

கண்களில் இருந்து மாலை மாலையாக கண்ணீர் வழிய அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவராமன் அவன் கைகளைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டு, “என் மனபாரம் இறங்கிடுச்சுப்பா. இனி என் பெண்ணைப் பத்தி கவலைப்படவே மாட்டேன். உன் வார்த்தைகள் எனக்கு ரொம்ப தெம்பாயிருக்கு,” என்று ரொம்பவும் எமோஷனலாகப் பேசிக் கொண்டே மயங்கிச் சரிந்துவிட்டார்.
என்ன முயன்றும் திரும்ப அவரை எழுப்ப முடியவில்லை. கார்டியாக் அரெஸ்ட் என்று ஜெகன் சொன்னபோது உலகமே இடிந்து தலையில் விழுந்ததாக துடித்தாள் யோகம்.
முன்பு போல் இல்லாமல் ஊர்க்காரர்கள் சிலரும் உறவினர்களும் வந்தார்கள். ஒரு மகன் போல நின்று சகல காரியங்களையும் ஜெகன்தான் முடித்து வைத்தான்.
காரியங்கள் முடிந்ததும் உறவுக் கூட்டம் பறந்தது. பொறுப்புகள் ஏதும் தலையில் விழுந்து விடும் என்ற பயம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.