

-சிவசூர்யா
மலர்விழியின் இருபத்தேழாவது வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்கிற யோசனையே அவள் பெற்றோர்களுக்குத் தோன்றிற்று. அதுவரை அவர்கள் அதுகுறித்து அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. எவரேனும் விசாரித்தால்கூட, "பாத்துட்டுதான் இருக்கோம். வேளை வரணும்! எல்லாத்துக்கும் மேல 'பிராப்தம்னு' ஒண்ணு இருக்கே?" என்பார்கள் கூசாமல்.
மலர்விழியின் இருபத்தேழாவது பிறந்த நாளன்று பாலாஜியிடம் இருந்து ஒரு பூங்கொத்து வந்திருந்தது. பாலாஜி அவளுடன் ஒன்றாக அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். அவள் பிறந்த தேதியை பயோடேட்டாவில் இருந்து சேகரம் செய்திருக்க வேண்டும். அவளுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேயென முன்னறிவிப்பின்றி வாழ்த்து அனுப்பி இருந்தான்.
அந்தப் பூங்கொத்து மலர்விழியின் வீட்டில் பூகம்பம் கிளம்பிற்று.
"என்னடியிது புது வழக்கம்?"
"எதைச் சொல்றம்மா?"
''பூங்கொத்து வந்திருக்குது உனக்கு. இதுவரை இப்படி யாரும் அனுப்பினதில்லையே?" யாரு அனுப்பினது?"
"பாலாஜி!"
"பாலாஜியா? யாருடி அந்தக் கடங்காரன்?"
"கடங்காரன்தான்! மாசக் கடைசில அவசரமா காசு வேணும்னு அல்லாடுவியே, அப்போ நமக்குக் காசு தந்துதவுற கடங்காரன். கூட வேலை செய்றாரு."
அம்மா ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவள் கலவரமடைந்திருக்கிறாள் என்பதை முகம் காட்டிக் கொடுத்தது. அம்மா மனதுக்குள் தன்னையும், பாலாஜியையும் இணைத்து யோசிக்கிறாள் என்பதை மலர்விழியால் உணர முடிந்தது. 'விவரம் சொல்லலாமா. பாலாஜி யார்? எப்படிப்பட்டவர் என விவரிக்கலாமா' யோசித்தாள். 'வேண்டாம். எதற்குச் சொல்ல வேண்டும்? அம்மா யோசிக்கட்டும். யோசித்துக் குழம்பட்டும். மகள் தப்பு வழி போய் விடுவாளோ என்று கலங்கட்டும். அப்போதாவது தன் திருமணம் குறித்த எண்ணங்கள் தோன்றுகிறதா பார்க்கலாம்' என்றெண்ணி, பேசாதிருந்து விட்டாள்.
அவள் நினைத்தது வீண் போகவில்லை.
அடுத்த வாரமே அவள் ஜாதகக்கட்டு தூசி தட்டி எடுக்கப்பட்டது. கல்யாணமானால், அவள் சம்பளம் வீட்டிற்குக் கிடைக்காதே என்கிற கவலையையும் மீறி கல்யாண ஏற்பாடுகளில் தீவிரம் ஆயினர் அவள் பெற்றோர் .
மலர்விழியின் திருமணத்திற்கு அவள் அலுவலகத்தில் இருந்து அனைவரும் தவறாது வந்திருந்தார்கள். அம்மாவுக்கு அவர்களை அறிமுகம் செய்வித்தாள், மலர்விழி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்த, அறிமுகப்படுத்த அம்மா வணக்கம் வைத்துக்கொண்டே வந்தாள்.
"இவரு பாலாஜி எங்க ஆபீஸ் அக்கவுன்டன்ட்."
அம்மா நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்து போனாள். முன் தலை நரைத்த முப்பத்தெட்டு வயது ஆசாமியாய் பாலாஜியை அவள் கற்பனை செய்திருக்கவில்லை.
அம்மாவின் முகத்தைப் பார்க்கப் பாவமாய் இருந்தது மலர்விழிக்கு 'அம்மாவைத் தான் நோகப் பண்ணி விட்டோமோ' என்று ஒரு உறுத்தல் உண்டாயிற்று.
ஒரு வியாழக்கிழமையின் பிற்பகல் நேரம். அம்மா வந்தாள், மலர்விழியின் அலுவலகத்துக்கு
"என்னம்மா இது? இங்கல்லாம் வர மாட்டியே? எதுனாச்சும் முக்கியமான விஷயமா...
"ஆமா."
"சொல்லு."
"வந்து... உங்கப்பாகூட வந்திருக்கார்."
"வெளிய நிக்கறார்!"
"உள்ளே வரவேண்டியதுதானே. எதுக்கு நிக்கணும் வெளில."
"நீ தப்பா நினைச்சுக்குவேன்னுதான்... அது வந்து அவசரமா ஒரு இருநாறு ரூபா தேவைப்படுது. நாளைக்கு ஒரு கல்யாணம் இருக்கு. கண்டிப்பா போகணும். உங்கப்பாவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். வீட்டு விசேஷம். போகாட்டி கௌரதையா இருக்காதுன்னு நினைக்கறார்."
கல்யாணமாகிப் போய்விட்ட மகளிடம் காசுக்காகக் கையேந்துவது மட்டும் கௌரவமாக்கும் என்று நினைத்துக்கொண்டாள் மலர்விழி,
"மாசக் கடைசில வந்து கேக்கறியேம்மா! எங்கிட்ட காசு இல்லே!"
"சம்பளப் பணத்தை என்ன பண்றே
"என் மாமனார்ட்ட கொடுத்துருவேன். என்னோட பஸ் சார்ஜ். அப்புறம் வேற செலவுகளுக்குன்னு மொத்தமா ஒரு தொகையை என்கிட்ட தந்துருவாரு."
"அதுல ஏதும் மிச்சமில்லையா!
"மாசக் கடைசில ஏதும்மா?"
"என்ன பண்றது...? ம்...? ஆபீஸ்ல யார்ட்டயாவது கை மாத்தா வாங்கிக் கொடேன்."
"அது நல்லாருக்காதும்மா."
"பாலாஜின்னு சொன்னியே... கூட வேலை செய்றவருன்னு. உங்கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தாரே. உன் பிறந்த நாளுக்குப் பூங்கொத்து அனுப்பிச்சிருந்தாரே! அவர்கிட்ட கேளேன். கல்யாண வீட்ல அவரைப் பார்க்கும்போதே தோணுச்சி, நல்ல மாதிரின்னு."
மலர்விழி அம்மாவை உற்றுப் பார்த்தாள், எரிச்சலை மீறி, சிரிப்பு வரவே செய்தது அவளுக்கு.
-கல்கி 23.08.1998