

மீண்டும் மொபைல் ஒலித்தது.
ராகுல்.
''சொல்லு ராகுல்.''
ராகுலின் குரலில் சோகமிருந்தது.
''நாளைக்கு ஊருக்குக் கிளம்பறேன் ஆதி.''
''அவசரப்படாதேடா....''
''எனக்கு வேற என்ன பண்றதுன்னு தெரில. அப்பாட்டச் சொன்னேன். வந்து பிஸினெஸைப் பாத்துக்கோன்னு சொல்றார். அதுவும் சரின்னு பட்டுச்சு. அதான் இந்த ஊர்ல கடைசியா ஒரு தடவை மீட் பண்ணலாம்னு. உனக்கு எதுவும் புரொக்ராம் இருக்கா...?''
''இல்ல. நானும் உன்னத்தான் பாக்கணும்னு நினைச்சேன்.''
''என்ன விஷயம்?''
''நேர்ல சொல்றேன். பீச் வந்துடு. நம்ப ஸ்பாட்.''
வெளியே வந்தான்.
கார் சாவியை எடுத்தான்.
திடும்மென அந்த யோசனை வந்தது. பீச் பக்கத்துலதான். நடந்து போய்டலாம்.
நடக்க ஆரம்பித்தான்.
இன்னும் ஐந்து நாட்கள். வீட்டிலிருந்து பத்து நிமிட நடையில் மெட்ரோ ஸ்டேஷன். அதே மாதிரி கம்பெனியிலிருந்து இருபது நிமிட நடை. மனது நிறைய கணக்குப் போட ஆரம்பித்தது.
பீச்சில் அவ்வளவாகக் கூட்டமில்லை.
ஒரு கூட்டம் அலையில் கால் நனைத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது அலைக்குப் போட்டியாக. எல்லாம் இளைஞர்கள். படித்துக்கொண்டிருப்பார்கள்.