சிறுகதை - நுகத்தடி மாடுகள்!

ஓவியம்: மாயா

 
ஓவியம்: மாயா  

-ரிஷபன்

ன்ன சுலபமாய் ஆண்களுக்குக் கோபம் வருகிறது. மனைவி என்றால் இளப்பமா? சீறினால் எதிர்க்காமல் கேட்டுக்கொள்ள...?

கை தன் போக்கில் அரிசி களைய, என் எதிரே விசு முகம் சிவந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

எல்லாம் என்னால்தானாம். மாதம் பாதி ஓடுவதற்குள் முதல் தேதி சம்பளம் முழுவதுமாய்க் கரைந்து... யாரிடம் உதவி கேட்பது என்று அலைய வேண்டியிருக்கிறதாம்.

பேசாதே. நீ நினைத்தால் செய்யலாம்.

அத்தனை கோபத்திலும் சிரிப்பு வருகிறது. என்னால் என்ன முடியும் என்று நினைக்கிறாய் என் புருஷனே? மாதத் தேவைகள் நீ அறிவாய். கைப் பணம் அளவும் தெரியும். இடைவெளியை ஈடுகட்ட ஒருவேளை கஞ்சி குடித்தால் மட்டுமே சாத்தியம். முடியுமா?

தொட்டுக் கொள்ளப் புடலங்காய் கூட்டா. எதுவும் பொரிக்கவில்லையா? வறுக்கவில்லையா? நாக்கு நீளத்தில் அடுப்பில் இலுப்பச்சட்டி ஏற்றப்பட்டுக் கடைசி சொட்டு எண்ணெய்யும் ஊற்றப்படுகிறது. இத்தோடு ஒன்றே முக்கால் லிட்டரும் காலி.

மாத ஆரம்பத்தில் நிரப்பப்பட்ட டப்பாக்களும், சம்படங்களும், எண்ணெய்த் தூக்குகளும், விஸ்தாரமாய்க் கடலை மாவுக் கனவுகளைத் தருகின்றன. சாப்பிட்ட ஜோர் மறந்து நடுவிலேயே புகைச்சல்.

இதையும் படியுங்கள்:
சுவைக்க சுவைக்க திகட்டாத தேங்காய்ப் பால் ரசம் வீட்டிலேயே செய்வது எப்படி?
ஓவியம்: மாயா

 

"என்னால் இனிமே தாக்குப் பிடிக்கமுடியாது. பைத்தியமே பிடிச்சுரும்போல இருக்கு..."

சண்டை வேண்டாம். உக்கிரம் வேண்டாம். வா.. கை குலுக்கு. என்ன வழி ஆராயலாம்.. குறைந்தபட்சம் உன் மன இறுக்கம் தளர்த்துகிறேன். உன் பலம் புலப்படும். வெளியில் பணம் பல ரூபத்தில் காத்திருக்கிறது. சம்பாதித்து வரலாம்.

மாட்டார்! எப்போதும் சண்டைதான். எல்லாம் என்னால்தான். குழந்தை வழக்கம் போல மிரண்டு பார்க்கிறது. பின்னொரு சமயம் விமர்சனம் வெளிப்படும்.

'அப்பா ரொம்ப மோசம்... '

மழலைக்குச் சிரித்தால் இவருக்கு ரோஷம் வரும்.

'இல்லைடி கண்ணே. அப்பா முரடு இல்லை... பாவம்... பணம் இல்லாத கஷ்டம்தான்!' என்கிற நீள வசனம் ஷாம்லியிடம் மட்டுமே பேச முடியும். புஷ்பாவிடம் முடியாது.

அவள் என்னைப்போல. இரண்டு வயசில் சத்தத்துக்கு அதிர்கிறவள். எதுவானாலும் அடிக்குரல் போதும். இரைச்சல் எதற்கு என்ற விவேகம்.

சூடாகக் காப்பி தம்ளரை நீட்டினேன்.

அதற்கும் சீறிப் பாய்ந்தார்.

"என்ன, குடிச்சுட்டு தெம்பா கத்தச் சொல்றியா...?'

"இல்லே தம்ளரைத் தரச் சொல்றேன்...

நகைச்சுவை புரியாத மனுஷன் இல்லை. நண்பர்கள் மனைவியோடு வந்தால் சட்டென்று முகம் மாறும். தோரணை மாறும். நிமிஷத்துக்கு ஒரு சிரிப்பு. ஒரு அறுவை. ஆகுமோ... எப்படித்தான் சாத்தியம்

எல்லா மனைவிகளுக்கும் இது விஷயத்தில் ஒரே மாதிரி மனக் குறைதான் போலிருக்கிறது.

நாராயணன் மனைவி ஒரு தடவை வாய் விட்டே சொல்லிவிட்டாள்.

