- வேலு இராஜகோபால்
கவலைப்பட நிறைய விஷயங்கள் இருந்தன. அதனால் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்துகொண்டிருக்கும் லேசான வயிற்றுவலியை அவ்வளவாக கண்டு கொள்ள வில்லை. இரண்டு நாட்களாக முன்பிருந்ததைவிட வலி அதிகமாக இருந்தது. இதுவரை மனைவியிடம் சொல்ல வில்லை. ரொம்பப் பெரியதாக எதுவும் இருக்காது. ஆனால், டாக்டரிடம் போகாமல் தீராது என்று அவருக்குத் தோன்றியது.
டாக்டரையும் மருத்துவமனையையும் நினைத்தாலே மனம் கலங்கியது. கடந்துவந்த துயரத்தின் அடி இன்னும் வலியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. வயது எழுபத்தி ஐந்தாகிவிட்டது. ஒரு வேளை அவருக்கும் ஏதாவது பெரிய பிரச்னை இருந்தால்? பயம் மனதில் புகைபோல் எழுந்து மூச்சை அடைப்பது போலிருந்தது. மீண்டும் துயரக் கடலில் மூழ்க வேண்டியிருக்கும். தனக்கு வந்தால், நோய்வருத்தம் மனதிற்கு மட்டுமல்ல உடலுக்கும் ஏற்படும். அதைத் தாங்கும் வயதா இது? அவருடைய தலைப்பிள்ளை பாலு நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் இறந்துவிட்டான். அதிர்ச்சியில் உறைந்துபோனார். கொஞ்ச நாட்கள் எதைப்பற்றி யோசிப்பது என்றே அவருக்குப் புரியவில்லை. அவன் அடிக்கடி நினைவில் வந்து குடும்பத்தினர் அனைவரையும் கலங்க வைத்துக்கொண்டிருந்தான்.
இதற்கிடையில் புதிதாக இந்த வயிற்று வலி. உருளைக் கிழங்கு சாப்பிட்டதால் இருக்குமோ? நிறைய உறைப்பு சாப்பிட்டதால் இருக்குமோ? காலையில் பால் குடித்ததால் இருக்குமோ? என்று தினமும் என்னென்ன சாப்பிட்டோம், அது எப்படியெல்லாம் வயிற்றைக் கலக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் ஒன்றும் பிடிபடவில்லை. காலையில் எழுந்து காஃபி குடித்துவிட்டு வீட்டு வராண்டாவில் இருந்த கட்டிலில் உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது. இன்றைக்கு வலி மிகவும் அதிகமாக இருந்தது. அடிக்கடி பாத்ரூம் போய்வந்தார். மத்தியான சாப்பிட்டு முடித்ததும், மலத்துடன் ரத்தம் வடிவதை கவனித்தார். மூலம் வந்திருக்கலாம். ஆனால், இன்னொரு பக்கம் வயிற்றுவலிக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று முதல் முறையாக அவருக்குத் தோன்றியது. டாக்டரிடம் போகாமல் தீராதோ?
அவர் மனைவி கோமளாவிடம் சொன்னார். அன்று மாலையில் பக்கத்தில் இருந்த டாக்டர் செல்லப்பன் கிளினிக் போனபோது பெரும் கூட்டம். முக்கால் மணிநேரத்துக்குப் பின்னால், அவர் வந்திருந்ததை அறிந்த டாக்டர் அவர்களை அழைத்தார். பாலுவையும் அவரிடம்தான் முதலில் காட்டினார்கள். ஸ்கேன் எடுத்துப் பார்க்க அவர்தான் சிபாரிசு செய்தார். பின்னால் அடையாறு இன்ஸ்டிடியூட்டிலும் அவருக்குத் தெரிந்தவர் மூலம் சிபாரிசு செய்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்னால் மகனைப் புற்று நோய்க்குப் பறிகொடுத்ததன் விளைவுகள் இன்னும் ஒவ்வொரு நொடியும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றங்களையும் துயரங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருந்தன. அப்பாவைச் சிறுவயதில் இழந்த இரண்டு பேத்திகளை நினைத்தாலே அவருக்கு நெஞ்சை அடைக்கும். பாவம் சின்னஞ் சிறுசுகள். தாத்தா பாட்டியுடன் பேத்திகள் மிகவும் பாசமாக இருந்தனர். ஆனாலும் தந்தையின் அருகாமைக்கு ஈடாகுமா?
