-ரிஷபன்
இந்த வாரம் ரிசப்ஷனில் டியூட்டி. வருகிற ஃபோன் அழைப்புகளுக்குப் பதில் சொல்லி... தேவையான விவரம் தந்து... குறிப்பிட்ட நபர்களை அழைப்பதில்... சுகுணா பரபரப்புடன் இருந்தாள்.
எப்படியும் பொழுதுபோகும். இடையே சந்தியாவுக்கும் ஃபோன் பண்ணலாம். அவளிடம் பேசுவதில் ஒரு வசதி இருக்கிறது. சுகுணாவைப் பற்றிய 'எல்லா' விவரங்களும் தெரிந்தவள். லைன் கிடைத்துவிட்டது.
"ம்... நீ எப்படி... பிஸியா?"
"ஆஸ் யூஸுவல்... பிரகாஷ் வந்திருக்கா?''
''வந்திருக்கான். இப்ப இல்லே, ஸ்டோர் ரூம் போயிருப்பான்."
"நேத்தே கேட்கணும்னு நினைச்சேன். உன்னோட மேரேஜ். புரபோஸல் என்னாச்சு? உன் ஜாதகத்தை யாரோ வாங்கிட்டுப் போனாங்களே..."
கேட்கக் கூடாது என்று நினைத்த கேள்வி. கேட்கப்பட்டு விட்டது.
"ம்..."
''புரியல்லே.'
"எனக்கேத்த ராஜகுமாரன் இன்னும் வரலே" என்றாள் லேசாய், வலுக்கட்டாயமாய்ச் சிரித்து.
அந்த நிமிஷம்தான் அவன் உள்ளே வந்தான். எவரிடம் விசாரிப்பது என்று யோசிக்காமல் தீர்க்கமாய் இவளையே பார்த்துக்கொண்டு அருகில் நெருங்கினான்.
''ஒரு நிமிஷம்... சந்தியா... யெஸ்... பிளீஸ்..."
"மிஸ். சுகுணா..."
தன்னைத்தான் தேடி வந்திருக்கிறான்.
"என்ன வேணும்? நான்தான்."
"ஸாரி. நீங்க வேற ஏதோ பேசும்போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனா."
"நத்திங். ஹாய் சந்தியா நான் அப்புறம் காண்டாக்ட் பண்றேன்...'' என்றபடி ரிஸீவரைக் கீழே வைத்தாள்.
"சொல்லுங்க..."
"கோமளா என்னோட ரிலேட்டிவ். அவங்கதான் உங்களைப் பார்க்கச் சொல்லி என்னை அனுப்பினாங்க.''
முகம் மாறாமல் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள், மனசுக்குள் 'சுத்த போர் வந்த விஷயத்தைச் சீக்கிரம் சொல்லேன்...' என்ற நினைப்புடன்.
''ஒரு ஆப்ளிகேஷன்... எங்க வீட்டுல ஒரு ஃபங்ஷன். என்னோட ஃபாதர் நாட் வெல். இடது கை, இடது கால்.. பராலிசிஸ். பட்.. இந்த ஃபங்ஷன் அட்டெண்ட் பண்ணணும். ஒரு வீல் சேர்... ஜஸ்ட் ஃபார் டூ டேய்ஸ் கிடைச்சா..."
சுகுணாவின் முகம் லேசாக மாறியது.
"நீங்க நினைச்சா ஹெல்ப் பண்ணலாம்..." என்றான் அவசரமாய்.
வெளிநபர்களுக்குத் தருவதில்லை. முழுக்க முழுக்க ஆஸ்பிடல் உபயோகத்திற்குத்தான் என்று சொல்ல நினைத்தவள் எப்படிச் சொல்லலாம் என்று யோசித்தாள் .
அவனே மீண்டும் கெஞ்சுகிற தோரணையில் பேசினான்.
"கோமளாதான் சொல்லச் சொன்னாங்க. எப்படியும் இந்த ஹெல்ப் வேணும்னு.'
"லெட் மி டிரை..." என்றாள் அரைமனதாக.
அவன் பிரகாசமானான்.
"நிச்சயம் கிடைக்கும். உங்க சக்தி உங்களுக்கே தெரியாது..." என்றான் புகழ்ச்சியாக.
சீஃப் உள்ளேதான் இருக்கிறார். இவளிடம் பிரியம் உண்டு. இந்த இடம் தாண்டிப் போகும்போது கண்ணில் சிரிப்பு தெரியும். இவள் அப்பா உடம்பு சரியில்லாமல் போனபோது, மிகக் குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்தவர்.
உள்ளே போனபோது, "யெஸ் என்ன வேணும்? அவ்வளவுதானே, ஸ்டோர்ல சொல்லிட்டு எடுத்துக்க. நீயே பத்திரமா. ரிடர்ன் பண்ணிடு, ஓக்கே...!'' என்றார் சீஃப்.
நிமிஷமாய் வேலை முடிந்துவிட்டது.
