

காலிங் பெல், தொடர்ந்து விடாமல் ஒலித்தது. தினேஸ் வெறுப்புடன் அறைக்குள்ளிருந்து வந்தான். கதவு திறக்க.. வியப்பு. எதிரில் இருந்தவருக்கோ இவனைப் பார்த்ததும் அதிர்ச்சி. ‘யாரு நீ..’ என்பது போலப் பார்த்தார் இவனை.
“சார்..” தினேஸ் புரியாமல் இழுத்தான்.
அவரோ தினேஸை ஏறஇறங்கப் பார்த்தார். அவனுக்குப் பின்புறமிருந்த வீட்டைப் பார்த்தார். புது நிறத்தில் மின்னிய சுவர்கள், ரேக்குகள், பெரிய வெங்கடாசலபதி படம், பளபள குஷன் சோஃபா.. எல்லாவற்றையும் பார்வையால் அலசிவிட்டு ஒரு மில்லிநொடி யோசித்தார்.
“உள்ளே வாங்க சார். ஏன் அங்கேயே நின்னுட்டீங்க. போன வாரம் ரிஜிஸ்டர் ஆபிஸ்ல அவ்வளவு நெருக்கமாப் பேசினோமே..” என்றான் தினேஸ் அர்த்தத்துடன்.
“ம்..?” என்றார். பெருமூச்சுவிட்டார். “முப்பத்தியஞ்சு வருசம்” முனகினார். அவரின் உடல் நடுங்கியது.
நெருங்கிப் போய் காம்பவுண்ட் ஒட்டியிருந்த ப்ளாஸ்டிக் சேரில் அவரை உட்கார வைத்தான். உள்ளே போய் சுடுதண்ணீர் எடுத்து வந்து குடிக்கத் தந்தான். கேட் திறக்கும் சத்தம் கேட்க.. திரும்பினால் மனைவி சந்தியா. கோவிலில் இருந்து வீடு திரும்பியிருந்தாள்.
இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். ஏதோ கேட்க வந்தவளை பார்வையால் தடுத்தான் தினேஸ். "அமைதியாக இரு" என சைகை செய்தான். அவர் அவளைப் பார்த்தார். தடுமாறி எழுந்து வாசல்நோக்கி நகர்ந்தார். “அய்யா, உங்களை உங்க வீட்டுல விட்டுடவா..?” என்றான் தினேஸ். திரும்பியவர் கைகூப்பி வணங்கிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
“என்னங்க நடக்குது இங்கே..?” புரியாமல் குழம்பினாள் சந்தியா.
”ப்ச், இந்த வீட்டை போனவாரம் நமக்கு வித்ததை மறந்து போய் பழைய நினைப்புல, பழக்கதோசத்துல இங்கே வந்துட்டாரும்மா. நான் கதவைத் திறக்கறேன்.. நீ யார்ரா என் வீட்டுலன்ற மாதிரி என்னை முறைக்கிறாரு பாவம்.” பரிதாபமாகச் சொன்னான் தினேஸ்.