

காந்தி ரோடு, திரு.வி.க. பூங்காவில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து கொண்டு சுற்றிலும் உள்ள மனிதர்களை அவதானித்துக் கொண்டிருந்தார் எழுபது வயது விஜய், சாத்வீகம் ததும்பும் ஒரு மனிதனின் கோர முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பதையறியாமல்.
ரிடையர்ட் ஆகியும் இன்னும், இன்றும் அதே வாத்தியாரம்மா தோரணையில் பேசும், நடக்கும் முன்னாள் ஆசிரியை;
'ஆறுமாசம் அமெரிக்கா ஆறுமாசம் இந்தியா' என்று காலம் தள்ளும் அறுபது வயது அருண்குமார்;
கையில் ஒரு பையுடன் தவறாது நூலகம் வந்து பத்திரிக்கைகள் வாசிக்கும் வளையாத முழங்காலில் பேண்டேஜ் போட்ட முத்துசாமி;
என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்...
வலது பக்கம் 'ஷியாமளா டவர்ஸ்' அடுக்குமாடி வீடுகளில் இருந்து பரபரப்புடன் 'பைக்'கில் பறக்கும் இன்போசிஸ் இளைஞன்;
வெய்யில், புழுதி மற்றும் காமக் கண்களிருந்து தப்பிக்க தீவிரவாதி போல உடலெல்லாம் உடையால் மறைத்துக்கொண்டு அவசரகதியில் 'ஆக்டிவா'வில் அதிரடியாகக் கிளம்பும் மத்தியதரக் குடும்பப் பெண்மணி...
என்று மனிதர்களின் வாழ்க்கைத் தேடல்களை கவனித்துக் கொண்டிருந்தார் விஜய், உடற்பயிற்சியுடன்.