

-சிவசூர்யா
மலர்விழியின் இருபத்தேழாவது வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்கிற யோசனையே அவள் பெற்றோர்களுக்குத் தோன்றிற்று. அதுவரை அவர்கள் அதுகுறித்து அதிகம் அலட்டிக்கொண்டதில்லை. எவரேனும் விசாரித்தால்கூட, "பாத்துட்டுதான் இருக்கோம். வேளை வரணும்! எல்லாத்துக்கும் மேல 'பிராப்தம்னு' ஒண்ணு இருக்கே?" என்பார்கள் கூசாமல்.
மலர்விழியின் இருபத்தேழாவது பிறந்த நாளன்று பாலாஜியிடம் இருந்து ஒரு பூங்கொத்து வந்திருந்தது. பாலாஜி அவளுடன் ஒன்றாக அலுவலகத்தில் வேலை பார்ப்பவன். அவள் பிறந்த தேதியை பயோடேட்டாவில் இருந்து சேகரம் செய்திருக்க வேண்டும். அவளுக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேயென முன்னறிவிப்பின்றி வாழ்த்து அனுப்பி இருந்தான்.
அந்தப் பூங்கொத்து மலர்விழியின் வீட்டில் பூகம்பம் கிளம்பிற்று.
"என்னடியிது புது வழக்கம்?"
"எதைச் சொல்றம்மா?"
''பூங்கொத்து வந்திருக்குது உனக்கு. இதுவரை இப்படி யாரும் அனுப்பினதில்லையே?" யாரு அனுப்பினது?"
"பாலாஜி!"
"பாலாஜியா? யாருடி அந்தக் கடங்காரன்?"