

கதை 1: சமயோசித புத்தி!
ராணுவத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராணுவ வீரன் ஒருவனுக்கு வேலை பிடிக்கவில்லை! விட்டு விட நினைத்தான். அதற்காக தனக்கு கண் பார்வை மங்கி வருவதாகவும், தன்னால் எதையும் பார்க்க முடியவில்லை என்றும் ஒரு மனு எழுதி அதிகாரியிடம் கொடுத்தான். அவனது கோரிக்கையைப் பரிசீலனை செய்ய ஒரு டாக்டர் அனுப்பப்பட்டார்.
டாக்டர் தனது பரிசோதனையை தொடங்கினார்.
"அங்கே எழுதியிருக்கும் எழுத்துக்களை படி" என்றார்.
"எந்த எழுத்துக்களை டாக்டர்?" என்று கேட்டான் அந்த ராணுவ வீரன்.
"அதோ அங்கே எதிரில் உள்ள சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் சார்ட்டைப் பார். அதிலுள்ள..." என்று டாக்டர் முடிக்கும் முன், "சுவரா! சுவர் எங்கேயிருக்கிறது டாக்டர்" என்றான்.
டாக்டர் அசந்து போய் விட்டார். முடிவில் கட்டுடலுடன் கூடிய ஒரு அழகிய நர்ஸைக் கூப்பிட்டு அவனெதிரில் நிற்க வைத்து, "ஹூம்.... இப்போது உன் எதிரில் என்ன இருக்கிறது?" என்று டாக்டர் கேட்டார்.
அவன், "ஒரு... உம்... வந்து... ஒரு பெரிய '8' என்ற எண்ணின் நிழல் போல் தெரிகிறது" என்றான்.
ராணுவ வீரனின் சூழ்ச்சி பலித்தது. அவனது பார்வை முற்றிலும் மங்கிப் போய் விட்டதால் அவன் வேலைக்கு லாயக்கற்றவன் என்று டாக்டர் குறிப்பு எழுதி விட்டார்.
அவனுக்கு ஏகப்பட்ட குஷி. அன்றே அவனது வெற்றியை கொண்டாட நினைத்து, ஒரு சினிமா தியேட்டருக்குச் சென்று டிக்கெட் கியூவில் நின்றான். தனக்கு முன்னால் நிற்பவரைப் பார்த்ததும் திடுக்கிட்டான். அவர் வேறு யாருமல்ல! அவனை அன்று காலையில் பரிசோதனை செய்த டாக்டர் தான்!
சில வினாடிகள் அதிர்ச்சியடைந்தாலும் அவன் சமாளித்துக் கொண்டான். அவனது சமயோசித புத்தி உதவியது. டாக்டரின் தோளைத் தட்டிய படி கேட்டான்
"ஐயா! இந்த பஸ் ஆக்ரா போகுமா?"
****
கதை 2: பெரியம்மா இல்லை...!
மருமகன் படிக்காதவன். ஏதோ சில நாட்கள் பள்ளிக் கூடத்திற்குப் போயிருக்கிறான். அதை வைத்துக் கொண்டு தன்னைப் படித்தவன் என்று சொல்லிக் கொள்வான். நம்பிப் பெண்ணும் கொடுத்து விட்டார்கள்.
மாமனார் வீட்டில் ஒரு நாள் ஒரு கடுதாசி வந்தது. யாருக்கும் வாசிக்க தெரியாது. மருமகனிடம் கொடுத்தார்கள்.
மருமகன் கடுதாசியை மேலும் கீழும் திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. கண்ணில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவன் அழுவதைப் பார்த்தார்கள். கடுதாசியில் எதோ துக்க செய்தி என்று நினைத்தார்கள்.
கடுதாசியில் 'மா' என்ற எழுத்து மட்டும் அவனுக்கு தெரிந்தது. பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பெரிய 'மா' போடுவார். கடுதாசியில் 'மா' சின்னதாக இருந்தது
பெரிய 'மா' இல்லை. சின்னம்'மா' தான் இருக்கு என்றான். அவன் சொல்வதைத் கேட்டு வீட்டில் இருந்தவர்கள், "பெரியம்மா! எங்களை விட்டுப் போயிட்டியா?" என்று சொல்லி அழுதார்கள்.