பேத்திகள் வந்துவிட்டால் கந்தசாமிக்குக் கொண்டாட்டம். சிறுமிகளாக இருக்கும் அவர்களிடம் விரல்களை மடித்துவைத்துக் கொண்டு மேஜிக் காட்டுவார், அவருக்குக் கணிதம் பிடிக்கும். குழந்தைகளுக்கு எளிதாக கணிதம் சொல்லிக் கொடுப்பார். செஸ் விளையாடச் சொல்லிக் கொடுத்தார். ஒகனேக்கல், மேட்டூர், ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என்று நிறைய இடங்களுக்கு பாலு காரில் பிள்ளைகளுடன் அவரையும் கோமளாவையும் கூட்டிச் சென்றிருக்கிறான்.
இப்போதெல்லாம் பிள்ளைகள் வந்தால் முன்பிருந்த உற்சாகம் இல்லை. குதூகலம் இல்லை. அமைதியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு பழகியவர்கள் யார் வந்தாலும் கோமளா பாலுவின் பேச்செடுத்ததும் அழத் தொடங்கிவிடுவாள். அது குழந்தைகளை மிகவும் பாதித்தது. ‘பாட்டி ஏன் சும்மா சும்மா அதையே சொல்லிச் சொல்லி அழுதுக்கிட்டுருக்காங்க?’ என்று மூத்த பேத்தி கேட்பாள்.
சுரத்துக் குறைந்துவிட்டாலும், தன் துயரை மறந்து பிள்ளைகளின் துயரத்தை மறக்க வைக்க அவர்களிடம் எதையாவது பேசிக்கொண்டிருப்பார். அவர்களுடைய கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் சொல்ல முயற்சி செய்வார். இரண்டு பேத்திகளையும் இங்கேயே வைத்துக்கொள்ளலாம் என்று ஆசைதான். ஆனால் பெங்களூரில் வசதியான பள்ளியில் படித்த பிள்ளைகள். ஒரு வருஷம் இங்கிருக்கிற ஸ்கூலில் படித்தார்கள். ஒத்துவரவில்லை. பிள்ளைகளுக்குத் துணையாக இருக்க முடியவில்லையே என்ற ஏக்கம் கந்தசாமிக்கும் கோமளாவுக்கும் இருந்தது. இப்போது சென்னையில் படிக்கிறார்கள். அவ்வப்போது சென்னையில் போய் அவரும் கோமளாவும் கொஞ்ச நாள்கள் இருந்தார்கள். ஆனால் வீட்டை ஊரில் வைத்துக் கொண்டு அங்கேயே தங்க முடியுமா? சொந்தக்காரர்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஊரில் செட்டில் ஆனது. மருமகளுக்கும் அவர்கள் உடன் இருப்பது கஷ்டமாக இருக்கக் கூடும். அவளால் சொல்ல முடியாமல் இருக்கலாம். இரண்டு பேர் என்றாலும் வேலைகள் அதற்குத் தகுந்தாற்போல் அதிகமாகும். அதனால், பிள்ளைகள் அவ்வப்போது லீவில் வந்து ஊரில் தங்கியிருப்பார்கள்.
பாலு பெங்களூரில் இருக்கும்போது அடிக்கடி காரில் வந்துவிடுவான். இரண்டரை லட்சம் சம்பாதித்தான். அதுகூட அவருடைய கணக்குத்தான். அவன் ஒருபோதும் சொன்னதில்லை. எல்லோரையும் கூட்டிக்கொண்டு ஏதாவதொரு இடத்துக்குப் பிக்னிக் போவான். இப்போது இந்த இடத்தை விட்டுப் போகத் தோன்றவில்லை. எல்லாவற்றிலும் அவனுடைய நிழல். அவளுக்கு எவ்வளவு ரூபாய் வருகிறது என்று மருமகளிடம் கேட்க முடியவில்லை. அவளும் சொல்லவில்லை. அவ்வளவு பெரிய தொகை வராது என்பது மட்டும் புரிந்தது.
