

நான் கேரளாவில் பந்தலம்கற ஊர்ல இருந்தேன் (சபரிமலை ஐயப்பன் பிறந்த ஊர் ). பத்தனம்திட்டா மாவட்டத்துல 2018 ஜூன்ல இருந்து தொடர்ந்து 43 நாட்கள் தினசரி விடாம மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர் மழைன்னா நிஜமா சூரியனையே பார்க்க முடியாத மேக மூட்டத்துடன் தொடர் மழை. எதிர்கொள்வது ரொம்ப சிரமம்.
ஒரு நாள் திடீர்னு வேகமா காத்தும் அடிச்சுது , மழையும் பேய் மழை பெய்தது. சரி , இதுக்கு மேல இங்கே இருந்தா ஆபத்துனு தமிழ்நாடு கிளம்பிடலாம்னு பார்த்தா ரயில் எல்லாம் கேன்சல்.
பஸ் ரூட்ல வரலாம்னு பார்த்தா ரெகுலர் ரூட்டான கொச்சின், திருச்சூர், பாலக்காடு ரூட்டும், கருகச்சால் வழி தேனி, கம்பம் ரூட்டும் லாக்டு. மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து டிராஃபிக் ஜாம். கடைசியா ஒரே ரூட். ஒரே நம்பிக்கை. புனலூர் போய் தென்காசி வழியா எஸ்கேப் ஆகணும். அல்லது சுத்து வழியா இருந்தாலும் பரவாயில்லைனு திருவனந்தபுரம் போய் நாகர்கோவில் வழி ஈரோடு வரணும்.
ஆனா லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகிடுச்சு. கரண்ட் கட். சரி லாட்ஜ்ல தங்கிட்டு காலைல போகலாம்னு அடூர்ல ரூம் பார்த்தா 250 ரூபா மதிப்புள்ள ரூம் வாடகை 2000+ சொன்னாங்க. அதுக்கும் அடிதடி.
சரி, பந்தலத்துக்கு திரும்பி வந்து ரெகுலரா தங்கற லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கிட்டேன். காலைல 5 மணிக்கு கதவை தட்டும் சத்தம். வெளில வந்து பார்த்தா அந்த லாட்ஜ் வெளில ஃபுல்லா தண்ணி. நாங்க இருந்தது 3வது மாடி. 2-வது மாடி வரை தண்ணி. அரசு படகு வரும், ஹெலிகாப்டரும் வரும்னு அவனவன் அலறிட்டு இருக்கான்.
இது எப்படி நடந்ததுன்னா அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம, எல்லா டேம்களையும் நைட்டோட நைட்டா திறந்து விட்டதாலதான்.
முறைப்படி அரசு என்ன பண்ணி இருக்கனும்னா மேடான பகுதிகளான கொல்லம், திருவனந்தபுரம் பகுதிக்கு சிஃப்ட் ஆகிக்கோங்கனு அறிவிப்பு தந்து கால அவகாசம் தந்து பண்ணி இருக்கணும்.
இதை எல்லாம் அப்போ யோசிக்க டைம் இல்ல. எப்படி தப்பிக்க ?லாட்ஜ் மேனேஜர் கிட்டே 1000 ரூபா எக்ஸ்ட்ரா பணம் குடுத்து இதை வெச்சிருங்க, அவசரத்தேவைன்னா நான் மறுபடி வந்து வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டு என் பேண்ட், சர்ட் எல்லாம் கழட்டி பேக்ல வெச்சுக்கிட்டு, வெறும் டிராயரோட கைல பேக் எடுத்து தலை மேல வெச்சுட்டு தண்ணில குதிச்சி நீந்த ஆரம்பிச்சேன்.
அப்போதான் சின்ன வயசுல கிராமத்துல நான் வேணாம், வேணாம்னு சொல்லியும் கேட்காம எனக்கு வலுக்கட்டாயமா வாய்க்கால்ல நீச்சல் கத்துக்கொடுத்த அப்பாவுக்கு மனசுல நன்றி சொன்னேன்.
1 கிமீ நீச்சல் அடிச்சு மெயின் ரோட்டுக்கு வந்தேன். மெயின் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் தான். அங்கே வந்ததும் ஒருவர் பைக்கில் லிஃப்ட் கொடுத்தார். பஸ் நிற்கும் ஏரியா வரை லிஃப்ட் தந்து உதவினார். பஸ்ல ஏறி பேக்ல துண்டு எடுத்து துவட்டி பேண்ட், சர்ட் போட்டுக்கிட்டேன்.
திருவனந்தபுரம் வந்தேன். நெல்லை எக்ஸ்பிரஸ் செம கூட்டம், ஆளை விட்டாப்போதும்னு அதுல ஏறி ஊர் வந்து சேர்ந்தேன். எப்பவும் அரசு உதவி செய்யும்னு வெயிட் ப்ண்ணிட்டு இருக்கக்கூடாதுனு அன்னைக்கு கத்துக்கிட்டேன். அந்த வெள்ளப்போக்கில் நீச்சல் தெரியாம உயிர் இழந்தவங்க ஏகப்பட்ட பேர். அரசாங்கம் அறிவிச்சது கொஞ்சம் பேர் தான்.
இன்றும் கூட செங்கன்னூர் டூ கோட்டயம் வரை எம்சி ரோடு எனப்படும் மெயின் ரோட்டில் ஏகப்பட்ட பைக்குகள் கேட்பாரற்று நிற்பதைப்பார்க்கலாம். எல்லாம் அந்த வெள்ளப்போக்கில் அடித்து வந்தவையே! அதற்கு உரிமை கொண்டாட யாரும் வரலை. உரிமையாளர்கள் உயிருடன் இருந்தாதானே வருவாங்க?