சிறுகதை - விடுகதை!

Short story...
Short story...image credit - parents.com

-பாரதி மணியன்

பிசிலிருந்து சோர்வாக வீட்டிற்குள் வந்த அப்பா ராகவனை,  வாசல் படியின் உள்ளே நுழைய விடாமல், இரு கைகளையும் குறுக்கே நீட்டி... மகள் அமுதா மறித்து நின்றாள்.

ராகவனுக்கு எவ்வளவு களைப்பாக இருந்தாலும், மகளின் மலர்ந்த முகத்தையும், சுட்டித்தனத்தயும் பார்த்தால் போதும், மனசு உற்சாகமாகிவிடும்.

"அப்பா... இப்போ நான் ஒரு விடுகதை சொல்வேன். அதுக்கு நீங்க உடனே பதில் சொல்லணும். சரியா?!" 

ஆர்வமாக கேட்ட மகளுக்கு, ராகவன் பதில் சொல்வதற்கு முன்... சமையல் அறையில் இருந்து, வேகமாக வெளியே வந்த அம்மா நந்தினி மகளை அதட்டினாள்.

"அமுதா என்ன அவசரம்?  இப்படி அப்பாவை வாசலில் வச்சு குறுக்காட்டி கேட்கணுமா?! முதல்ல வழியை விடு. அவர் கை, கால் முகம் கழுவிட்டு , டிரஸ் மாத்திக்கிட்டு வரட்டும்."

"பரவாயில்ல விடு நந்தினி. அவள் ஏதோ ஆர்வமா கேட்கிறா கேட்கட்டும்" என்று புன்னகையோடு சொல்லிக் கொண்டே, அங்கே முன் அறையில்  இருந்த நாற்காலியை இழுத்து போட்டு, மகளின் முன்பு உட்கார்ந்தான்.

அம்மாவின் அதட்டலில் முகம் சுருங்கிப்போன அமுதாவின் முகம், அவளின் அருகே அப்பா  உட்கார்ந்ததும்… மறுபடியும் பிரகாசமானது.

ஒரு முறை எழும்பி குதித்து கைதட்டி சிரித்தாள். அவளின் மகிழ்ச்சியைப் பார்த்து ராகவன் சிரிக்க, அம்மாவைப் பார்த்து ‘வெவ்வே’ என்று அமுதா பழித்து காண்பித்தாள்.

அமுதா… அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அம்மா நந்தினி, வழக்கம்போல மாலையில், மகளுக்கு தலையை அழகாக வாரி விட்டு, பூ வைத்து... பளபளப்பான முகத்தில் சிவப்பு நிறத்தில் பொட்டிட்டு, சிங்காரித்து இருந்தாள்.

“அதானே... உங்க பொண்ணுகிட்ட பேசுறதுன்னா, உங்களுக்குச் சலிப்பு எல்லாம் பறந்துடுமே. பள்ளிக்கூடத்தில இருந்து வந்ததிலிருந்து  இப்படித்தான்... எங்ககிட்டயும்  ஒரு விடுகதைய சொல்லி உடனே அதுக்கு விடையைக் கேட்டு ஒரே தொல்லை பண்ணிட்டா… பதில் தெரியலையா அப்ப 'பாஸ்' குடுங்கன்னு கையை நீட்டி எங்களை யோசிக்க விடாம அவசரப்படுத்தறா. பாஸ்ன்னு சொன்னதும், அவளே விடையைச் சொல்லிட்டு, இந்த விடையை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு 'பிராமிஸ்' பண்ணுங்கன்னு சத்தியம் வேற வாங்கறா... ப்பா ..இவ ஆர்ப்பாட்டம் தாங்க முடியலை!"  என்று நந்தினி சிரிப்போடும் சலிப்போடும் பேசினாள்.

