

மனிதனின் சுயம் என்ன? சுயநலம் எங்கே தொடங்குகிறது? மொழி எப்படி உருவானது? தத்துவங்கள் எதற்காகப் பிறந்தன? என்ற பல ஆழமான கேள்விகளுக்கான விடைகளை, ஒரு தத்துவப் பேராசிரியரின் அநுபவப் பகிர்வுடன் மிக அழகாக விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
மனிதனுக்கு சுயம் முக்கியமா ? சுயநலம் முக்கியமா ?
சுயம் என்பது நலத்தை சார்ந்ததா? அல்லது நடத்தை சார்ந்ததா?
தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள் : தாயும், சேயும் வேறு!
உடலும், உள்ளமும் வேறு!!
சுயத்தை அறிவது என்பது: ஒரு உள் முக பயணம்; அது உடல் சார்ந்தது; உள்ளம் சார்ந்தது; மனம் சார்ந்தது; மார்க்கம் சார்ந்தது.
சுயத்தை தவிர்த்தல் என்பது: ஒரு தத்துவார்த்த புரிதல்; தனிமை அறிவது; உள்ளதை போற்றுவது; இல்லாததை ஏற்பது.
என்னிடம் ஒரு தத்துவ பேராசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் அரசு கல்லூரியில் 36 வருடங்கள் பணிபுரிந்து தத்துவயியல் பிரிவுக்கு தலைமை பொறுப்பேற்று ஓய்வு பெற்றவர்.
அவர் பல நிகழ்ச்சிகளில் உரையாற்றி இருக்கிறார். பல அறிவுசார் இயக்கங்களில் தன் பங்கை ஆற்றியிருக்கிறார். புத்தகங்கள் மற்றும் தத்துவ இயல் கோட்பாடுகளை அயலகத்து பல்கலைக்கழகங்களில் சமர்ப்பித்தும் இருக்கிறார்.
ஒருமுறை அவர் வகுப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் எழுந்து தன் சந்தேகத்தை கேள்விக் கணைகளாக பாய்ச்சினான்.
மொழி எப்படி உருவாகிறது?
மொழி என்பது வாழ்வியல் சார்ந்தது. அது இடம், பொருள், ஏவல் சார்ந்தது. நாம் இப்போது சிலாகித்துக் கொண்டிருக்கும் சங்கத்தமிழ் அந்த காலத்தில் இருந்த எல்லோராலும் பேசப்பட்டு இருக்கிறது.
இதற்கு உதாரணமாக நாம் ஆங்கிலம் பேசுபவர்களை கண்டு ஆச்சரியப் படுகிறோம் அல்லவா? அது போல; அமெரிக்காவில் உள்ள பிச்சைக்காரன் கூட அப்படித்தான் பேசுவான். ஏனென்றால் அது அவனுடைய இடம், பொருள், ஏவல் சார்ந்து அமைகிறது.
சங்க காலத்திற்கு முன் தமிழ் எப்படி இருந்தது என்கிற கேள்வியும் நீ கேட்டிருந்தால் உன்னுடைய கேள்வி ஆனது முழுமையாக இருந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன்; காரணம் எனக்கு ஒரு சந்தேகம் எப்பொழுதுமே உண்டு! தொல்காப்பியருக்கு இலக்கணம் கற்றுத் தந்தவர் யார்? அல்லது திருவள்ளுவருக்கு இலக்கியம் கற்றுத் தந்தவர் யார்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் தமிழில் மட்டுமல்ல எந்த மொழியிலும் அவரவர் இலக்கண, இலக்கியம் சார்ந்து எந்த ஒரு பதிலையும், யாராலும் கொடுக்க முடியாது!
அவ்வாறு அமைவதே மொழி சார்ந்த வரலாறு. நான் மேலே குறிப்பிட்டது போல சங்க காலத்தில் பேச்சு நடை செய்யுள் வடிவமாக இருந்திருக்கலாம். காரணம் அப்போது அச்சகம் கிடையாது. காகிதம் கிடையாது. ஆகவே அவர்கள் சுருங்கச் சொல்லி பெருக பெற்றனர்.
அவர்களுடைய ஆற்றல் முழுவதும் உழைப்பும், அது சார்ந்த வாழ்வுமாக இருந்தது. காரணம் போராட்டம் என்பது அவர்களுக்கு தினம், தினம் அமைந்த ஒரு எதார்த்தம். எனவே அவர்களுடைய எண்ணங்களை, சிந்தனைகளை ஏடுகளில் பதிந்து வைத்தனர். மேலும் அவற்றை காப்பாற்ற வேண்டியும் இருந்தது.
உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமானால் நாம் வங்கிக்கு சென்று வருடா வருடம் நம்முடைய சேமிப்பு வைப்புத் தொகையை புதுப்பித்தல் போன்றது. இல்லையென்றால் அது காலக்கெடு முடிந்து நமக்கு பலன் தராது. அப்போது அறிவும், சமயமும் தங்கள் நிலம் சார்ந்தும், வளம் சார்ந்தும் இருந்தது. பஞ்சபூதங்கள் போற்றப்பட்டன.
