சிறுகதை: இருக்கு… ஆனா இல்ல...

Horror story
Horror storyImg credit: AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

பவானிசாகர் அடிப்படை பயிற்சி நிலையத்தில் 30 நாட்கள் பயிற்சிக்காக சென்றேன். நாங்கள் மூன்று பேர் கடைசியாக சென்றதால், எங்களுக்கு புதிய கட்டடத்தில் தங்கும் வசதி கிடைக்கவில்லை.

பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர், "இடமில்லையே நீங்கள் திரும்பி சென்று விடுகிறீர்களா?" என்று கேட்டார்.

நாங்கள், "வேண்டாம் சார், இவ்வளவு செலவு செய்து வந்து திரும்பி செல்வது சரியாக இருக்காது சார். ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்தோம்.

"சரி வாங்க! என்று கூப்பிட்டு போய் ஒரு பழைய ஓடு வேய்ந்த கட்டடத்தின் கதவை திறந்து இங்கு தங்கி கொள்ள விருப்பமா?" என்று கேட்டார்.

அறை முழுவதும் தூசி. ஒரே நாற்றம். சகிக்க முடியவில்லை. உடன் வந்த நண்பர்கள் இருவர், "வேண்டாம் சார்" என்றனர்.

நான், "பராவாயில்லை சார். சுத்தப்படுத்த ஒரு ஆளை அனுப்புங்கள்" என்று சொல்லி, சுத்தம் செய்த பின்னர் அறைக்குள் நுழைந்து எங்களது உடமைகளை வைத்துக் கொண்டோம்.

மூன்று கட்டில்கள் ஏற்பாடு செய்தனர். இரவு உணவுக்கு பின் படுத்தோம். தூக்கம் வரவில்லை புரண்டு புரண்டு படுத்தேன். திடீரென மனதில் ஒரே திகிலாக இருந்தது. நண்பர்களிடம், "ஒரே பயம் திகிலாக இருக்கிறது. கட்டிலை வேறு இடத்திற்கு மாற்றிப் போட்டு கொள்கிறேன்" என்றேன். அவர்களும் சம்மதம் என்றார்கள்.

சிறிது நேரத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தோம். மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுந்தோம். காலைக் கடன்களை முடித்த பின் அந்த அறைக்குள் சுற்றி பார்த்தோம்.

அந்த அறை சுவர்களில் 'இந்த கட்டடத்தில் உள்ள அறைகள் அனைத்திலும் பேய்கள் நடமாட்டம் அதிகம்' என எழுதி வைக்கப்பட்டிருந்தது. நாங்கள் பயந்து விட்டோம்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாத்தா பாட்டி ஓட்டுப் போட்ட கதை!
Horror story

இவை அனைத்தும் பெண்கள் கைப்பட எழுதிய வாக்குமூலங்கள். அது முன்னர் பெண்கள் தங்குமிடமாக இருந்துள்ளது. புதிய கட்டடம் கட்டப்பட்டதால் அவர்கள் இங்கு தங்குவதில்லை. அந்த பேய் வீடுதான் எங்களுக்கு வாய்த்தது.

மறுநாள் காலையில் கடைவீதிக்கு சென்று ஒரு அம்மன் படத்தை வாங்கினோம். ஊதுவத்தி பாக்கெட்டுகள் வாங்கினோம். தினமும் குளித்து விட்டு ஊதுவத்தி ஏற்றி விட்டு பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தோம்.

இந்த சூழலில் புதிய கட்டடத்தில் இருந்த ஒரு பயிற்சியாளரை அங்கிருந்தவர்கள் துரத்தி விட, (அவர் தங்கும் அறையில் ஒரு நண்பர் தம்பி, "ஒரு தம்ளர் தண்ணீர் பிடித்து கொண்டு வா” என்று சொல்லி இருக்கிறார். அவர், "நான் செய்ய முடியாது" என மறுத்திருக்கலாம். ஆனால், மறுக்காமல் நல்ல பிள்ளை போல்…. கழிவறைக்குள் சென்று அங்குள்ள குழாயில் தண்ணீர் பிடித்து வந்து தந்திருக்கிறார். அதைப் பார்த்து விட்ட ஒரு பயிற்சியாளர் சக நண்பர்களுக்கு சொல்ல, அவர் துரத்தப்பட்டார்) அவரும் நாங்கள் தாங்கும் இடத்துக்கே வந்தார்.

நாங்கள் பேய் பயத்தில் உள்ள சூழலில் புதிதாய் வந்த அவர் நடு இரவில் பிளாஸ்டிக் கவர்களை எடுப்பதும் திறப்பதுமாய் இருந்தார். அவரிடம் எச்சரித்தும் பயனில்லை. பயம்தான் அதிகரித்தது.

பயிற்சி முடிந்து ஊர் திரும்பும் பொழுது திரும்பவும் அறைகளைச் சுற்றிப் பார்த்தோம்.

”இந்த அறையில் பேய் நடமாட்டம் அதிகம்தான். ஆனால் அவை நம்மை ஒன்றும் செய்யாது. ரொம்ப நல்ல பேய்கள்! இப்படிக்கு பே. ராணி” என்று வெளிப்புற சுவரில் ஓர் ஓரமாக கிறுக்கி இருந்தது.

'அட இந்த வாசகத்தை முன்பே பார்க்காமல் விட்டோமே' என்று சிரித்தவாறு அவரவர் ஊர் திரும்பினோம்.

logo
Kalki Online
kalkionline.com