"இந்த விடுகதை என்ன அவ்வளவு பெரிய இடியாப்ப சிக்கலா... அதெல்லாம் அவ அப்பனுக்குத் தெரியும். அவன்  அமுதாவோட தாத்தா மாதிரி கற்பூர புத்தி… பட்டுனு விடையை சொல்லிடுவான்" என்று அந்த அறையின் மூலையில் உட்கார்ந்து இருந்த பாட்டி...ராகவனின் அம்மா சொல்ல…

"ம்ம் ... அதையும் பார்த்துரலாம். அப்பா இங்க பாருங்க, என் விடுகதையைக் கேட்டதும் உடனே பதில் சொல்லணும். இங்க  யாருகிட்டேயும் கேட்கக்கூடாது. தெரியலன்னா 'பாஸ்'ன்னு என் கையைத் தொட்டு சொல்லணும். சரியா?!."

அபிநயத்தோடு பேசுகிற மகளை ..புன்னகையோடு பார்த்துக்கொண்டே… சரி என்பதுபோல ராகவன் தலையை ஆட்டினான்.

அமுதா அந்த விடுகதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

"ஒரு மூன்று எழுத்து சொல்.! அந்த மூன்று எழுத்தையும் சேர்த்து சொன்னால் .. அது ஒரு விலங்கைக் குறிக்கும். அதில் நடு எழுத்தை நீக்கி விட்டு சொன்னால், அது  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விஷயமாகும். முதல் இரண்டு எழுத்தையும்   நீக்கி விட்டுச் சொன்னால், அந்த  மூன்றாவது எழுத்து தமிழ் மாதத்தைக் குறிக்கும் சொல். இப்ப சொல்லுங்க. அந்த மூன்று எழுத்து சொல் என்ன?!"

மகளின் ஆர்வமான கேள்வியைவிட அவளின் அழகு பேச்சை ரசித்துக்கொண்டு இருந்த ராகவன்...

“அம்மாடியோவ்... ரொம்ப கஷ்டமான விடுகதையா இருக்கே! செல்லம்... இதுக்கு நான் கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்லமுடியும். அப்பா போய், அம்மா கையால சூடா ஒரு டீ சாப்பிட்டுகிட்டே யோசிச்சு சொல்றனே!“

"இல்லப்பா… நீங்க பதில் சொல்லிட்டுத்தான் போகணும். அதுக்குள்ள நீங்க அம்மாகிட்டே கேட்டு சொல்லிட்டீங்கன்னா நா என்ன பண்றது? அதெல்லாம் முடியாது.  இப்பவே சொல்லுங்க… இல்ல… தெரியலன்னா ..'பாஸ்' குடுங்க" என்று அமுதா வேகமாக கையை நீட்டிக்கொண்டே சொன்னாள்.

ராகவன் அவளுடைய அவசரத்தை ரசித்தபடியே யோசித்தான்.

சட்ரென்று அவனுக்கு பொறி தட்டியது. அந்த விடுகதைக்கான விடை தெரிந்துவிட்டது.  உடனே கண்களை சுருக்கி, மகளை குறுகுறுவென பார்த்து சிரித்தான்.

அமுதாவிடம் ஒரு படபடப்பு தெரிந்தது. எங்கே அப்பா விடையைச் சொல்லி விடுவாரோன்னு பதட்டம் வந்து விட்டது.

"அப்..ப்பா விடுகதைக்கு விடை சொல்லறதை விட்டுட்டு இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது. விடை தெரியுமா… இல்ல 'பாஸ்' தரீங்களா" என்று திரும்பவும் கையை நீட்டிக்கொண்டு அவசரப்படுத்தினாள் .

"அப்பா சிரிக்கறதைப் பார்த்தா... விடையைக் கண்டுபிடிச்சிட்டார் போலயே?!" என்று நந்தினியும் குறுக்கிட்டுப் பேச…

இதையும் படியுங்கள்:
இம்புட்டு மல்பெரி அம்புட்டு ஆரோக்கியமா?
Short story...

"அதான் சொன்னேனே... அவ அப்பன் மாதிரி கற்பூர..." என்று அவள் பாட்டியும் பேசத் தொடங்க, பொறுமையிழந்த அமுதா...

"எல்லாம் பேசாம இருங்க... அப்பாவுக்கு இன்னும் விடை தெரியல யாராவது அவருக்கு விடையைச் சொன்னா... எல்லார்கிட்டயும் நான் ‘டூ’ விட வேண்டி வரும்" அமுதா தன் சுட்டு விரலைக் காட்டி எச்சரித்தாள்.

