

இந்தக் கதையின் தலைப்பு கொஞ்சம் நீளம் தான்.
இருந்தாலும், கர்னல் கந்தசாமி தன் பார்க் நண்பர் குப்புசாமியிடம் ஆப்பிரிக்காவில் ஒரு கலகப் படையிடம் மாட்டி, தப்பி வந்த விதத்தை விளக்கியதை விட சிறியதே.
அந்த நாட்டில் கலகப் படை, வயசான ஜனாதிபதியை பிடித்து வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிரகடனம் செய்தது.
அவர்களை அடக்கி ஜனாதிபதியை மீட்டு திரும்ப ஆட்சியை ஒப்படைக்க ஐ. நா முடிவு செய்ததாம்.
ஐ. நா அனுப்பிய படையில் கந்தசாமி சென்றார்.
சிவிலியன் உடையில் முப்பது வீரர்களுடன் வானத்தில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தார்...
எல்லோர் பாராசூட்டும் விரிய இவருடையது மட்டும் விரியவில்லை..
அதோகதி என்று இரு கை கூப்பி "பிள்ளையாரப்பா! காப்பாற்று", என்றார் மணக்குள வினாயகரை வேண்டிக்கொண்டே... விழுந்தபடி.
இவர் மட்டும் விழுந்த இடம் ஜனாதிபதி மாளிகை நீச்சல் குள தண்ணீரில்.
நீச்சலடித்து மேலேறி சட்டை ஈரத்தைப் பிழிந்தபோது கலகத் தலைவன் மனைவி பார்த்து விட்டாள். இவர், "வணக்கம் ராணி.. முக்கிய செய்தி. நான் உங்க பாட்டி வீட்டில் இருந்து வர்றேன்" என ஒரு சல்யூட் அடித்தார்.
அவள் கலகத் தலைவனின் ஏழாம் மனைவி கலாராணி... அவள் மூதாதையர்கள் தமிழ் நாட்டில் இருந்து அங்கே பணி செய்யப் போனவர்கள். அவளுக்கு தமிழ் தெரியும்.
நம் வம்ச ஆளா... வியந்த அவளிடம் கந்தசாமி, "நான் நன்றாக சமைப்பேன்... மை குட்னஸ்... சாம்பார் வைத்தால் ருசிக்கும்."
இதைக் கேட்டதும் கலாராணி கை கூப்பி "கடவுளே உன் கருணையே கருணை... என் பிரார்த்தனை இத்தனை சீக்கிரமா பலிக்கும் என்று நினைக்கவே இல்லை" என்றாள்.
கலாராணி பிரார்த்தனை இதுவே..
கலகத் தலைவன் சாப்பாடு தினம் நான்-வெஜ் தான். அதிலும் கொடூர மெனு..
அங்கே சைவ உணவு சாப்பிடுபவள் கலாதான். ஒரே மெனு தான்... அரிசிக் கஞ்சி, பார்லி கஞ்சி. சமையல் காரனுக்கு வேறு தெரியாது. தவித்துப் போனாள்.
நாக்கு செத்துப் போன கலா, கடவுளை மனமுருகி வேண்டினாள். "ஒரு நல்ல சமையல் காரனை அனுப்பி வை..."
கந்தசாமி அவளை வணங்கி "கிச்சனைக் காட்டுங்கள் முதல் மெனுவாக பூரி, பொங்கல், வடை, ரவா தோசை அரை மணியில் ரெடி பண்ணுவேன்."
"கடவுளே உன் கருணையே கருணை" என்று கலா வியந்தாள்.
கிச்சனைக் காட்டியதும் கந்தசாமி புகுந்து விளையாடினார்.
கதையைக் கேட்ட நண்பர் குப்புசாமிக்கு லேசாக பிடிபட்டது உண்மை..
ஆக, கர்னல் கந்தசாமி அவர் சர்வீஸில் சுடுவதற்கு பயன் படுத்தியது துப்பாக்கி அல்ல... சாரணிக் கரண்டி, தோசை திருப்பியே!
சமையல் நடந்து கொண்டிருந்த போது அங்கே வந்த கலகத் தலைவனிடம் கலாராணி, "இந்தியா சமையல் காரர் இவர்தான்... கந்தசாமி. பாட்டி அழைச்சுவந்தாங்க."
அவன் இவர் சுட்ட பூரி கிழங்கை ருசித்து "கிலே கிலே" என்றான்.
கலா, "பலே பலே" ன்னு ராஜா சொல்றார்... என மொழி பெயர்த்தாள்.
பணிவுடன் இவர் வணங்கினார். தலைவன் பையில் கையை விட்டு ஒரு தங்க மோதிரத்தைத் தூக்கிப் போட்டான்.
"இது தான் அந்த மோதிரம்" என காட்டினார் குப்புசாமியிடம்.
வாங்கி உற்றுப் பார்த்த குப்பு அதில் "அரியலூர் கல்யாண ராமன் ஜுவெல்லர்ஸ்", என்ற ஸீலைப் பார்த்தார்.
அதற்குப் பின் இவர் ஜனாதிபதியை மீட்டாரா... கலகத் தலைவன் என்ன ஆனான்...?
"இருட்டிப் போச்சு... நாளைக்கு சொல்றேன்."
குப்புசாமி "சரிசார்.. நாளை பார்ப்போம்..."
கந்தசாமிக்கும் யோசிக்க டயம் தரணும் தானே.
கமலாவிடம் இந்தக் கதை முழுவதும் சொன்னார்.
கேட்டுவிட்டு கமலா, " உங்க பிரெஞ்ச் ஆர்மிக்காரரிடம் வெஜ் குருமா வைக்கிறதைப் பற்றி கேட்டு வாங்க... ஆர்மி குருமா நல்லா டேஸ்ட்டா இருக்கும்ன்னு பங்கஜம் சொன்னாள்."