

நர்மதாவிற்கு அண்ணன் மனோஜ் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே மனதில் ஒரே குழப்பமாக இருந்தது.
சனி, ஞாயிறுகளில் சாயந்திர நேரங்களில் வாக்கிங் செல்வது போல, இரண்டு தெரு தள்ளி உள்ள அண்ணன் வீட்டிற்கு வாரம் ஒருமுறை விசிட் அடிப்பது நர்மதாவின் பழக்கம். வழக்கம் போல நேற்று முன்தினம் அங்கே சென்ற போது, அங்கே நடந்த நிகழ்வுகள்தான் அவளின் குழப்பத்துக்கு காரணம்.
மனோஜின் மகனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன.
சென்னையைச் சேர்ந்த மருமகள் பூர்ணா நல்ல படிப்பும் அழகும் கொண்டவள்.
IT கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் பெண்.
நர்மதா எப்போது அங்கு சென்றாலும் அவள் அன்பாக பேசுவாள். ஆனால் வீட்டு வேலைகளில் பவி அண்ணிக்கு உதவுவதை பார்த்தது இல்லை. ஆனால் அண்ணி பவித்ரா, மகனையும் மருமகளையும் நன்றாக பார்த்துக் கொள்வார். காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் சளைக்காமல் செய்பவர்.
ஒரு பெரிய அலுவலகத்தில் மேனேஜராக இருந்தவர், மகனின் திருமணத்திற்கு பிறகு விருப்ப ஓய்வு பெற்றார். அதே சமயம் வீட்டில் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பார்.