடப் போதும்.
ஆனால் அதையும் சின்னத்திரை நமக்கு ஒதுக்குவதில்லை. நடிகர் வடிவேலு பெண் பார்க்கும் படலத்தில் ‘வாம்மா! மின்னல்!’என்பதைப் போல, முதல் வரியைப் படிக்கும் முன்னாலேயே அது மின்னலாக மறைந்து விடும்.
ஆனால் வருடக்கணக்கில் சீரியலைப் போட்டு ‘அறு அறு’ என்று அறுத்து எடுக்கிறார்கள். நாங்கள் படிக்க வேண்டுமென்று எதனையும் போட்டால், படிக்கப் போதுமான நேரம் கொடுங்கள். இல்லையென்றால் அது போடுவதையே நிறுத்தி விடுங்கள்.
அதனைப் போலவே, பல முக்கியமானவற்றை, நாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, நாம் படித்து அறிந்து கொள்ளப் போதுமான நேரம் ஒதுக்குவதில்லை.
விளம்பரங்களை மட்டும் நாம் ஒவ்வொருவரும் வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போட்டு வெறுப்பேற்றுகிறார்கள்!
அவசரம் காட்ட வேண்டியவற்றில் அவசரத்தையும், நிதானம் காட்ட தேவைப்படுபவற்றில் நிதானத்தையும் கடைப்பிடிப்பதல்லவா முறை!
இங்கு எல்லாமே ரிவர்ஸ் ஆகிப் போவதேன்?