

-ரிஷபன்
காய்கறிக் கூடையைக் கீழே வைத்தான். பால் பாக்கெட் மேலாக இருந்தது. மூன்று மாடிகள் படியேறியதில் மூச்சு வாங்கியது.
"ஸ்ஸ்... ஹப்பாடா... சாந்தி... எனக்கு அரை வாய் காப்பி வேணும்..." கிச்சனைப் பார்த்துக் கூவினான்.
வைதேஹி பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டாள்.
ரோஸ் நிற டவல். முகம் இளமையாய். சாந்தியைவிட நான்கு வயது சின்னவள். சகலத்திலும் புலப்படுகிற இளமை
"என்ன... அதுக்குள்ளே குளியல்..."
"சமயபுரம் போகணும்னு சொன்னேனே..." என்றாள். துண்டை உதறினாள்.
மேலே ஒரு துளி பட்டுத் தெறித்தது.
"பவுடர் இங்கே இருக்கு."
நைஸில் டப்பாவை நீட்டினான். சாந்தி அதே நேரம் காப்பி தம்ளருடன் வந்து நின்றாள்.
''உன் லிஸ்ட்படி எல்லாம் வாங்கியாச்சு."
''இலை வாங்கினீங்களா...''
"ப்ச்... மறந்துட்டேன்."
"அவ தட்டுல சாப்பிட மாட்டா. ரொம்ப சுத்தம் பார்க்கிறவ."
வைதேஹி குறுக்கிட்டாள்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. இங்கேதான் இலை கிடைக்கிறது. இலைல சாப்பிட்டா அது ஒரு டேஸ்ட்."
"நான் போறேன் . மறுபடி..."
"வேணாம். விடுங்க மனோகர்."
மறுபடி படியிறங்கி அரை கி.மீ. தூரம் போக வேண்டும். வைதேஹியே 'வேண்டாம்' என்கிறாள். விட்டு விடலாமா... அல்லது... அவளே ஆசைப்பட்டு...
தீர்மானித்தான்.
"நோ பிராப்ளம். போயிட்டு வரேன்."
சாந்தி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டுப் போன மாதிரி தோன்றியது.