பேச்சுக்களை எழுத்துக்களாக கொண்டு வரும்போது அவற்றை கோடிட்டு நிறுத்தியும், சூனியமாக்கியும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி உருவாக்கினர்.
அவ்வாறு உருவானது அறிவியலும், ஆன்மீகமும். ஆக தத்துவம் என்பது மொழிக்கு அப்பாற்பட்ட உணர்வுகளில் சங்கமம். அது உணர்ச்சிகளுக்கு இடம் தராது.
இசையும், நடனம் உணர்ச்சிகளுக்கு சான்று. உணர்வுகளுக்கு சான்று மொழி மட்டுமே. அதில் ஆதி மொழி அந்தம் மொழி என்பது அவர்களுடைய கற்பனைக்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும்.
கற்பனை இல்லை என்றால் கலாச்சாரம் இல்லை. கலாச்சாரம் இல்லை என்றால் சமூகம் இல்லை. சமூகம் ஒழுங்காக கட்டமைக்க பட வேண்டும். இல்லை என்றால் அது அழிக்கப்படும். அதற்குக் காரணம் ஆசைகள்.
ஆசைகள் மூலம் குறுநில மன்னர்கள் ஆட்சிகளை நிறுவினர். அரசுகள் உண்டாகின. பிறகு மக்களுடைய ஆசைகள் அதிகமாகும் போது அதன் காரணமாக ஆட்சிகள் மாறின; பல காட்சிகள் உருவாகின.
உதாரணத்திற்கு நம் பைரவரை உதாரணமாகக் கொள்ளலாம். அது இயற்கையாக தன்னுடைய இருப்பை வரையறுத்துக் கொள்கிறது. அந்த இருப்பிடத்திற்குள் அவற்றின் இனத்தையே அது அனுமதிப்பதில்லை.
அதே மாதிரி தான் நம்முடைய மதங்களும் அந்தந்த நிலங்களுக்கு ஏற்ப, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப குழுக்களாக உருவாகி அதிலிருந்து தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் மூலம் வழி நடத்தப்பட்டு, அந்த வழிகாட்டுதலின் பேரில் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள் மதங்களாக மாறின.
அதன் உட்பிரிவுகள் பறந்து, விரிந்து இன்று ஒவ்வொரு மதத்திலும் கிளைகள் உருவாகி, பிரிந்து தனக்கென்று ஒரு தன்மையை உருவாக்கிக் கொண்டு தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
இதிலிருந்து நாம் விடுபட வேண்டிய அவசியம் இருப்பினும் நம்மால் விடுபட முடியவில்லை.
அதற்காகத்தான் இந்த உலகத்தில் தத்துவங்கள் பிறந்தது.
இந்த அளவிற்கு நாம் புரிந்து கொண்டால் நாம் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளலாம். என்னுடைய வாழ்வியல் பற்றிய சில செய்திகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டு இந்த சொற்பொழிவை முடித்துக் கொள்கிறேன்.
நாம் ஒவ்வொருவரும் தனியாகத்தான் தோன்றுகிறோம்!தனியாகத்தான் மறைக்கிறோம்! தனியாகத்தான் அறிவும் விடுதலையும் வரவேண்டும். நேரே அனுபவத்தால் நாமே அறிய வேண்டிய உண்மையை பிறரிடம் இருந்து கொடையாகவோ, கிரயமாகவோ, கடனாகவோ பெற்றுவிட முடியாது.
ஒவ்வொருவரும் தத்தம் வழியை தாமே வகுத்து தம் வாழ்க்கையை தாமாக நாடகமாய், விளையாட்டாய் நடத்தி அறிவு முதிர்ந்து தக்க பருவத்தில் பக்குவம் அடைந்து விடுதலை பெற வேண்டும்.
ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்ளலாம். ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளலாம் என்றாலும் தாயும், சேயும் ஒன்று ஆயினும் வாயும் வயிறும் வேறு தானே!!
உயிரும் அறிவும் வேறாக தோன்றுவது போல!!
அகந்தை அழிந்த பின்பும் மமதை ஆட்கொண்டு விடுகிறது.
ஆகவே தான் குருவே சரணம். அந்த குரு என்பது இயற்கையே!
நாம் ஒற்று கவனித்தால் தெரியும். அது ஒரு ஓடும் நதி; ஓடிக்கொண்டே இருக்கும்.
அதிலிருந்து தான் நாம் ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் என்பது உள்ளிருந்து வரவேண்டும். அதற்கு ஒரு நம்பிக்கை வர வேண்டும். அதன் மூலம் வழி காண வேண்டும்.
கனவை கூட ஒதுக்காமல் அந்நிய படுத்தாமல் பாரா முகமாய் இல்லாமல் பயனடைய வேண்டும்.
எல்லாவற்றையும் ஏற்பது ஞானம். எல்லா தத்துவங்களும் இவற்றில் தான் முடிகின்றன.