சிறுகதை: அன்பின் சமையல்!

Couple and Mother In Law
Couple and Mother In Law | Tamil sentimental short storyAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

"ஏங்க சாப்பாடு ரெடி. வந்தால் போடுவேன். இல்லை நான் அடுத்த வேலை பார்க்க போயிடுவேன்" என்றாள் வசந்தி.

"இதே என் அம்மா என்ன சொல்லுவாங்க தெரியுமா. ராமு சாப்பிட வாடா. நீங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்ச அப்புறம் தான்டா நான் சாப்பிடனும்னு சொல்லி அழைப்பாங்க" என்றவன் அமைதியுடன் சாப்பிட உட்கார்ந்தான்.

வசந்தி பரிமாறினாள். அன்றைய விசேடம் அவியல்.

அதை ஒரு வாய் சாப்பிட்டவன், "வசந்தி சூப்பர்! வர வர நீயும் என் அம்மா ரேஞ்சுக்கு வந்துட்டே. அம்மா இன்னும் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் விட்டிருப்பாங்க. அவியலும் கமகமன்னு இருக்கும். பரவாயில்லை. அடுத்த முறை நீயும் சரியாயிடுவே," என்றவன் சாப்பிட்டு முடித்தான்.

திடீரென்று விக்கல்.

"வசந்தி கொஞ்சம் தண்ணீ தர்றியா" என்றான்.

"ஏங்க சாப்பிட உட்கார்ரச்சயே தண்ணீர் வெச்சிட்டு உட்காரனும்னுட்டு தெரியாது" என்றவள் உடன் சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் கொண்டு வைத்தாள்.

"சாரி வசந்தி. என் அம்மா சாப்பாடு போடும் முன்னாலயே முதலில் தண்ணீர் வெச்சுட்டுதான் பரிமாறவே செய்வாங்க. நானும் அந்ந ஞாபகத்தில் இருந்துட்டேன்."

வசந்தி துர்க்கையானாள்.

"அது என்னங்க எதுக்கெடுத்தாலும் அம்மா, அம்மா, அம்மான்னுகிட்டு. உங்களை மாதிரி அம்மா பைத்தியங்களுக்கெல்லாம் கல்யாணமே செஞ்சு வெச்சிருக்கக்கூடாது. ஒரு வாட்டியாவது என்னை புகழ்ந்து பேசி இருப்பீங்களா. ஏதாச்சும் ஒண்ணு நல்லா இருந்துச்சுன்னா அதிலயும் உங்க அம்மா வந்து நுழைஞ்சுப்பாங்க." அவள் கடுகடுத்த முகத்தை வைத்துக்கொண்டு ஒரு வழியாக அவன் சாப்பாட்டை முடிக்கும் போது செல்போன் பாடியது.

வசந்திதான் எடுத்தாள்.

"ஏங்க உங்க தம்பிதான் ஊரிலேருந்து பேசறாரு."

அவன் உடனே செல்லை வாங்கி பேசினான்.

“அண்ணா, அம்மா ரொம்ம முடியாம இருக்காங்க. சுரம் தலைவலின்னு இல்லை. ஒரு மன அழுத்தம் அல்லது மன இறுக்கம்னு டாக்டர் சொல்லறாரு. அப்பா இருக்கும் வரை நல்லா இருந்தாங்க. அப்பா போனதும், நீ வேறு ஊரில் இல்லியா அதான் மனரீதியான பாதிப்பு. எப்பவும் ராமு ராமுன்னு உன்னைத்தான் சொல்லிக்கிட்டே இருக்காங்க. நீ ஒரு வாட்டி ஊருக்கு வந்து ஒருவாரம் அம்மா கூட இருந்துட்டு போனா கொஞ்சம் சமாதானம் ஆவாங்க. உன் மனைவிக்கு ஏதாச்சும் பிரச்சனைனா நீ மட்டுமாவது வந்துட்டு போங்க அண்ணா” என்றான் தம்பி கணேஷ்.

"வசந்தி நான் அம்மாவை பார்க்க போக முடிவு செய்துட்டேன். நீயும் வருவே இல்லே."

"ஏங்க வெறும் வாயை மெல்லும் உங்களுக்கு அவுல் கிடைச்சா எப்படி இருக்கும். நித்தம் பொழுது விடிஞ்சா என் அம்மா அம்மான்னு சொல்லிட்டே கிடப்பீங்க. இப்ப நேரிலயே பார்க்கப்போறீங்க. என்ன இருந்தாலும் நான் பெண்டாட்டியாச்சே. நான் மட்டும் தனியா இருந்து என்ன செய்ய. பிள்ளைகளை அழச்சிட்டு போவோம்" என்றதும் உடன் விமான டிக்கெட் டெல்லியில் இருந்து தன் ஊர் திருச்சிக்கு வாங்கினான்.