'இங்கே இப்படி ஜோக் அடிக்கிறார். வீட்டுல சிரிப்பே வராது.'

ஹால் ஒரு நிமிடம் பொலிவிழந்தது. நாராயணன் கவனம் என்னைவிட்டு விலகி, தன் மனைவியைப் பரிதாபமாய்ப் பார்க்க வைத்தது.

"போன மாசங் கூட ஐந்நூறு ரூபாய் கடன் வாங்க வேண்டியதாப் போச்சு. ஞாபகம் இருக்கா?"'

கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? வேண்டுமானால் கல்யாணத்தைத் தவிர்த்திருக்கலாம். இனி எதுவும் செய்ய இயலாது. புஷ்பா பிரத்தியட்ச சாட்சி - ஐந்து வருஷ தாம்பத்தியத்துக்கு. அவளைக்கூட முடிந்தவரை தள்ளிப் போட்டோம்.

கல்யாணமான புதிதில்,  விசுவிடம் கண் பளிச்சிடும் அழகை இருட்டிலும் ரசிக்கமுடியும். உதடு விரியாமல் ஓரச் சிரிப்பை 'ஒன்ஸ்மோர்' கேட்கத் தோன்றும்.

எல்லாம் குறைந்த காலத்துக்குள் காணாமல் போயின. சிடுசிடுவென்ற சுபாவம் இத்தனை நாட்களாக மறைத்து வைத்ததாய் இருக்க வேண்டும். எல்லாம் புது மனைவி என்ற ஜோருக்காக.

புஷ்பா வெளியில் ஓடிப்போனது. என்னால்தான் முடியவில்லை... அது இவரை நிராகரிக்கிற மாதிரி... முதுகில் குத்தின மாதிரி படும். இன்னும் அலறுவார். வேண்டாம்.

ஆனால் இந்த நிமிஷம் அவருக்குத் தனிமை வேண்டும். அமைதி வேண்டும். நிதானம் வந்தால் பிரச்னை புரியும். தீர்வும் புரியும்.

இதையும் படியுங்கள்:
ஆழ்கடல் அருவியை பார்த்ததுண்டா? அப்போ நீங்க இங்க கண்டிப்பா போகணும்!
ஓவியம்: மாயா

 

ன் அண்ணனைப்போல அவ்வளவு கஷ்டப்பட்டவனும் அல்ல. நான் மூன்றாவது தங்கை. மூன்று பேரைக் கரையேற்றின புண்ணியவான். என்றாவது சகோதரிகள் மூவரும் ஒன்று சேரும்போது அவன் தலைதான் விடிய விடிய உருளும்.

'இவனை யார் அவசரப்பட்டுக் கல்யாணம் பண்ணித் தரச் சொன்னது...'

'நாம எவ்வளவு நிம்மதியா இருந்தோம்...'

'இஷ்டப்பட்டா சமைச்சு... இல்லேன்னா... ஹோட்டல்ல வாங்கி...'

'ச்சே... ஒரு மூணு முடிச்சு... என்னமா திசை திருப்பிடுச்சு... நுகத்தடி மாடுகளா...'

என் கணவனுக்கு ஒரே தங்கை. அதுவும் காதல் கல்யாணம். காதலித்த பையன் கையில் கரண்டி பிடிக்கிறவன்.

அந்தத் தொழிலோடு நாம் தொடர்பு படுத்தாத வசீகரம். புன்சிரிப்பு. டிப்டாப்பாக டிரஸ் செய்துகொண்டு வந்தால் 'எந்த கம்பெனி டெபுடி மேனேஜர்' என்று கேட்கலாம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில்... பின்னிருக்கும் சமையற்கட்டில், சற்றே அழுக்கு வேட்டியில் பார்த்தும் பிரமிக்கலாம்.

என்ன தொழிலானால் என்ன.. நேர்மை, கை சுத்தம் - பொய் இல்லை. கட்டினவளைக் கைவிடும் உத்தேசம் இல்லை.

'கடைசி வரைக் காப்பாற்றுவேன்...' பிளாட் வாங்கியாச்சு. இப்போது காண்டிராக்ட் எடுத்து, கல்யாண வேலைகளில் கணிசமாய்ப் பணம் நிற்கிறது.

இவர் தங்கைக்கும் படிப்பு வரவில்லை. பள்ளி இறுதி வகுப்பு வரை ஏதோ ஒரு உந்து சக்தி உதவியது. சமையல் காதலனுக்கு இவள் படிப்பு அனாவசியம். நேசம் மட்டுமே கொட்டை எழுத்துக்களில், 'வா' என்றான் இரு கரம் நீட்டி.

