மனவசியம் (Mesmerism) : இதுவும் ஒரு மருத்துவமா?

Mesmerism history
Mesmerism historyImage credit: AI image
Published on
Kalki
Kalki

வழக்கத்திற்கு மாறாக ஒரு விஷயத்தை நம்பும் போது, ’என்ன உங்களை மெஸ்மரைஸ் பண்ணிட்டாங்களா?' என்று கேட்பது சாதாரண வழக்குப் பேச்சாக ஆகியிருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் மெஸ்மரிஸம் உருவான விஷயத்தை நாம் அறிவோமா (Mesmerism history)?

மெஸ்மரிஸத்தின் ஆதி கர்த்தா, ஜெர்மானியரான ஃப்ரெடெரிக் ஆண்டன் மெஸ்மர் என்பவர் ஆவார். ரைன் நதி உருவாகும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள வெய்ல் என்ற இடத்தில் 1733ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி மெஸ்மர் பிறந்தார்.

வியன்னாவில் அவர் மருத்துவம் பயின்று டாக்டர் ஆனார். அந்தக் காலத்தில் மருத்துவத்தில் மிகவும் சிறந்து விளங்கி பிரபலமாக இருந்த வான் ஸ்வைடன் மற்றும் டீ ஹேயன் ஆகியோரிடம் அவர் நல்ல பயிற்சியைப் பெற்றார்.

இயல்பாகவே எதையும் தன்னார்வத்துடன் ஆராயும் திறமை கொண்டவர் என்பதால் அவர் வழக்கமாகச் சொல்லப்படும் முறைகளைக் கையாளவில்லை. ஆகவே அவரை அனைவரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் அவர் சிறிதும் கவலைப்படவில்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றும் 4 Psychology தந்திரங்கள்! 
Mesmerism history

முதலில் ஜோதிடத்தின் மீது தன் ஆர்வத்தைச் செலுத்திய அவர், பின்னால் இப்போது நாம் கையாளும் வார்த்தையான மெஸ்மரிஸத்தைக் கண்டுபிடித்தார். 1760ம் ஆண்டு அவர் இதை நடைமுறைப்படுத்தினார்.

மனிதனுக்குள் ஒரு காந்தவியல் இருக்கிறது; அதுவே பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது என்பது அவரது கொள்கை.

இந்த மனித காந்தவியலால் தீராத வியாதிகளைத் தீர்க்கலாம் என்று அவர் நம்பினார். தன்னிடம் சிகிச்சை பெற வந்த பலரிடம் தன் புது சிகிச்சை முறையை அவர் செய்ய ஆரம்பித்தார்.

என்ன ஆச்சரியம்! தீராத வியாதிகள் தீர்ந்தன.

இதை ஒருவர் மற்றொருவருக்குச் சொல்ல அவரிடம் நோயாளிகளின் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்க ஆரம்பித்தது.

“ஒரே ஒரு ஆரோக்கியம் தான் இருக்கிறது; ஒரு வியாதி தான் இருக்கிறது அதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் இருக்கிறது” என்று அவர் கூறினார். (There is but one health, one disease and one remedy.)

ஏராளமானோர் சிகிச்சை பெற வர ஆரம்பிக்கவே அவர் ஒவ்வொருவரிடமும் காந்த சக்தியை உபயோகிப்பது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது.

உடனே மாஸ் மாக்னெடைஸேஷன் (mass magnetisation) என்று கூட்டமாக வருவோர் அனைவருக்குமான சிகிச்சை முறையை அவர் ஆரம்பித்தார்.

முதலில் ஒரு தொட்டியில் காந்த சக்தியை உருவாக்கி சிகிச்சை பெற வருவோரை அந்தத் தொட்டியைத் தொடுமாறு கூறினார். வியாதியஸ்தர்களின் உடல் குறைகள் நீங்கின.

வியாதிகள் தீர்ந்தன!

ஆனால் இதுவும் போதுமானதாக இல்லை – அவ்வளவு கூட்டம்!

ஒரு பெரிய மரத்தை தினமும் காந்த சக்தி நிரம்பிய மரமாக ஆக்கினார்.ஏராளமான விழுதுகள் மரத்தின் கிளைகலிருந்து தொங்க விடப்பட்டன.

சிகிச்சை பெற விரும்புவோர் மரத்தைச் சுற்றி நின்று ஒவ்வொரு விழுதையும் கொஞ்ச நேரம் தொட்டுக் கொண்டிருப்பார். காந்த சக்தி அவருள் நிரம்பியவுடன் அவரது நோய் நீங்கும்.

ஆயிரக்கணக்கானோர் இந்த சிகிச்சை முறையால் நலம் பெறவே அவரது புகழ் வானளவு உயர்ந்தது. இந்தப் புகழைப் பெறாத இதர மருத்துவர்கள் அவரை இகழ்ந்ததோடு பலமாக எதிர்த்தனர்.

இதன் விளைவாக அவர் வியன்னாவை விட்டே வெளியேற நேர்ந்தது. அவர் நேராக பாரிஸுக்குச் சென்றார். அங்கு பிரெஞ்சு அரசாங்கம் அவரைத் தொடர்பு கொண்டு அவரது சிகிச்சை முறையின் ரகசியத்தை ஒரு விலை கொடுத்து வாங்க முன் வந்தது. ஆனால் பேரம் சரியாகப் படியவில்லை.

ஆனால் தனி நபர்கள் இந்த ரகசியத்தை விலை கொடுத்து வாங்க முன்வந்தனர்.

தலைக்கு நூறு லூயிஸ் (பிரெஞ்சு நாணயம்) என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. ஏராளமானோர் பணத்துடன் மெஸ்மரிடம் அதை வாங்க வரிசையாக வந்தனர். இந்த ரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என்ற உறுதி மொழி வாங்கப்பட்டது. ஆனால் நாளடைவில் இது அனைவருக்கும் பரவி விட்டது.

இதையும் படியுங்கள்:
Dark Psychology: மத்தவங்கள எப்படி கட்டுப்படுத்துறது தெரியுமா?
Mesmerism history

இரகசியத்தில் சொல்லப்பட்ட விஷயம் இது தான்; இந்த பிரபஞ்சமே காந்த சக்தியால் நிரம்பியுள்ளது. அதை கிரகிக்கலாம், சேமித்து வைத்துக் கொள்ளலாம், அடுத்தவருக்கும் செலுத்தலாம். ஏராளமானோர் மெஸ்மருக்குச் சீடர்களாக ஆனார்கள். அவர்கள் மெஸ்மரிஸம் என்ற புது வார்த்தையை உலகெங்கும் பரப்பினர். அவரது வாழ்க்கை முழுவதும் ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றன.

அது ஒரு தனி வரலாறு!

1815ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது சீடர்கள் அவர் புகழைப் பரப்பலாயினர். இன்று மெஸ்மரிஸம் உலகம் அறிந்த ஒரு சொல்லாக ஆகி விட்டது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com