

உலக வரலாற்றில்
அலெக்சாண்டர் தி கிரேட்,
அக்பர் தி கிரேட்,
அசோகா த கிரேட்...
என்று சொல்லி பழகி விட்டோம் . . . .
இது என்ன ஆங்கில எழுத்துக்களில் வரும் முதல் எழுத்தின் பெருமையை சொல்லும் ஒரு சொல்லாடலா ?
இதை மேலோட்டமாக பார்க்காமல் அதில் உள்ள ஆண் ஆதிக்க சிந்தனையை கொஞ்சம் உற்று நோக்க வேண்டும்.
ஆண் என்பது ஆளுமைக்கும்; பெண் என்பது சக்திக்கும் ஆக நாம் வடிவமைத்து விட்டு அதற்கான விழுமியங்களை நம் கலாச்சாரத்தோடும், பண்பாடோடும் இணைத்து விட்டதன் விளைவு இன்று ஒரு சாபக்கேடாக மாறி இருக்கிறது .
ஏன் பெண்களுக்கு ஆளத் தெரியாதா?
பெண் என்பவள் குடும்பத்தை ஆளவும், ஆண் என்பவன் சமுதாயத்தை ஆளவும் படைக்கப்பட்டதாக கருதுகிறோம்.
ஆண்கள் போர்க்குணம் படைத்தவர்கள்; போராட வல்லவர்கள்; போராடி ஜெயிப்பவர்கள், ஆகவே நாட்டை ஆளத்தக்க வல்லமை படைத்தவர்கள் ....
எனவே தான் ஆண்களை சமூகத்தின் மேல் தளத்தில் வைத்து பல காலங்களாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி பெண்கள் கையாலாகாத இருப்பதற்கு யார் காரணம் ? என்பதை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரிய வரும்...
போராடுதல் என்பது பொறாமையின் வெளிப்பாடு..
பொறுமையற்ற சமூகம் பெருமைக்காக பொறுப்பற்றதாக மாறி அழிந்துவிடும்.
அப்படிப்பட்ட அழிந்த சமுதாயத்தை பற்றி வரலாறு நமக்கு போதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
எல்லா வல்லரசுகளும் ஒரு காலத்தில் வல்லமை இழந்து வாழ வழி இன்றி பிறகு மடிந்து தான் போயிருக்கிறது.
இந்த ஞானம் பிறக்க வேண்டும் என்றால் அது பெண்ணிலிருந்து தான் உருவாக வேண்டும்.
புராணங்களும் இதிகாசங்களும் நமக்கு போதித்தது போரை அல்ல. போரின் மூலம் விளையும் விளைவுகளை தான் நமக்கு போதனைகளாக சொல்லிப் போயின.
நாம் போதனைகளை சாதனைகளாக நினைத்து நம் வாழ்வில் செயல்படுத்தும் போது தான் இந்த பிரச்னைகள் மேலும் நம்முடைய சிந்தனையில் வேரூன்றி நம்மை சித்து பிடித்து ஆட்டுகிறது.
பெண்களிடம் "பொறுப்பும், பொறுமையும் கையாளும் திறனும்" இருக்கும்போது அதனுடைய விளிமியங்கள் நம் சமுதாயத்தை எப்பொழுதுமே செழுமைப்படுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறது.
தமிழர்களுக்கு 'சிலப்பதிகாரம்' போதும் - பெண்ணின் சிறப்பை இதைவிட மேம்பட்டு சொல்ல எந்த இலக்கியமும் தேவை இல்லை.
நாம் ஒன்றை கவனித்தே ஆக வேண்டும்!
நம்மைப் பொறுத்தவரை "நம் தாய், நம் சகோதரி, நம் குழந்தை என்று வரும்போது நமக்கு பொறுப்பு அதிகமாக இருப்பதாகவும், நாம் ஒரு சரியான பாதையில் செல்வதாகவும் நினைக்கிறோம்”.
அதையே புறம் கூறும்போது, “நம் வசை பாடுகள் பெண்களைப் பற்றி தான் இருக்கிறது”.
எந்த உள் காரணமும் இன்றி நாம் சொல்லும் ஒரு வார்த்தை தேவைக்கு மீறி ஒரு பெண்ணினுடைய குணத்தை சீரழித்து அதுவே ஒரு பொதுப் பயன்பாடாகவும் மாறுகிறது.
சட்டம் விதி எல்லாம் ஆண்களுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்களுக்கு வேறு மாதிரி ஆகவும் தான் இருக்கிறது.
இது சமுதாயத்தில் சாத்தியப்பட; நடைமுறையில் நாம் செயல்படுத்த; நம் முன்னோர்கள் நமக்கு கதைகளாகவும், கவிதைகளாகவும், ஓவியங்களாகவும் நமக்காக படைத்து அதன் மூலம் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை வளர்த்தெடுக்க பாடுபட்டு சென்று இருக்கிறார்கள் .
அந்த விடியலை நோக்கி நாம் பயணப்பட பெண்களிடையே 'அரசியல் புரிதல்' மேம்பட வேண்டும்.
அவர்களை அரசியல் படுத்தவேண்டும்.
'அரசியல் அநாகரிகம்' என்றால் என்ன என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் .
அது ஓட்டு உரிமையில் மூலம் நடக்கும் போது அவர்களுடைய பலம் அவர்களுக்கு தெரியும்.
நம் பெற்றோர்களே நமக்கு முதல் எதிரியாக இருக்கும்போது நாம் என்ன செய்ய?
குழந்தைகளை பாகுபாடு படுத்தாமல் பண்பாட்டை பட்டவர்த்தமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
மாற்றம் என்பது மதிப்பீடுகளில் இல்லை; மாறாக தொடர்ந்து போராடி அதைப் பெறுவதில் தான் இருக்கிறது.
இதில் அரசின் பங்கு, ஆசிரியர்களின் பங்கு, பெற்றோர்களின் பங்கு, சமுதாயத்தின் உடைய பங்கு என பல கூறுகளாக இருந்தாலும் எல்லாம் ஒன்று கூடி வரும்போது, இது எல்லாருக்குமான சமூகமாக மாறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஒன்றுபடுவோம்! செயல்படுவோம்!