வந்தாகிவிட்டது. விடியற்காலைதான். ஆனால் வீடு முழுவதுமாக விழித்து இருந்தது.

"ஏன்டா கணேசா ஏன் எல்லாரும் அதுக்குள்ளாற எழுந்துட்டீங்க" என்றபடி வீட்டினுள் சென்றான்.

"தூங்கினாதானே எழறதுக்கு. நீ விடியற்காலை வந்துருவேன்னு அம்மா சொல்லி சொல்லி யாரும் தூங்கவே இல்லியே" என்றான் தம்பி கணேஷ்.

"அம்மா" என்று ஓடியவன் தாயை கட்டி அணைத்துக்கொள்ள தாய் மகிழ்ந்தபடி அவன் தலையை வருடிவிட்டு இன்னொரு கையாலே தன் பேரப்பிள்ளைகளை பிடித்து கொஞ்சினாள்.

அம்மா… என்று அழைக்கவும், "வா வசந்தி நல்லா இருக்கியா என்று கேட்டு அடியே புவனா எல்லோருக்கும் காப்பி போட்டு கொண்டுவா" என்றாள்.

கணேஷ் மனைவி புவனா உடன், "சரி அத்தே" என்று ஒடி அணைவருக்கும் காப்பி கொடுக்க அம்மாதான் பேசினாள்.

"ராமு இன்னிக்கு நீ நம்ம முக்கு பிள்ளையாருக்கு சின்னதா ஒரு அபிஷேகம் குடும்பத்தோடு செஞ்சுட்டு வந்துருடா."

"சரிம்மா ஒரு வாரம் இருப்பேன். மொதல்ல முக்கு பிள்ளையாரையும் பார்த்தா போச்சு" என்றான்.

முக்கு பிள்ளையாருக்கு தடபுடலாக அபிஷேகம். புவனா மற்றும் ராமுவின் அம்மா தவிர அணைவரும் கோயில் சென்றிருந்தனர். சமைக்க வேண்டும் என்பதற்காக புவனா வீட்டில் இருந்து விட்டாள்.

இப்போது சாப்பாட்டு நேரம். அம்மா கட்டிலில் அமர்ந்த படி பார்த்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள்.

சாப்பாட்டில் விசேஷம் ராமுவுக்கு பிடித்த அவியல்.

"புவனா நீ அம்மாவோட இருந்து இருந்து நல்லாவே தேறிட்டே. அவியல் பிரமாதம்" என்று ஒரு பிடிபிடித்தான் ராமு.

அம்மாவிடம் உறவு விஷயம், அலுவலக விஷயம், ஊர் விஷயம், எல்லாம் ஒவ்வொன்றாக பேசி மாலை வசந்தாவின் நச்சரிப்பால் புவனா தவிர அணைவரும் சினிமா செல்ல வேண்டியதாயிற்று.

"புவனா. காலை சாப்பாடே இன்னும் நாக்கை விட்டு போகலே. அதனால் இரவு லைட்டா டிபன் செய்துரு போதும்" என்று ராமு கூறவும் சரிங்கண்ணா என்றாள் புவனா.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பாரம்!
Couple and Mother In Law

சினிமா முடித்து வந்ததும் இரவு டிபன்தான்.

என்ன டிபன் என்றதுமே, உட்காருங்கள் என்று கூறி அணைவருக்கும் டிபனை போட, அதிர்ந்தே போயிட்டான் ராமு. ஆம் அது அவனுக்கு பிடித்த பால் கொழுக்கட்டை. "அய்யோ என்ன அமர்க்களம்" என்றவன், "வசந்தா இது எனக்கு ரொம்ப பிடிக்கும்னுட்டு அம்மா செய்ய சொல்லியிருகாங்க" என்றவன் புவனாவுக்கு ஒரே பாராட்டுதான்.

வசந்தாவும் அதன் டேஸ்ட் மிகவும் பிடித்து போக அதை எப்படி செய்வது என்று கேட்டுக்கொண்டாள்.

ஒவ்வொரு நாளும் ராமுவுக்கு பிடித்த சாப்பாடு. டிபன்தான். ஒரே மகிழ்ச்சி. கொண்டாட்டம்.

