

அன்று ஒரு தனியார் மருத்துவ மனையில் பிரசவித்த குழந்தையை பார்க்க சென்றேன். நல்ல சிவப்பாக, சரியான எடையுடன் இருந்தது. கை கால்களை உதைத்துக் கொண்டு அழுதது. குழந்தையை சுத்தமான டவல் கொண்டு துடைத்து விட்டு தலை முதல் கால் வரை பரிசோதித்தேன்.
இதயத்தில் அதிகப்படியான ஒலி ஸ்டெதஸ்கோப் வழியாக கேட்டது. மற்ற எந்த குறையும் இல்லை. சரி மீண்டும் ஒரு வாரம் கழித்து குழந்தையை முழுமையாக பரிசோதித்து பிறகு ECHO ஸ்கேன் எடுத்து பார்த்துதான் உறுதிப்படுத்தணும் என்று எண்ணிக் கொண்டு கேஸ் ஷீட்டில் எழுதி விட்டு, பெற்றோர்களிடம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு வாரம் கழித்து மீண்டும் ஒரு முறை பார்க்கிறேன் என்று மட்டும் சொல்லி விட்டு வந்தேன்.
அன்று மாலை 7 மணி இருக்கும். நான் வழக்கம் போல கிளினிக்கில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தேன். காலையில் பார்த்த குழந்தையின் தந்தையும், அவரது அம்மாவும் (குழந்தைக்கு பாட்டி ) என்னைப் பார்க்க வந்தார்கள்.
“என்ன ஆச்சு?” என்றேன்
“சார் காலையில நீங்க குழந்தை நல்லா இருக்குண்ணு சொன்னீங்களே!”
“ஆமாம்”
“ஆனா ட்யூட்டி டாக்டர் வந்தார். கேஸ் ஷீட்டை படித்துப் பார்த்து விட்டு குழந்தைக்கு இதயத்துல ஏதோ பிரச்னை இருக்குன்னு நீங்க எழுதியிருப்பதாகவும், அதனால இதய ஸ்கேன் எடுக்கணும்னு சொல்றார் சார்.”
“உடனே அதற்கு 3 ஆயிரம் பணம் கட்டுங்கன்னும் சொன்னார் “ என்றார் அந்த பாட்டி.
“நீங்க ஏன் எங்க கிட்ட எதுவுமே சொல்லல? குழந்தைக்கு என்ன இதயக் கோளாறு? எங்க கிட்ட ஏன் மறைச்சீங்க?” அவர் குரல் உயர்ந்தது. மிகுந்த கோபத்துடன் இருந்தனர் என் மீது.
நான் அவர்கள் இருவரையும் 'கொஞ்சம் அமைதியாக நான் சொல்வதைக் கேளுங்கள்' என்று கேட்டுக் கொண்டேன்.
பிறகு பேச ஆரம்பித்தேன், “சார், உங்ககிட்ட மறைக்க எதுவுமில்ல; குழந்தையின் இதய துடிப்பு நார்மலா இருக்கு. ஆனா அதிகப் படியா ஒரு ஒலி அதை 'murmur' என்று சொல்வோம் இருக்கு. ஆனா குழந்தை பிறந்த உடனே ரத்த ஓட்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த நேரத்தில் சில அதிகப் படியான ஒலிகள் கேட்கலாம். ஆனா சில நாட்களில் தானவே அந்த ஒலி மறைந்து விடும். சிலருக்கு மட்டும் தொடர்ந்து இருக்கும். அப்படி தொடர்ந்து சத்தம் கேட்டால் எக்கோ ஸ்கேன் செய்து உறுதிப் படுத்துவோம்.”
“உறுதிப் படுத்தாமல் உங்களை சங்கடப் படுத்த வேண்டாம் என்று தான் ஒரு வாரம் கழித்து மீண்டும் குழந்தையை பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னேன்“ என்று விளக்கி, ஒரு வழியா அவர்களின் பதட்டத்தை குறைத்து சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் குழந்தையை வரவழைத்து பரிசோதித்ததில் இதயத் துடிப்பு சீராகவும், அதிகப் படியான ஒலி (murmur) ஏதும் இல்லை. அவர்களிடம் உறுதியாக சொன்னேன் 'உங்கள் குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை' என்று.
ஆனால் அவர்கள் திருப்தி அடையவில்லை.
“சார், எதுக்கும் ஒரு எக்கோ ஸ்கேன் பண்ணிடலாம்,” என்றார் தந்தை.
'அதுவும் சரி தான். எக்கோ பரிசோதனை செய்வதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்று கூறி இதய சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி எக்கோ எடுத்ததில் குழந்தையின் இதயம் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.