யார் யாரோ சமாதானம் செய்தார்கள். பின்னால் வம்பு பேசினார்கள். சிக்கனமாய், எந்த உறவுக்காரனையும் கூப்பிடாமல் கல்யாணம் செய்தார்கள் 'ஓடிப்போனா நமக்குத்தான் அவமானம்..'

'மாப்பிள்ளை என்ன பண்றார்?'

'பிசினஸ். கை நிறைய பணம்.'

சுலபமாய் பதில் சொல்ல முடிகிறது,  அதிகம் பழகாத மனிதர்களிடம்.

இவருக்கு மட்டும் இன்னும் வீம்பு விடவில்லை. சொன்ன வார்த்தை.. 'உன் வீட்டு வாசப்படி மிதிக்க மாட்டேன்... போடி! இந்தக் கல்யாணம் நீயா தேடிக்கிட்டது... நாளைக்குக் கண்ணைக் கசக்கிக்கிட்டு இந்த வாசப்படி ஏறு அப்புறம் பார்க்கலாம்!' இத்யாதி மிரட்டல்கள்.

வர் வார்த்தை காப்பாற்றப்பட்டது. தனிக்குடித்தனம் வந்து விட்டோம் நாங்கள். தங்கை 'இவர்' வீட்டு வாசப்படி இன்னும் ஏறவில்லை.

அவள் கல்யாணச் செலவுகூட இவருக்கு இல்லை. என்ன.. சுபாவத்தில் கொஞ்சம் செலவாளி. கையில் காசிருந்தால் போதும். செலவழித்துவிட்டு மறு காரியம். இருட்டில் நான் 'ரதி'யாவேன். பர்ஸ் காலி என்றால் வேதாளம் முருங்கை மரம் ஏறும். ''பெண்டாட்டியா நீ... உன்னாலதான் எல்லா கஷ்டமும்...' இப்போதும் அதைத்தான் சொல்லி விட்டுத் தடதடவென்று வெளியே போகிறார். இனி இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு வீட்டில் அமைதி. அன்னிய தேசங்களுக்குக் கடன் உதவி கேட்டு வீட்டின் பிரதமர் பயணம். செய்தித் தாள் தலைப்பாய் மனசுக்குள் விரிந்தது. வெகு நேரம் கழித்துத்தான் திரும்பினார்.

இதையும் படியுங்கள்:
நயாகரா நீர்வீழ்ச்சியை வற்ற வைத்ததன் காரணம் தெரியுமா?
ஓவியம்: மாயா

 

கையில் ஒரு பை நிறைய பழங்கள்.

லேசாக என்னுள்ளும் கோபம் வந்தது. கடன் வாங்கிய பணத்தில்.. இது என்ன டாம்பீகம்..

"இந்தா பிடி... புஷ்பாக்குக் கொடு...”

வாங்கி அனிச்சையாய்க் கட்டிலில் வைத்தேன்.

ஷர்ட்டைக் கழற்றி ஹேங்கரில் மாட்டினார் .

"நல்லாத்தான் இருக்கு வீடு.. எல்லா பர்னிச்சரும் இருக்கு ... ஃப்ரிட்ஜ் கூட இப்போ வாங்கியாச்சு..."

'யாரென்று' கேட்பேன் என்று நினைத்திருக்க வேண்டும். நான் கேட்கவில்லை."...

அவதான் மூஞ்சியைப் பார்த்தே புரிஞ்சுண்டு பையில திணிச்சுட்டா.. பொல பொலன்னு கண்ணுல தண்ணி.. பாசம் போகுமா?"

லேசாக ஏதோ புரிந்தது.

"மாப்பிள்ளையும் ரொம்ப தங்கம்.. அடிக்கடி வாங்கோ. இவ முகத்துல இப்பத்தான் சிரிப்பையே பார்க்கறேன்னார். நீங்கன்னா ரொம்ப உசுராமே இவளுக்கு... தெனம் ஏதாவது ஒரு கதை சொல்லிண்டே இருப்பான்னார்..."

ஏதோ பொட்டலத்தைக் கொடுத்தார்.

"பச்சைக் கற்பூரம்.. கல்யாணத்துல கிடைக்குமாம். என்ன வாசனை பாரு.." என்றார் குழந்தை போல உள்ளங்கை முகர்ந்து.

எனக்குள் வார்த்தைகள் மறந்தன.

''.. இந்தா.. செலவுக்கு வச்சுக்கோ...''

இரண்டு நூறு ரூபாய்த் தாள்கள். பச்சைக் கற்பூர வாசனையுடன். மூன்றாவது தாளை ஞாபகமாய்த் தன் பர்சில் வைத்துக்கொண்டார்.

எனக்கு ஏனோ அழத் தோன்றியது.

பின்குறிப்பு:-

கல்கி 07   மார்ச் 1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியி ருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com