

ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் ஏழாவது உலக மாநாட்டில் நிறைவுரையாக 24-11-2000 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை...
இந்த உரையை முடிக்கும் முன் ஒரு சிறிய கதையை ஸ்வாமி கூறுகிறேன்.
முன்னொருகாலத்தில் ஒரு நாட்டை நல்ல முறையில் ஒரு ராஜாவும் ராணியும் ஆண்டு வந்தனர்.
ஒரு நாள் ராணி ராஜாவின் தலையில் எண்ணெயை வைக்கும் போது கண்ணீர் சிந்தினாள். எதிரே இருந்த கண்ணாடியில் ராணி கண்ணீர் சிந்துவதைக் கவனித்த ராஜா ராணியிடம் ‘ஏன் கண்ணீர் சிந்துகிறாய்’ என்று கேட்டான்.
அவள் கூறினாள்: “ராஜாவே! உங்கள் தலையில் நரைத்த முடியை நான் காண்கிறேன். முடிவு நெருங்கி விட்டது என்பதை உணர்த்த கடவுள் அனுப்பும் முதல் செய்தி இது தான். கண்கள் பார்வையை இழப்பது அவர் அனுப்பும் இரண்டாவது செய்தி. பற்கள் விழுவது மூன்றாவது செய்தி. உடலெல்லாம் சுருக்கம் ஏற்படுவது நான்காவதான இறுதிச் செய்தி. இன்று உங்களுக்கு முதல் செய்தி வந்திருக்கிறது. ஆகவே தான் எனக்கு துக்கம் ஏற்பட்டிருக்கிறது.”
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
ராஜா நல்ல அறிவாளி. உடனடியாக அவன் காட்டிற்குச் சென்று தவம் புரிய ஆரம்பித்தான். நாராயணன் அவன் முன்னே தோன்றினார். அவரை தரிசித்த ராஜா, “ஓ, பிரபுவே! உங்கள் சந்நிதியே எனக்கு பென்னிதி (செல்வம்)! உங்கள் கருணையை என் மீது பொழியுங்கள். எனது நாட்டில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. உணவுக்கோ, ஆடைக்கோ, தங்குமிடத்திற்கோ பஞ்சமே இருக்கக் கூடாது.”
நாராயணன் அவனிடம், “ராஜனே! உனது விருப்பம் உண்மையாகவே உயர்ந்த ஒரு விருப்பம் தான்! ஆனால் எல்லோரையும் சமமாக ஆக்குவது என்பது இயலாத காரியம். இந்தப் படைப்பில் வெவ்வேறு விதமாக இருப்பது தான் மிகவும் அவசியமானது.” என்றார்.
ராஜாவோ தனது விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினான். கடைசியில் நாராயணன் அவனது விருப்பத்திற்கு இணங்கிச் சம்மதித்தார்.
நாட்டிற்குத் திரும்பிய ராஜா தனது நாட்டில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்.
எங்கே பார்த்தாலும் அரண்மனை போன்ற கட்டிடங்கள்! மக்கள் கார்களிலும் விமானங்களிலுமே பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சாலையில் ஒருவராவது நடந்து போவதை அவனால் பார்க்க முடியவில்லை.
தனது அரண்மனைக்குத் திரும்பி வந்த ராஜா அங்கு எதிர்த்தாற்போல் இருந்த சாலை மிகவும் சகதியாக இருப்பதைக் கண்டான்.
அங்கு ஒரு துப்புரவுத் தொழிலாளியையும் காணோம். அரண்மனைக் காவல்காரனையும் காணோம்.
ராணியை அழைத்த ராஜா உடனடியாக ஒரு துப்புரவுத் தொழிலாளியை அனுப்புமாறு கூறினான்.
ராணியோ ராஜாவைப் பார்த்துச் சொன்னாள்; “ராஜாவே!! துப்புரவுத் தொழிலாளியோ, நாவிதரோ, வண்ணானோ, சமையல்காரரோ யாருமே வேலைக்கு வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோருமே ஒரே இரவில் பணக்காரர்களாக ஆகி விட்டனர். வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமே அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது.”
நாராயணனிடம் எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்ற ஒரு வரத்தைக் கேட்டது தவறு என்று உடனே ராஜாவுக்குப் புரிந்து விட்டது.
பணக்காரன் ஏழை மற்றும் நல்லது, கெட்டது ஆகிய இரட்டை நிலை இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வது முடியாது என்பதை ராணியும் புரிந்து கொண்டாள். அவளும் காட்டிற்குத் தவம் செய்யக் கிளம்பினாள்.
தவத்தின் முடிவில் நாராயணன் அவளுக்குக் காட்சி தந்தார். “என் கணவருக்கு என்ன வரத்தை அளித்தீர்கள்?” என்று அவள் நாராயணனிடம் கேட்டாள்.
ராஜா தன்னைப் போலவே எல்லோரும் செல்வம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று கேட்டதாக நாராயணன் பதில் அளித்தார்.
“நாராயணா! இப்படிப்பட்ட நல்ல அரசனின் கீழ் ஏன் மோசமானவர்களாக சிலர் இருக்க வேண்டும். எல்லோரையும் நல்லவர்களாக மாற்றி விடுங்கள். ராஜாவும் அவரது மக்களும் அனைவருமே நூறு ஆண்டுகள் வாழும்படி செய்யுங்கள்” என்றாள் ராணி!
நாராயணன் அவளது பரந்த மனப்பான்மையைக் கண்டு மகிழ்ந்தார்.
“நீயும் கூட நூறு ஆண்டுகள் வாழ்வாய்” என்று கூறினார்.
அரண்மனைக்குத் திரும்பிய ராணி ராஜாவிடம் நடந்ததைக் கூறினாள்.
ஆனால் பிரச்னை தீர்ந்தபாடில்லை, அது இன்னும் தொடரத்தான் செய்தது.
நாவிதனோ, வண்ணானோ, சமையல்காரனோ யாருமே வரவில்லை.
ராஜா மீண்டும் காட்டிற்குச் சென்று நாராயணனை தரிசித்துப் பிரார்த்தித்தார்; ”பிரபுவே! நான் உங்களிடம் விருப்பப்பட்டு கேட்டது முற்றிலும் தவறானது. உங்களது புத்திமதியைக் கேட்காமல் விட்டதற்கான பலனை இப்போது நான் அனுபவிக்கிறேன். தயவு செய்து எனது நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வாருங்கள்.”
நாராயணனும் "அப்படியே ஆகட்டும்," என்றார்.
உலோகாயத வசதிகளில் சந்தோஷம் இருக்காது; இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலையிலேயே அது வரும் என்பதை ராஜா உணர்ந்தான். நாட்டிற்கு ராஜா திரும்பி வந்த போது எல்லாம் பழைய நிலையில் இருப்பதைக் கண்டான். துப்புரவுத் தொழிலாளிகள், நாவிதர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தங்கள் தொழில்களை வழக்கம்போல செய்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.
ஆகவே கடவுள் எது செய்தாலும் அது உங்களுடைய நன்மைக்காகவே தான் என்பதை நீங்கள் உணரலாம். துன்பம் ஏற்பட்ட காலங்களில் மட்டும் இறைவனை நினைப்பது சரியல்ல.
இன்பத்தையும் துன்பத்தையும் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் இறைவன் மீதான உங்கள் பக்தி சலனமடையக் கூடாது. உங்கள் நம்பிக்கை ஸ்திரமாக இருத்தல் வேண்டும்.