அமுதாவின் குழந்தைதனமாக பேச்சைப் பார்த்த ராகவனுக்கு, பழைய நினைவுகள் கண்ணில் நிழலாடியது. அந்தக் கஷ்டமான நாட்களை இப்போது நினைத்தாலும், அவனுக்குக் கண்கள் கலங்கின.

ராகவனுக்குத் திருமணமாகி, ஏறக்குறைய எட்டு வருடங்கள் கழித்துத்தான் அமுதா பிறந்தாள். ஆனால், அவள் பிறந்தபோதே அவளின் எடை குறைவாக இருக்கு என்று ‘இன்குபேட்டரில்’ வைத்து பலநாட்கள் பராமரித்தார்கள். அதற்குபிறகு நான்கு வயது வரையிலும் அவள் நடக்கவே இல்லை. கால்கள் சூம்பிபோனது போல இருந்தது. ஆறு வயது வரை சரியாக பேசக்கூட வரவில்லை .".ஊ..ஆ" என்று சப்தம் மட்டும்தான் கொடுப்பாள்.

இதனால் ராகவனும் நந்தினியும் மிக மனசு உடைஞ்சு போனார்கள். பல டாக்டர்களைப் பார்த்தார்கள். அவள் நலமாக, தெய்வங்களை வேண்டி கோயில் கோயிலாகச் சென்று வந்தார்கள். இதற்கிடையில் ராகவனின் அம்மா பலவிதங்களில் வீட்டு வைத்தியமும் செய்து பார்த்து… பிறகுதான் அமுதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் வந்தது.

அமுதாவின் தோற்றமும் பேச்சும் இயல்பாக மாறிய பிறகுதான் ராகவனின் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரு நிம்மதி வந்தது.

"அப்..பா.." என்று அழைத்த குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ராகவன்,

“பாஸ்” என்று சொல்லி... ஆவலாக நீட்டிக்கொண்டிருந்த அமுதாவின்  கையைத் தொட்டான் .

உடனே அமுதா மிகப் பெரிய வெற்றி அடைந்தவள்போல துள்ளிக் குதித்தாள்.

நந்தினியையும் பாட்டியையும் பார்த்து 'தோத்து போனீங்களா" என்பது போல சைகை காண்பித்துவிட்டு, கையை தட்டி கலகலவென சிரித்தாள்.

"அப்பா.. அதுக்கு விடை என்ன தெரியுமா?  அந்த மூன்று எழுத்து விலங்கு  'கழுதை '. அப்புறம் நடு எழுத்தை எடுத்துட்டா 'கதை'ன்னு வரும். கதை எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா. கடைசியா 'தை' ன்னு எழுத்து மட்டும் வரும் அது ஒரு தமிழ் மாதம் தானே .. எப்படி ?!"

அழகாக ஆடி கையையும் ஆட்டி அமுதா சொல்ல… எல்லோரும் சிரித்தார்கள்.

மகளின் சந்தோசத்தைப் பார்த்து அவள் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சிவிட்டு ராகவன் எழுந்து உள்ளே போனார் .

அவர் பின்னாடியே வந்த மனைவி நந்தினி... "உங்களுக்கு ஏற்கனவே  விடை தெரியும்தானே ..?!" என்று கேட்டாள் .

"ஆமா நந்தினி .. நான் கண்டுபிடிச்சிட்டேன். ஆனா அவதான்... 'பாஸ்' குடுங்கன்னு கையை நீட்டிகிட்டு ஆர்வமா நிக்கிறாளே... வேறு யாரும் விடையை சொல்லக்கூடாது. அவளே சொல்லணும். அதில் அவளுக்கு ஒரு  சந்தோஷம். குழந்தைகள்னா இப்படித்தானே இருப்பாங்க. அவள் இப்படி சந்தோசமா பேசி சிரிக்கிறததானே நாமளும் எதிர்பார்த்தோம்" என்று ராகவன் மனம் பூரித்து சொல்ல, நந்தினியும் ஆமாம் என்பதுபோல தலையை ஆட்டி புன்னகை செய்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com