கடவுள் ஏன் இப்படிச் செய்தான்? கொஞ்சம் கொஞ்சமாக கடவுளைக் கும்பிடுவதை நிறுத்திவிட்டார். அவருக்கு யார் மீதும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு வாழ்வின் நிலையாமை தன் கோர முகத்தைக் காட்டியது. அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரண்டாவது பையன் சங்கருக்கு திருமணம் முடித்துவிட்டால் கொஞ்ச பிரச்னை தீர்ந்துவிடும். அவனுக்குக் குடும்பம் பிள்ளைகள் என்று வந்தால் ஒருவேளை துயரங்கள் மறைந்துவிடும் என்று கோமளா நினைத்தாள். ஏற்கனவே, இளையவனுக்குப் பக்கத்து ஊரில் பெண் பார்த்திருந்தார். அவனும் சரியென்று சொல்லிவிட்டான். ஆனால், அதற்குள் மூத்தவன் இறந்து விட்டதால் திருமணப் பேச்சு நின்றுவிட்டது. ஒரு வருடத்துக்குப் பின்னால்தான் விசேஷங்கள் நடத்த முடியும்.
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு எதுதான் பிடிக்கும்? பேத்திகள் இருவரையும் பார்க்க, ஏன் நினைப்பதுகூட அவருக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. அதை எவ்வளவு மறக்கவும் மறைக்கவும் நினைத்தாலும் முடியவில்லை. இன்னும் அதிகமாக செல்லம் கொடுத்தார். ஒவ்வொரு லீவிலும் அவர்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். இளையவனும் மருமகளும் அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறார்கள், குறுஞ்செய்திகள் பறிமாறிக்கொள்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். மருமகளுக்கு சங்கரை மணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பதுபோல் இவருக்குப் புரிந்தது. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரிடம் சொல்லவில்லை. ஏற்கனவே வாக்குக் கொடுத்துவிட்ட பெண் வீட்டாரும் அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.
சங்கர் குழப்பத்தில் இருந்தான். அண்ணனை இழந்தது அவனுக்குப் பேரிடியாக இருந்தது. அவன் அண்ணனாக மட்டும் இல்லை. தோழனாகவும் இருந்தான். எல்லா விஷயங்களையும் அவனுடன் பகிர்ந்துகொண்டிருந்தான். திருமணமான பின் கொஞ்சம் விலகிப் போய்விட்டாலும் போனில் அடிக்கடி அதிக நேரம் பேசிக்கொள்வான். அண்ணனுக்கும் அவனுக்கும் நடுவில் அண்ணி வந்துவிட்டாள். அண்ணி சில நேரங்களில் வேண்டுமென்றே அவர்களை நெருங்கவிடவில்லை என்று தோன்றியது. அண்ணி அவனிடமிருந்து கொஞ்சம் விலகியே இருந்தாள். அவளுடைய கணவன் நல்ல சம்பாதிக்கிறவன். சங்கர் அந்த நேரத்தில் சரியான வேலையில் இல்லை. நிரந்தரமாக எந்த வேலையும் பார்க்கவில்லை. ’நம்மிடம் ஒட்டிக்கொண்டால், நிறையப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்’ என்று அப்போது அவள் நினைத்திருக்கலாம். இப்போது அண்ணன் இறந்த பின்னர், அவனிடம் நெருக்கமாக இருக்க விரும்புகிறாள். பிள்ளைகள் அவனுடன் மிகவும் நேசமாக இருப்பது மட்டும் இதற்குக் காரணம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. இப்போது அவனுக்கும் நிறைய வருமானம் வருகிறது.
அண்ணி தனிமைப்பட்டுவிட்டாள். இரண்டு குழந்தைகளை வளர்த்தெடுத்து ஆளாக்க வேண்டியிருந்தது. அண்ணியை நினைத்து சங்கர் அனுதாபப்பட்டான். வீட்டிலேயே இருந்தவள். அவ்வளவாக உலகம் தெரியாதவள். அவள் என்ன நினைக்கிறாள் என்று தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு குழந்தைகளும் சித்தப்பா மீது பாசமழை பொழிவது இந்த ஏற்பாட்டுக்கு சாதகம். ஆனால், குழந்தைகள் அம்மா இன்னொரு திருமணம் செய்துகொள்ளச் சம்மதிப்பார்களா? புரியவைத்தால் ஒத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சம்மதித்தாலும் அப்பாவும் அம்மாவும் சம்மதிப்பார்களா? அண்ணிக்கு முப்பத்தி நான்கு வயது. இன்னும் பல வருடங்களை அவள் தனிமையில் கடக்க வேண்டும். ஆசாபாசங்கள் அவளுக்கும் இருக்காதா? ஆனால் யாரும் எதையும் மனம்விட்டுச் சொல்லவில்லை. சொல்வதற்கு தயக்கம் உள்ளுக்குள்ளேயே அவளும் இளையவனும் குமைந்துகொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் அண்ணன் இருக்கும்போது அண்ணி தன்னைக் கண்டுகொள்ளாமல் இருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது. அந்த நினைவை மீறி வருவதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.
