
டெல்லியில் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தெரு நாய்கள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து விசாரித்தது உச்சநீதிமன்றம். எனவே நாடு முழுவதும் இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவை ஒரே சமயத்தில் பல குட்டிகளை பெற்று விடுவதால் அவற்றின் எண்ணிக்கையை கட்டுபடுத்துவது நமக்கு பெரிய சவாலாக இருக்கிறது. அவற்றின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக நாய்களுக்கு தடுப்பூசி வழங்குவது, கருத்தடை செய்வது போன்ற பணிகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
நெடுங்காலமாக நாய்கள் மனிதர்களின் பாதுகாப்புக்கு உதவியாக இருந்து வருகின்றன. பொதுவாக சமூகத்தில் அனைத்து தெரு நாய்களும் ஆக்ரோஷமாக காணப்படுவதில்லை. நாய்களுக்கு முறையான உணவு, சுதந்திரமான நடமாட்டம், உயிரியல் தேவைகள் போன்றவை கிடைக்கும் போது மனிதர்களிடம் அவை இயல்பாக நடந்து கொள்கின்றன.
வளர்ப்பு நாய்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைத்துவிடுகிறது. ஆனால் அதற்கு நடமாடுவதற்கான சுதந்திரமோ அல்லது உயிரியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழிகளோ இருக்காது. அதனால் அவை சில நேரங்களில் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. தெரு நாய்கள் பசியால் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன.
தெருநாய்கள் பெரும்பாலும் குழந்தைகளைத்தான் குறிவைத்து தாக்குகின்றன. பெரியவர்களை துரத்தும் போது அவர்கள் சற்று எதிர் குரல் எழுப்பினாலோ அல்லது தாக்குவது போன்ற செயல்கள் செய்தாலோ உடனடியாக அவை பின்வாங்கும். குழந்தைகளால் உடனடியாக எதிர்வினையாற்ற முடிவதில்லை. எனவே தெருநாய்கள் குழந்தைகளை முதலில் குறிவைக்கின்றன.
வளர்ப்பு நாய்களுக்கு கிடைக்கும் அக்கறை தெரு நாய்களுக்கு கிடைப்பதில்லை. ஆனால், பரிவுடன் அணுகுபவர்களை தெருநாய்கள் பெரும்பாலும் தாக்குவதில்லை. தெருநாய்கள் சில நேரங்களில் ஏக்கத்தினாலும் வழிப்போக்கர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்கின்றன. பருவமழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் தெருநாய்களுக்கு உணவு கிடைப்பது கடினம். அவ்வாறான காலங்களில் அச்சத்தில் இருக்கும் அவை மனிதர்களைத் தாக்குவது, துரத்துவது என்பது அதிகமாக இருக்கும்.
தெரு நாய் தனியாக இருப்பதைவிட குழுவாக இருக்கும்போது கூடுதல் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். அவைகளிடம் குழு மனப்பான்மை அதிகமாக இருக்கும்.
அனைத்து தெருநாய்களும் ஆபத்தானவை என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. ரேபீஸ் தொற்று உள்ள நாய்கள் மிகவும் ஆபத்தானவை. அவை கடித்தால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தெருநாய்கள் தங்களது எல்லைகளைத் தாண்டிச் செல்வதில்லை. உணவு, இடம், ஆதிக்கம் எனப் பல விஷயங்கள் அவற்றின் எல்லையை தீர்மானிக்கின்றன. ஒரு இடத்தில் தொடர்ச்சியாக, தடையின்றி உணவு கிடைக்கும் போது அவை அங்கேயே தங்கிக் விடுகின்றன. உணவு கிடைப்பது நின்றுவிட்டால் உணவு கிடைக்குமிடத்தை நோக்கிச் அவை செல்லுகின்றன. உணவு வழங்குவதை நாம் நிறுத்திவிட்டால் அந்த இடத்தில் நாய்கள் தொடர்ந்து இருப்பதில்லை.
தெருநாய்கள் சிறு வயதில் பெறும் மோசமான அனுபவங்கள் அவற்றின் நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாய்கள் வாகனங்களில் அடிபடுவது அல்லது மனிதர்களால் தாக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். யாராவது ஒரு நாய் மீது கல்லெறிந்தால், அந்த நாய் அவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும். ஒரு நாய் அல்லது குழுவில் இருக்கும் வேறு நாய் மீது வாகனம் மோதியிருந்தால் அந்த நாய்கள் வாகனங்களைக் கண்டால் குழுவாகத் துரத்தும். அவற்றின் அனுபவங்களைப் பொருத்து இது மாறும். எனவே ஒட்டுமொத்தமாக தெருநாய்களின் நடத்தை இப்படித்தான் இருக்கும் என எவராலும் கூறி விட முடியாது.
புதியதாக தங்களின் இடத்தில் ஒருவர் நுழைய முயற்சிக்கிறார் என உணர்ந்தால் அவை அவர்களை துரத்தவோ, தாக்கவோ முயற்சிக்கும். நாய்களின் உடல்மொழியைப் புரிந்து கொண்டு நாம் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாய் கூட்டம் இருந்தால் நாம் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிப்பது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.
இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நாய் துரத்தினால் வண்டியில் சற்று வேகமாகச் செல்ல வேண்டும். அப்போது நாய் நின்றுவிடும். நடந்து செல்லும் போது கைவசம் ஒரு குச்சியைக்கொண்டு செல்வது நல்லது. பெரும்பாலான நாய்கள் நம்மிடம் அச்சத்தை உண்டாக்கவே குரைக்கின்றன. நம்மை கடிப்பது கடைசிப்பட்ச முயற்சியே ஆகும்.
நாம் சத்தம் எழுப்பினாலோ அல்லது ஏதாவது பொருளை எதிர்த்து காண்பித்து ஆதிக்கத்தை நிறுவினாலோ நாய்கள் பின்வாங்கி விடும். நாய் குரைப்பது தான் அவை இயல்பாக நம்மிடம் இல்லை என்பதற்கான முதல் அறிகுறி. நாம் இருக்கின்ற இடத்தில் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். நாம் அவைகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்த மாட்டோம் என்று அவை நம்பினால் நம்மைப் பார்த்து குரைப்பது கூட இல்லை என்பதே உண்மை. இந்த உலகத்தில் அனைத்து உயினங்களும் வாழ உரிமை படைத்தவை. ஆனால் ஒருவருக்கொருவர் தொல்லைத் தராமல் வாழ்வது எனபது நம் அனைவரின் வாழ்வியலாக மாறவேண்டும்.