வெளியே வரும்போது உள்ளூர உற்சாகமாய் இருந்தாள்.
அவனும் யூகித்திருக்க வேண்டும்.
"தேங்க் யூ..." என்றான் இவள் பேசுமுன்.
"நான் என்ன சொல்லுவேன்னு."
"ஐ நோ. உங்களால் முடியும்னு. தேங்க் யூ. தேங்க் யூ வெரி மச்."
“எப்ப வேணும்..."
"பதினாலு, பதினஞ்சு இரண்டு நாளும். நானே வரேன். ஆட்டோல வச்சுக் கொண்டு போயிட்டு, மறுபடி பத்திரமா ரிடர்ன் பண்ணிடறேன்."
மறுபடி ஒருமுறை பெரியதாய் நன்றிப் புன்னகை பூத்து விட்டுப் போனான். சந்தியாவுக்கு மீண்டும் டயல் செய்தாள்.
"சந்தியா..."
"என்ன... உங்க ஆள் போயாச்சா..."
"ச்சீய். அது ஒரு ஆப்ளிகேஷன்..."
''சீரியஸா சொல்லு. என்ன பிரச்னை?. ஏன் டிராப் ஆச்சு? உன்னோட மேரேஜ் செட்டிலாயிரும்னுல நினைச்சோம்."
சுகுணா லேசாய்க் கசிந்தாள். பக்கத்தில் எவருமில்லை. கண்ணில் பளபளப்பு. நீர் ததும்பி, கீழே விழாமல் ஜாலம் காட்டியது. எதிர்ப்புற பூ ஜாடி கலங்கித் தெரிந்தது.
'பொண்ணு போட்டோவும் அனுப்பினோம், ஹாஸ்பிடல்ல வொர்க் பண்றான்னு சொல்லி. என்னமோ தெரியலே. வேற வரன் பாருன்னு பதில் போட்டுட்டான்... அவனை மீறி எதுவும் பண்ண முடியாது.'
போன மாதம் ஒரு நாள் வீட்டுக்கு வந்தபோது சொன்னார். அவர் மூலம்தான் ஜாதகமும் ஃபோட்டோவும் அனுப்பியது. அவர்தான் இப்படி ஒரு வரன் இருப்பதாகத் தகவல் சொன்னது.
'நிச்சயம் இந்த வரனை நானே முடிச்சுத்தரேன். பையன் மட்டும் யெஸ்னு சொல்லிட்டாப் போதும். வேற எதைப் பத்தியும் நீங்க கவலைப்பட வேணாம்...' என்று நிறைய உற்சாகப்படுத்தி விட்டுப் போனார், ஜாதகம் வாங்கிப் போனபோது.
ஏன் இந்த மனிதர்கள் சுலபமாய் நிராகரிக்கிறார்கள். 'பிடிக்கவில்லை' என்று சொல்ல எது ஆதாரம். அழகா, உடம்பா, பணமா? எதை வைத்து நிர்ணயிக்கிறார்கள்? ஒருத்தனுக்காய் வளர்பவளை இன்னொருத்தன் கட்ட முடியாது என்று மழுப்பல்கள். அப்படியெனில் எனக்கான கணவன் எங்கே?
"ஹாய்... என்ன ஸைலண்ட் ஆயிட்டே?" - சந்தியா இரைந்தாள் மறுமுனையில்.
"ப்ச்..."
"போவுது விடு. இந்த அப்பன் இல்லேன்னா...இன்னொரு குப்பன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க."
"இவர் சுப்பன் இல்லே. சுரேஷ்!" என்றாள் சுகுணா சிரிப்புடன்.
"ஹோ... பேரெல்லாம் ஞாபகம் வச்சிருக்கே..."
"வேற வழியில்லாம... எப்படி யெல்லாம் ஹோப் கொடுத்து.... பையன் வீட்டுலேர்ந்து பேட்ச் பேச்சா மூணு தடவை என்னைப் பார்க்க வந்து..."
"சுரேஷும் வந்தானா?"
"ம்ஹூம். அவர் பாம்பேல வேலையாம். இவங்க பார்த்து ஓகே சொன்னாதான் அவர் வருவாராம்."
"சர்தான் யார், விட்டுத் தள்ளு..." அப்புறம் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தாள்.
'எனக்கே மனசுக்குக் கஷ்டமா இருந்தது. ஒரு ரீஸனும் சொல்லாம ஏன் வேணாம்னு சொல்றாங்கன்னு... பொண்ணு போட்டோ பார்த்தா நல்ல மாதிரி தெரியல்லேன்னு கமெண்ட் அடிச்சானாம். ராஸ்கல். போறான் விடு. மனுஷா குணம் போட்டோலயா தெரியும்.'
ஏதோ ஒரு அஜாக்கிரதையில் உளறி விட்டுப் போனார் இரு குடும்பங்களுக்கும் இடையே தூது போனவர்.
அழத் தோன்றியது. அழவில்லை.
பின்குறிப்பு:-
கல்கி 10 ஜூலை 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்