

சூஃபி ஞானி கூறும் அன்பின் ஆழத்தை இரண்டு சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. இரத்த உறவு இல்லாத தோழியுடன் நாற்பது ஆண்டுகள் கொண்ட பிணைப்பு, முதுகுத் துடிப்பு வழியாக மரணச் செய்தியை உணரச் செய்கிறது. அன்பு திறக்க இயலாத கதவுகளையும் திறக்க வல்லது; பகிர்ந்தளிக்கும் போது மகிழ்ச்சி பல மடங்கு பெருகும் என ஞானி வலியுறுத்துகிறார்.
வெளிச்சத்திற்கு மூலம் எதுவென்றால் நெருப்பு என்று சொல்லுவோம். அதுபோல் அறிவுக்கு மூலம் அன்பு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படிப்பட்ட அன்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை சூஃபி ஞானி விளக்கும் விதத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
என் தோழி பூஜை அறையில் நிதானமாக பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது சட்டென்று வெளியில் வந்து எனக்கு என்னவோ நெஞ்சில் ஒரே பதட்டமாக இருக்கிறது. என் மகளுக்குத் தான் உடல் நலம் சரியில்லையோ? என்னவென்று தெரியவில்லையே என்று பதறியபடி போனை எடுத்து கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் அவள் மகளுக்கு போன் செய்தாள். அந்த போனை அவளின் தோழி எடுத்து சட்டென்று 'ஆன்டி ராதிக்கு உடல்நலம் சரியில்லை.
அதனால் அவளை விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். நீங்கள் ஒன்றும் பதறாதீர்கள். நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறினாள். இதைத் தான் 'தான் ஆடாவிட்டாலும் தன் சதையாடும்' என்று கூறுவது.
அதேபோல் கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தவள், 'என்னவோ தெரியவில்லை, எனக்கு நான்கு நாட்களாக முதுகில் ஒரு அதிர்வு. முதுகு துடித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை இப்படி துடித்து நான் உணர்ந்ததில்லை. கண்கள் தான் துடிக்கும். அதிலும் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு பலனோடு. அது அப்படியே பலித்து விடுவதும் உண்டு. ஆனால் இன்று முதுகு துடிப்பதை என்னால் யூகிக்க முடியவில்லை' என்று கூறிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்து வந்தவள், 'அப்பாடா..!இப்பொழுது தான் எனக்கு அந்த முதுகு துடித்தது நின்றது' என்று கூறிவிட்டு, செல்லை எடுத்து அவள் தோழிக்கு போன் செய்தாள். அங்கிருந்து தோழியின் கணவரும் மகனும் அம்மாவின் மூச்சு இப்பொழுதுதான் நின்றது என்று கூறக் கேட்டு என் தோழி கதறி துடித்தாள்.
இந்த நிகழ்வு இது இரத்த சம்பந்தம் இல்லை என்றாலும் அவளோடு 40 வருடங்களாக ஒட்டி உறவாடிய உன்னதமான அந்த அன்பு பிணைப்பை வெளிப்படுத்தியது.
"அன்பு திறக்க இயலாத கதவுகளையும் திறக்கச் செய்யும் வலிமை உடையது. அன்பு தான் நிலையானது. அதை பகிர்ந்தளிக்கும் போது மகிழ்ச்சி பல மடங்காக பெருகுகிறது" என்று மக்களுக்கு அறிவுறுத்தினார் சூஃபி ஞானி.
அதைக் கேட்ட ஒரு பணக்காரர் நான் எல்லோரிடமும் அன்பாக இருப்பதாக சொல்லிக் கொண்டார். தன் குடும்பத்தாருடன் தன் வேலையாட்களுடன் மற்றும் எல்லோரிடமும் தான் பரவலாக அன்பு காட்டுவதாக ஞானியிடம் தெரிவித்தார். 'மிகவும் நல்லது' என்று அவரை பாராட்டினார் ஞானி. 'எல்லோரும் உங்களைப் போலவே இருந்து விட்டால் இந்த உலகத்துக்கே நல்லது' என்றார்.
ஒருநாள் ஞானி தெரு வழியே போய்க்கொண்டிருந்த போது அந்த பணக்காரத் தம்பி வீட்டு வாசலில் நின்றபடி உயரே மாடியில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்தார். "அடேய் ஜாக்கிரதை. தவறி விழுந்து விடப் போகிறாய். வேண்டாம் இந்த விளையாட்டு. கீழே இறங்கி வா," என்று பதறினார்.
அதைப் பார்த்த ஞானி "பரவாயில்லையே நீங்கள் உங்கள் குடும்பத்தாருடன் மிகவும் அன்பாக பழகுகிறீர்களே" என்று அவரை பாராட்டினார்.
அடுத்த இரண்டாவது வீட்டு மாடியில் இன்னொரு சிறுவன் அதேபோல விளையாடிக் கொண்டிருந்தான். "யார் அந்த சிறுவன்?" பதறியபடி கேட்டார் ஞானி. பணக்காரர் அந்தப் பையனை பார்த்துவிட்டு "அவன் என் வியாபார எதிரியின் பையன்! அடடா... அவன் தான் எவ்வளவு தைரியசாலி. எவ்வளவு சாமர்த்தியமாக விளையாடுகிறான்!" என்று மெச்சினார்.
அவரைப் பார்த்து சிரித்தார் ஞானி. இதுதான் நீங்கள் அன்பு பாராட்டும் லட்சணமா? உங்கள் மகன் விளையாடும் போது இருந்த பதற்றம் எதிரியின் பிள்ளை விளையாடும் போது இல்லையே ஏன்? இப்படி ஒரு தலைப்பட்சமாக காட்டப்படுவது அன்பு இல்லை. உங்கள் மகன் எவ்வளவு தான் தீரனாக விளையாடினாலும் அவன் கீழே விழுந்து விடக்கூடாது என்று பதறும்போது வெளிப்படும் அதே அன்பு பிறருக்கும் போக வேண்டும். அதுதான் சரி. அப்போதுதான் உலகம் மொத்தமும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டவராக திகழ முடியும்," என்றார்.
பணக்காரர் புரிந்து கொண்டார். ஞானி காட்டிய வழியில் நடக்க முயற்சி செய்வதாக உறுதி அளித்தார்.
அனைவருக்கும் பொதுவானது அன்பு ஒன்றே. அந்த அன்பு டெலஸ்கோப் வழியாக எதையும் பெரிதாகப் பார்க்கிறது. பொறாமை மைக்ரோஸ்கோப் வழியாக சின்னதையே பார்க்கிறது. டெலஸ்கோப்பாய் இருப்போம்!
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், குறுகிய வட்டத்திற்குள் சுழலும் உங்கள் அன்பின் எல்லைகளை விரிவுபடுத்தி, அனைத்து உயிர்களிடமும் நிபந்தனையற்ற கருணையைச் செலுத்துவதற்கான ஆன்மீக தெளிவையும் மன அமைதியையும் பெறுவீர்கள்.