"அண்ணா நீ வந்தப்பிறகுதான் அம்மாவின் முகமே மாறி மலர்ச்சியா இருக்காங்க. அதுக்குத்தான் டாக்டர் அறிவுறுத்தலின் பேரில்தான் உன்னை வரச்சொன்னேன். அது பலித்து விட்டது. நாளை நீ ஊர் போக வேண்டும். அம்மாவிடம் ஆறுமாதம் ஒரு முறை வந்து பார்க்கிறேன் என்று செல். அப்பத்தான் அம்மாவும் மனசு சந்தோஷப்படுவாங்க" என்றான் கணேஸ்.

ராமுவும் அம்மாவிடம் தன்நம்பிக்கையுடன் இருக்கும்படி கூறி ஆசியும் பெற்றான்.

கடைசி நாள். இரவு விமானம் மூலம் டெல்லி செல்ல வேண்டும். வசந்தா, புவனாவை அழைத்தாள்.

"என்ன அக்கா."

"புவனா இன்றைக்கு ஒருநாள் உனக்கு பூரண ஒய்வு. ஒரு வாரம் நாங்கள் எல்லாம் கோயில், நண்பர்கள் வீடு, பர்சேஸ், என்று போக நீ சமைத்து சமைத்து ஓய்ந்து விட்டாய். அதனால் நான்தான் இன்று சமையல்" என்றதும் புவனா சிரித்துக்கொண்டே "அக்கா உங்க தயவால எனக்கு இந்த ஒரு வாரமும் ஓய்வுதான். ஆமாம் நான் கிச்சன் பக்கமே வரலே" என்றாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: மனமாற்றம்
Couple and Mother In Law

"என்ன சொல்றே. அப்ப எங்காச்சும் ஆர்டர் போட்டு வாங்கினியா?"

"அய்யோ வெளி சாப்பாடெல்லாம் அத்தைக்கு ஒத்துக்கவே ஒத்துக்காது."

உடன் குறுக்கிட்ட ராமு "புரியலியே நீ சொல்வது" என்றான்.

"ஆமாண்ணா. ஒரு வாரம் நீங்க வந்த மகிழ்வில் சமைத்தது முழுக்க அம்மாவேதான். ஆனா, தான், சமைத்ததா சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதான் நானும் சொல்லாமல் இருந்தேன். ஆனாலும் மனசு கேட்கலே சொல்லிட்டேன். நீங்க அணைவரும் ருசித்து ருசித்து சாப்பிட்ட சமையலும் சரி, பலகாரமும் சரி, எல்லாமே அத்தை கைவண்ணத்தில் செய்ததுதான்" என்றதும் ராமு கண்கள் கலங்கின. அதைவிட வசந்தி அழுதே விட்டாள்.

தன் தாயைப்போல் நினைத்தவள், "அம்மா" என்று கைபிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு, "என்ன இருந்தாலும் எத்தனை வயதில் ஒருமகன் இருந்தாலும், தாய்க்கு உள்ள பாசமும் அன்பும் போகுமா. முடியாத நிலையிலும் தன் அன்பு மகனுக்காக பிடித்ததை எல்லாம் பார்த்து பார்த்து செய்த நீங்கள் கிரேட் அம்மா" என்று தன் மாமியார் கரங்களை தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

"அசடு அசடு நான் என்ன கைகால் இழுத்து முடங்கியா போயிட்டேன். என் மகனுக்கு பிடிச்சதை சமைச்சு போட தெம்பு வேணும். அது எனக்கு ஆண்டவன் அனுக்கிரகத்துல இருக்கு. இதெல்லாம் எனக்கு மனசுக்கு ஆனந்தம்மா என்றவள், சரி வசந்தி இன்னிக்கு நீதானே சமையல். ஒரு வாரமா கடினமான உணவா சாப்பிட்டு வயிறு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கும். அதனால ஒரு மிளகு குழம்பு, சீரக ரசம் வெச்சிரு. தொட்டுக்க சுட்ட அப்பளம் போதும்."

அவ்வளவுதான் அன்று அணைத்தும் அம்மா சொல்லியபடிதான் நடந்தது.

கணேசுக்கு அம்மா பழையபடி ஆனதில் அவ்வளவு சந்தோஷம்.

அம்மாவின் உடல் நிலை தேறியது.

வசந்தியின் மனநிலையும் மாறியது.

அந்த திருப்தியுடன் ராமுவின் மனமும் மகிழ்வில் திளைத்தது.

அவர்கள் பயணமும் துவங்கியது.

logo
Kalki Online
kalkionline.com