சங்கர் திருநெல்வேலியில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தான். அதைத் தவிர பங்குச் சந்தையில் ஆலோசனை சொல்லும் நிறுவனம் ஒன்றை வைத்திருந்தான். அதிலிருந்தும் நல்ல வருமானம் கிடைத்தது. அவன் திருமணம் செய்துகொள்வதாக இருந்த பெண்ணுக்கு வேறொரு இடத்தில் திருமணமாகிவிட்டது. அதற்குப் பின்னும் திருமணம் செய்வதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தான். அவனுக்கும் முப்பத்தி ஒன்பது ஆகிவிட்டது. பெண்கள் கிடைப்பதும் அரிது.
அவனுக்குப் பெண்கொடுக்க வந்தவர்கள் மாப்பிள்ளைக்கு நிரந்தர வேலை வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். ஷேர் மார்க்கெட் பேரங்களில் போதிய வருமானம் வந்தாலும் பேருக்காவது ஏதாவதொரு வேலை பார்க்க வேண்டியிருந்தது. அதற்காகவே வேலைபார்த்தான்.
இத்தனை குழப்பத்துக்கு நடுவில்தான் அப்பாவுக்கு உடல்நலமில்லை என்ற தகவல் கிடைத்தது. அந்த வாரம் சனிக்கிழமை விடுமுறையில் வீட்டுக்கு வந்தான். அப்பாவை மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கு அழைத்துச் சென்றான். அன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு பல மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்த்தனர். பிறகு ஏதோ ஒரு டெஸ்ட் எடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர். முடிவு தெரியவர இரண்டு நாட்கள் ஆகும். ’இது ஏதோ புதிய பெரிய பிரச்னையில் கொண்டு போய்விடுமோ’ என்று கந்தசாமி வாழ்வில் முதல் முறையாக தன்னுடைய உடல்நலம் குறித்துக் கவலைப்பட்டார். எழுபத்தி இரண்டு வயதில் அவருடைய வாழ்வில் முதல் முறையாக மருத்துவமனை, சிகிச்சை என்று அலையத் தொடங்கினார். இதுவரை சிறு தலைவலி கூட அவருக்கு வந்ததில்லை. பையன்கள் இருவருக்கும் அடிக்கடி ஏதாவது உடல்நலப் பிரச்னைகள் வரும். அவருடைய மனைவியும் வருடத்தில் இரண்டு மூன்று முறையாவது டாக்டரிடம் போகவேண்டியிருக்கும். அப்படி இருந்த அவருக்கா? வாழ்வில் எது எப்போது வரும் என்று யாருக்காவது தெரியுமா?
இரண்டு மூன்று நாட்களில் சென்னையிலிருந்து ரிசல்ட் வந்துவிட்டது. நான்காவது நிலை புற்றுநோய். சென்னைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டியிருக்கும். அவருக்கு மண்டையில் சுரீர் என்று ஏதோ உறைத்தது. அவருடைய மூத்தமகன் இறந்ததும் இதே புற்றுநோயில்தான். அவன் இறப்பதற்கும் தானே காரணம் என்று கசிந்து வருந்தினார். ’எல்லோருக்கும் எப்போதும் நல்லதுதானே செய்தேன் என் மகனுக்கும் எனக்கும் இது எப்படி வந்தது? எனக்கு அந்த நோயின் அறிகுறிகள் இருந்து அவைதான் அவனிடம் சென்றிருக்க வேண்டும். மரபணு என்கிறார்களே? என்னையாவது கடவுள் முதலில் அழைத்துக்கொண்டிருக்கலாம். இப்போது சின்னவனுக்கும் திருமணம் ஆகவில்லை. வயதான காலத்தில் கோமளாவை யார் பார்த்துக் கொள்வார்? இத்தனைக்கும் மாதத்துக்கு ஒருமுறை இரண்டு முறை ஏதாவது வியாதி சொல்லிக்கொண்டு அவள் தான் டாக்டரிடம் போவாள்.’
