
பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட பொருள் குறித்துப் பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சியினர் அமளி என்றும், சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளி நடப்பு என்றும், இப்போதெல்லாம் செய்திகள் பரபரக்கின்றன. இவற்றையைல்லாம் டிவிக்களில் பார்க்கும் போதும், வானொலியில் கேட்கும் போதும் எங்கள் காலநிகழ்ச்சிகள் மனத்திரையில் படமாக விரிகின்றன!
எங்களூரில் அப்போது தொடக்கப்பள்ளி மட்டுமே! 5 வது வகுப்பு வரைதான் உண்டு. ஆறாம் வகுப்பென்றால் பக்கத்து ஊர்களான இடும்பவனத்திற்கோ, இடையூருக்கோ, அல்லது தாலுகா தலைமையகமான திருத்துறைப்பூண்டிக்கோ செல்ல வேண்டும். முன்னிரண்டும் 4,5 கிலோ மீட்டர் தூரத்தில்தான். பின்னதோ 10 கி.மீ., தள்ளி!
ஊரின் ஆஸ்தான ஆசிரியர் என்றால், அது பெரியசாமி வாத்தியார்தான்! அவர் போஸ்ட் மாஸ்டராகவும் இருந்தார். ஊராருக்கு வரும் பெரும்பாலான கடிதங்களைப் படித்துக் காட்டுவதும், பதிலெழுதுவதும் அவராகவே இருந்த காலம் அது! எங்கள் அண்ணன்கள் தொடங்கி, கடைக்குட்டியான எனக்கு வரை விஜயதசமி அன்று தாம்பாளத்தில் பரப்பிய நெல் மீது ‘அ’ ‘ஆ’எழுத வைத்தது அவர்தான்! அவரும், ஹெட் மாஸ்டர் வெங்கட்ராமனும், நாயுடு வாத்தியாரும் இன்றளவும் எண்ணத்தில் வலம் வருபவர்கள்.
தினமும் காலை மணி 9.30 க்குத் தொடங்கி மாலை 4.30 மணிவரை வகுப்புகள் நடந்ததாக ஞாபகம். சனிக் கிழமைகளில் மட்டும் அரை நேரம் மட்டுமே! காலையில் 11.30 மணிக்கு, அதாவது வகுப்பு இடைவேளைக்குப் (அதை ஒண்ணுக்கு விட்டாச்சா? என்று கேட்பதே அப்போதைய வழக்கம். ஏனெனில் மணி அடித்ததும் மாணவர்கள் வெளியில் வந்து திருக்குளக் கரையில் வரிசையாக யூரின் போவர்! அப்போதெல்லாம் கழிவறை குறித்த பேச்சு கூட இருந்ததில்லை!) பிறகு சங்கம் களை கட்டும். சற்றே விசாலமான வகுப்பில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் கூடிடுவோம்.
அவ்வார சங்கக் கூட்டத்திற்குத் தலைவராக ஒரு மாணவரை முன்மொழிய, மற்றொருவர் அதை வழிமொழிந்திடுவார்! தலைவரின் தலைமையில் சங்கக் கூட்டம் ஆரம்பிக்கும். மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள், முந்தைய வாரமே அறிவிக்கப்பட்ட தலைப்பில் பேசுவர். கட்டாயமாகப் பேச வேண்டும் என்பதெல்லாம் இல்லை. ஆனால் மேடைப்பேச்சு அனுபவம் அவசியம் என்று கருதி, அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் சில மாணவ மாணவிகளைத் தேர்ந்தெடுத்துப் பேசச் சொல்வதும் உண்டு. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஐந்தாறு பேராவது பேசுவதுபோல் பார்த்துக் கொள்வதுண்டு. கொடுக்கப்பட்ட தலைப்பு குறித்துப் பேச வேண்டும். எதனையும் பார்த்துப் பேசக் கூடாது. அன்றைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அக் கூட்டத்தை நடத்திச் செல்ல, அவ்வாண்டிற்கான சங்கச் செயலர், அடுத்த சங்கக் கூட்டத்தில் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அறிவிப்பார்!
