

கோட்ட வூட்டுக்கு முன்னால நின்னுட்டு இருந்தேன்.
பதின்பருவ பெண்ணின் பிடரி மசிரைப்போல பொசபொசன்னு விரவியிருந்த இருட்டு, ராப்பூரா நிழலை விழுங்கியிருக்க, அப்போத்தான் தெளியத் தொடங்கியிருக்கும் நெனப்புத் தப்பினவன் மனசைப்போல சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கிய விடியகால நேரம்.
வெத்தலையைப் பாக்கோட மென்னு சவச்சி எச்சிலோட முழுங்கிட்டு, திண்ணையில கால்நீட்டிட்டு உக்காந்திருக்குறக் கிழவியைப்போல, பல ஆளுங்களையும், காலங்களையும் முழுங்கிட்டு உக்காந்திருக்கு... வானத்தைத் தொட்டுடற மாதிரி உசந்திருந்த அந்தக் கோட்ட வூடு, இதோ இப்போகூட, விருத்தாம்பாவை முழுங்கப் போவுதாம். விருத்தாம்பா என் பெரியப்பன் பொண்டாட்டி, இந்த வூட்டை, இடுப்பு சாவிக்கொத்துல வெச்சிட்டுருக்குற ஆளு. என்னைப் பாக்கணுமாம். ஒருக்கா ஒரு எட்டு வந்து என்னையப் பாத்துட்டு போச்சொல்லுன்னு ஆள் மேல ஆள் விட்டுட்டு இருக்கு. என்னோட அப்பனை, அம்மாவை, பாக்கியம் பெரியம்மாவை, எளயவன், பெரியப்பாவைன்னு எல்லாரையும் பாத்துட்டுது. என்னைப் பாக்க இன்னும் என்ன இருக்கு?