கீமோதராபி அது இது என்று சிகிச்சை தொடங்கி, அதனால் வரும், வாந்தி, முடிகொட்டுவது, வயிற்றுவலி என்று என்னென்னமோ அவரை அலைக்கழித்தன. ஏதாவது வலி அசௌகரியம் என்று டாக்டரிடம் சொன்னால், இன்னும் இரண்டு மாத்திரைகள் சேர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. மூத்தமகன் இறந்த துயரம் ஒருபுறம் மனதை அழுத்தினாலும், அது எங்கோ மனதில் வெகு ஆழத்தில் உறைந்துவிட்டது. தன்னுடைய உடல் தேற என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். எல்லாத் துயரங்களும் இப்படித்தான் தொடர்ந்து வருமா? அவருடைய வயிற்று வலி தினமும் வாட்டியது. மாத்திரை மருந்து எடுத்துக் கொள்ளவில்லையெனில் வலி மிகவும் அதிகமாக இருந்தது. தினமும் மருந்து மாத்திரை, என்று இருபத்தி நான்கு மணிநேரமும் அதைப்பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். மனைவி கோமளா தனிமையில் துயரப்பட்டுக் கொண்டிருந்தார். அவருக்கும் மூத்தமகன் நினைவு மனதின் ஒரு மூலைக்குப் போய்விட்டது. மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பிக்கொண்டிருந்த நேரம் போய், கணவருக்கு இருக்கும் பிரச்னையைப் பேசக்கூட முடியாததாகிவிட்டது. அவரிடம் அதைப்பற்றிப் பேசினால் இன்னும் வருத்தப்படக் கூடும். மனஅழுத்தம் அவரை ஒரு பெரும் இருள் போலச் சூழ்ந்துகொண்டது.
கோமளா யோசித்துப் பார்த்தார் ‘இவரும் இறந்துவிட்டால், என்ன செய்வது? இளையமகனை நம்பித்தான் இருக்க முடியும். அவன் வேறொரு ஊரில் வேலை பார்க்கிறான். அங்கே போய்த்தான் இருக்க வேண்டும். அவனுக்கும் ஒரு கல்யாணம் முடித்துவிட்டால், அவன் மனைவியை அண்டி வாழவேண்டும். அல்லது தனிமையில் வாழ வேண்டும்’. இவ்வளவு வருடங்கள் பிள்ளைகள் புருஷனோடு வாழ்ந்தவருக்குத் தனிமையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. ’என் தலைவிதி என்னை எப்படியெல்லாம் சோதிக்கிறது? இறந்துவிடுகிறவர்களுக்கு எல்லாப் பிரச்னைகளூம் தீர்ந்துவிடுகின்றன. அவர்களை அண்டியிருக்கிறவர்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது’.
முதல் முதலாக மருமகளை தன்னிலையில் வைத்துப் பார்த்தாள். ’அவளுக்கு யார் துணை? இத்தனை வயதான பிறகு எனக்கே இந்தப் பயம் இருக்கிறதே? இந்தச் சின்ன வயதில் கணவனை இழந்திருப்பது எவ்வளவு கஷ்டம். இரண்டு பிள்ளைகளைத் தனியாக வளர்க்க வேண்டும். நாம் அவளைப் பற்றி நினைப்பதில்லை என்ற வருத்தம் அவளுக்கு இருக்குமோ? அது நியாயமானதுதான். பேத்திகளை நினைத்துக் கவலைப்பட்ட அளவுக்கு அவளைப் பற்றி நினைக்கவில்லையோ?
அன்று மத்தியானமே அவளுக்குப் போன் பண்ணி, மாமனாரின் உடல் நிலை பற்றிச் சொன்னாள். இருவருக்கும் ஏதோ ஒரு உறவு காத்திருப்பது போல் தோன்றியது. மருமகளின் குரலிலும் ஒரு குழைவு இருந்தது. அதை அவளும் உணர்ந்திருக்க வேண்டும். எதையும் கொஞ்சம் விலகி நின்று தீர்க்கமாக யோசித்துப் பார்த்தால் நல்லது நடக்கும். மகனிடமும் பேச வேண்டும் என்று கோமளாவுக்குத் தோன்றியது.