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்!’ என்பதற்கிணங்க, சிலர் மிக நன்றாகவே பேசுவார்கள். ஒரு சிலர் மனப்பாடம் செய்ததை மறந்து, தடுமாறுவார்கள். துணிச்சல் மிக்க சிலர், விதியை மீறி, எழுதிக்கொண்டு வந்ததைப் பார்த்தே படிப்பார்கள். அப்படிப் படிப்பது முறையல்ல என்பதை விளக்கும் விதமாக, கூட்டத்தில் உள்ளவர்கள் கைகளைத் தட்டி அவர்கள் பேச இடையூறு விளைவிப்பார்கள். ஓ! அந்த நாட்கள் எல்லாம் எவ்வளவு இனிமையானவை! ஒரு வழியாகச் சங்கக் கூட்டம் முடிவடைந்ததும், அமைச்சரவை கேள்வி-பதில் நேரம் ஆரம்பிக்கும்.
அப்பொழுதெல்லாம் பெரும்பாலும் சூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் ஆரம்பித்து விடும். ஆரம்பித்த சில நாட்களிலேயே அவ்வாண்டுக்கான மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் மந்திரி, சுகாதார மந்திரி மற்றும் தோட்ட மந்திரி என்று மூன்று பேர் உண்டு. முதல் மந்திரி ‘ஓவர் ஆல்’ நிர்வாகத்தைக் கவனிக்க, சுகாதார மந்திரி பள்ளி வகுப்புகள் மற்றும் சுற்றுப்புறச் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ’ ப’வடிவான எங்கள் பள்ளியின் நடுவே சிறு தோட்டம் இருந்தது. எதிரேயே திருக்குளம் இருந்ததாலும், அது எப்போதும் வற்றாது என்பதாலும், எங்களுக்குத் தண்ணீர் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. மாலை நேரங்களில், பூச்செடிகள் மற்றும் சிறு காய்கறிச் செடிகளை வைத்து வளர்ப்பதுண்டு, எனவே அதற்கென தனி மந்திரி.
அதோ! மந்திரி சபைக் கூட்டம்! சற்று காது கொடுத்துக் கேட்போமா?
“கடந்த செவ்வாய்க் கிழமை மதியத்தில் மூன்றாம் வகுப்பில் அதிகக் குப்பை கிடந்தது! அதைச் சுகாதார மந்திரி ஏன் கவனிக்கவில்லை?” - கேட்டது ஒரு மாணவர்!
சுகாதார மந்திரி: ”அன்று நான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை!”
மீண்டும் கேள்வி கேட்டவர்: ”சுகாதார மந்திரி இல்லாத நேரத்தில் முதல்மந்திரி அதைக் கவனித்திருக்க வேண்டும். ஏன் அவர் குப்பையை அகற்றவில்லை?”
முதல் மந்திரி: ”சுகாதார அமைச்சர் விடுப்பில் சென்றது எனக்கு தாமதமாகத்தான் தெரியும். தெரிந்தவுடன் நான் பொறுப்பையேற்று அந்தக் குப்பையை அகற்றி விட்டேன். இருந்தாலும் தாமதம் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். இனி அவ்வாறு ஏற்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்."
ஒரு மாணவி: ”நாம் கடந்த வாரம் நட்ட மிளகாய் கன்றுகள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில், ஒன்றிரண்டை ஏதோ பூச்சி தாக்கியுள்ளது. தோட்ட மந்திரி அதைக் கவனித்தாரா என்றே தெரியவில்லை.”
தோட்ட அமைச்சர்: ”கவனிக்காமல் என்ன? காலையில்தான் கவனித்தேன். இன்றிரவுதான் பக்கத்து வீட்டு அங்கிளிடம் அது குறித்துப் பேச இருக்கிறேன்.”
அந்தக் காலத்துத் துவக்கப் பள்ளிகளே எவ்வளவு விஷயங்களைக் கற்றுக் கொடுக்க முயன்றிருக்கின்றன பார்த்தீர்களா?
எந்தக்காலம் என்கிறீர்களா? பெரியசாமி வாத்தியார் இசைக்கான மதிப்பெண் வழங்குவதற்காகப் பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல, நான் ‘இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா? இன்னும் எத்தனை நாளம்மா!’ என்ற பாடலைப் பாடியது இன்னும் நன்றாக ஞாபகத்தில் உள்ளது.
அது ‘பாலும் பழமும்’ என்ற திரைப்படப் பாடல். அந்தப்படம் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 அன்று வெளியாகியதாம்!