உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் ‘எழுத்துக்கு மரியாதை’ நிகழ்ச்சி கலைமாமணி ஏர்வாடி இராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது .
அமுதா பாலகிருஷ்ணன் எழுதிய ‘வாரங்கலுக்கு வாரீகளா’ என்ற நூலையும், பத்மினி பட்டாபிராமன் எழுதிய ‘கடல் கோழிகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி. ராஜேஸ்வரன் அவர்கள் வெளியிட்டார்.
எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மீனாட்சி ஆகியோர் முறையே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர் .
உரத்த சிந்தனை அமைப்பினால், பத்மினி பட்டாபிராமன் அவர்களுக்கு, ‘எழுத்துத் திலகம்’ விருதும், அமுதா பாலகிருஷ்னன் அவர்களுக்கு ‘எழுத்துச் செம்மல்’ விருதும் வழங்கப்பட்டன.
மீனாட்சி, அவர்கள், ‘கடல்கோழிகள்’ சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற கதைகளின் சிறப்பை, முடிவில் இருக்கும் திருப்பங்களை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிஞர் குமரிச் செழியன், உதயம் ராம், பாலசாண்டில்யன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
பத்மினி பட்டாபிராமன், தனது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.
கல்கி குழுமத்தின் நெடுநாள் எழுத்தாளரும் நலம் விரும்பியும் கல்கி ஆன்லைன் தளத்தின் கட்டுரைப் படைப்பாளர்களுள் மூத்தவருமான பத்மினிக்கு இவ்விருது கிடைத்ததால் கல்கி குழுமம் பெருமிதம் கொண்டு வாசகர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
இனி, புத்தகத்தைப் பற்றி…
எழுத்தாளர் பத்மினி பட்டாபிராமன் எழுதிய, ‘கடல் கோழிகள்’ என்ற இந்த சிறுகதைத் தொகுதிப்பில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான, மற்றும் பரிசும் பெற்ற 22 சிறுகதைகளும், வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை, கதை வடிவிலுமாக மொத்தம் 23 கதைகள் இடம் பெற்றுள்ளன.
பிரபல மேடை நாடக ஆசிரியர், எழுத்தாளர் திரு S L. நாணு அவர்கள் அணிந்துரை எழுதியிருக்கிறார். அவரது அணிந்துரையிலிருந்து சில பகுதிகள்:
“சுலபமாக நம்மையும் சம்பந்தப் படுத்திக்கொள்ளச் செய்யும் யதார்த்தமான சம்பவங்கள். சுற்றி வளைக்காத எளிமையான நடை. சில எதிர்பாராத ஆனால் மனதைத் தொடும் முடிவுகள். நடு நடுவே சில கலகல கதைகள்..
இந்தத் தொகுப்பில் பதிவாகியிருக்கும் கதைகளெல்லாம் பல பத்திரிகைகளில் பிரசுரமானவைதான்.
முதல் கதையே புத்தகத்தின் தலைப்புக் கதைதான். ‘கடல் கோழிகள்’ தலைப்பைப் பார்த்தவுடன் கடலில் ஏது கோழிகள்? ஒருவேளை ஒருவகை அசைவ உணவைப் பற்றின கதையோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனால், கதையைப் படித்தவுடன் அதில் இருந்த ஆச்சர்யம் ‘அட’ போட வைத்தது.
இந்தத் தொகுப்பில் பல கதைகள் நம்மிடையே நடக்கும் பல சம்பவங்களின் அடிப்படையில்தான் பின்னப் பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் ‘பணங்காட்டு நரிகள்’ ஆன்-லைன் பண மோசடி கும்பலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கரடுமுரடாக இல்லாமல் வழுக்கிக்கொண்டு போகும் நடை...
எங்கேயும் சலிப்பு ஏற்பாடாமல் பார்த்துக்கொண்ட சாதுர்யம்...
புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் எழுத்து…
பதிப்பு : குவிகம் பதிப்பகம்
விலை : 200/-