

பேருந்து அந்த நிறுத்தத்தில் நின்ற போது இடது கையும், இடது காலும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவன், தட்டுத் தடுமாறி பேருந்தில் ஏறினான். பார்வையை பஸ்சுக்குள் சுழற்றினான். ஒரு இருக்கை கூட காலியாக இல்லை. அது மட்டும் அல்ல.. நிறைய பேர் நின்று கொண்டு இருந்தார்கள். 'அந்த இருக்கை'யில் கூட ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அல்லது அப்படி நடித்துக் கொண்டிருந்தார். மிகவும் சிரமப்பட்டு வலது கையால் ஒரு இருக்கையின் பின்புறத்தை பிடித்துக் கொண்டு தள்ளாடியவாறே நின்று கொண்டான் அவன். கண்டக்டரும் கண்டுகொள்ளவில்லை மற்ற பயணிகளும் அவன் உட்கார உதவவில்லை.
பஸ் ஏதோ ஸ்டாப்பில் நிற்க, 'தூங்கியவர்' இறங்கினார். அந்த இருக்கையில் அமரப்போன அவன், ஒரு பெண்மணியை பார்த்துவிட்டு, "நீங்க உட்காருங்க அம்மா.." என்று ஒதுங்கி நின்றான். நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண் இவனைப் பார்த்துவிட்டு, "பரவாயில்லை.. நீங்க உட்காருங்க..!" என்றாள்.
அதற்குள் அவசரமாக பஸ்ஸில் ஏறிய ஒருவர் அந்த ஊனமுற்றோர் இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவன் நின்று கொண்டே தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவளும் தான்.
குட்டிக் கதை 2 - பாகப் பிரிவினை:
"என் மொழி, என் இனம், என் நாடு என வாழ விரும்புகிறோம்.. எங்கள் மாநிலத்தை தனி நாடாக பிரித்து விடுங்கள். நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து விட்டு போகிறோம்..."
மேடையில் கம்பீரமாக முழங்கி விட்டு வீடு திரும்பிய தலைவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது..
கையில் பெட்டி, படுக்கையுடன் குடும்ப சகிதமாகக் காத்திருந்த அவரது மகன், "அப்பா.. என் மனைவி, என் குழந்தைகள், என் வீடுன்னு வாழ விரும்பறேன்.. எங்களைத் தனிக் குடித்தனம் போக விடுங்க.. பை த பை, எனக்கு சேர வேண்டிய சொத்துக்களையும் கொஞ்சம் சீக்கிரம் பிரிச்சீங்கன்னா நல்லா இருக்கும்.." என்று சொல்லி விட்டு, இவரது பதிலுக்கு காத்திராமல் கிளம்பினான்..
தலைவருக்கு யாரோ, எதைக் கொண்டோ அடித்தாற் போல் இருந்தது..
"என்ன சமையல் செஞ்சு இருக்க..! எங்க அம்மா எவ்வளவு ருசியா சமைப்பாங்க தெரியுமா..?"
"துணி எல்லாம் சரியாவே துவைக்கிறது இல்லை நீ.. எங்க அம்மா துணி துவைச்சாங்கன்னா பளிச்சுன்னு சும்மா புதுசு மாதிரி இருக்கும்.."
"காலையில வாசல்ல எங்க அம்மா கோலம் போடுவாங்க பாரு.. பிரிண்ட் போட்டது மாதிரி அவ்வளவு அழகா இருக்கும்.. தெருவுல எல்லாரும் பாராட்டுவாங்க.. நீயும் இருக்கியே.. நாலு இழை ஒழுங்கா இழுக்கத் தெரியல.."
பிரகாஷ் எதற்கெடுத்தாலும் தன்னை அவனுடைய அம்மாவோடு ஒப்பிட்டு, இவளை குறைத்துப் பேசுவது சுமதிக்கு எரிச்சலாக இருந்தது.
"மாமியார் கெட்டிக்காரியாக இருக்கலாம் அதற்காக தன்னை மட்டம் தட்ட வேண்டுமா என்ன? என் திறமைகள் அவருடைய கண்களில் படவே படாதா..! மனோதத்துவம் தெரியவில்லையே இவருக்கு" என்று மனதிற்குள் வருந்தினாள்.
எப்படியாவது கணவனுக்குப் புரிய வைக்க வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது செயல்படுத்த திட்டமிட்டாள்.
"என்னங்க எங்க அப்பா மாதிரி எப்ப நீங்க ஆபீஸர் ஆகப் போறீங்க..? எத்தனை நாள்தான் கிளார்க்காகவே இருப்பீங்க..?" என்று ஒரு நாள் கேட்டாள்.
பதில் எதுவும் பேசாமல் போய்விட்டான் பிரகாஷ்.
கிராமத்திற்கு போயிருந்த அம்மாவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த பிரகாஷ் அருகில் வந்து எட்டிப் பார்த்து, "என்னங்க உங்க கையெழுத்து இப்படி கிறுக்கலா இருக்கு.. உங்க அம்மாவுக்கு புரியுமா..? எங்க அப்பாவோட கையெழுத்து எப்படி இருக்கும் தெரியுமா. முத்து முத்தா அழகா, கண்ணுல ஒத்தி வச்சுக்கலாம் போல இருக்கும் தெரியுமா" என்ற மனைவியை கோபத்துடன் முறைத்த பிரகாஷ், அவளது முகத்தில் கேலிப் புன்முறுவலைக் கண்டான்.
'இப்படித்தானே எனக்கும் இருக்கும்' என்றது அவள் பார்வை.
அதன் பிறகு அம்மாவுடன் மனைவியை ஒப்பிட்டுப் பேசுவதை பிரகாஷ் நிறுத்திக் கொண்டு விட்டான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா..!