

"அப்பா இப்படி பண்ணுவாருன்னு ஒரு நொடிகூட நினைச்சு பார்த்ததுகூட இல்லை. வெளியில தலைகாட்ட முடியாதபடி பண்ணிட்டாரு…" புலம்பினான் அசோக்.
"ஏங்க… எங்க ஆபிஸ்ல இன்னைக்கு ரொம்ப நோகடிச்சிட்டாங்க... அப்படிப்பட்ட ஆளை எப்படி வீட்ல வெச்சிருக்கீங்க? உன்கிட்ட எப்படி நடந்துக்குவாரு? வேலையை ரிசைன் பண்ணிடலாமான்னுகூட யோசிச்சேன்… அப்புறம் டிரான்ஸ்ஃபர் கேட்டு இருக்கேன்… எப்படியும் ஒரு வாரத்தில கிடைச்சிடும்…உங்க ஆபிஸ்ல என்ன சொன்னாங்க..?" என்று அசோக்கின் மனைவி நர்மதா அழாத குறையாகச் சொன்னாள்.
"ம்… நானும் டிரான்ஸ்ஃபர் கேட்டு அப்ளிகேஷன் கொடுத்திட்டேன்… கிடைச்சிடும்…" என்று சொல்லி அசோக் சோபாவில் உட்கார்ந்து இருந்த அம்மா சகுந்தலாவை பார்த்தான்.
அம்மா இடிந்துபோய் உட்கார்ந்து இருந்தாள்.
‘பாவி மனுசன் இப்படியா பண்ணுவாரு…? அவருக்கு அவ்வளவு தைரியம் கிடையாதே!
கல்யாணம் ஆனதிலிருந்து இதுநாள் வரை பெண்களிடம் கண்ணியமாக பழகக் கூடியவராச்சே… வயதானா புத்தி தடுமாறி போய்விடுமா?’
சகுந்தலாவின் எண்ணம் தாறுமாறாக ஓடியது.
பதினாறு வயது பேரன் செல்லை நோண்டிக்கொண்டு இருந்தான்.
பத்து நாட்களாகவே சாமிநாதன் ஒரு மாதிரி இறுக்கமாக இருந்தார்.