

சமயலறையிலிருந்து டம்பளர் ஒன்று 'விர்' என்று காற்றில் பறந்து வந்து 'ணங்க்' என்று எதிர் சுவற்றில் மோதி தரையில் வீழ்ந்து கணகண வென்று சுழன்றது.
அகிலா அழகும் புத்திச்சாலியுமான பெண்தான். அவள் அழகைப்பார்த்து மயங்கித்தான் அவளை கல்யாணம் செய்து கொண்டான் முரளி. பின்னால்தான் தெரியவந்தது அவள் பிடிவாதமும் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் கொண்டவள் என்று. முரளி அவளை சமாளிக்கத் திணறிக் கொண்டிருந்தான்
முரளி “ஏய் அகிலா, அடுத்த வாரம் ஊருக்குப் போகலாம் என்றால், ஏன் அழும்பு பண்றே. இவ்வளவு கோபம் ஆகாது உனக்கு. ஆபீசில் ஆடிட் நடக்கிறது என்றால் கேட்கமாட்டேங்கிறே!!” என்று அதட்டினான்.
“உங்க ஆபீசும் ஆடிட்டும்! எப்பப்பாத்தாலும் இது ஒரு பதில். நாளைக்கு எங்க அப்பாவின் முதல் வருஷ திதி. அம்மா வரச்சொல்லி போன் செய்தாள். உங்களுக்கு அது முக்கியமில்லை. உங்க ஆபீசும் ஆடிட்டும்தான் முக்கியம். நீங்க வரவேண்டாம். ஆபீசை கட்டிண்டு கிடங்கோ. நான் போறேன்" என்று சொல்லி அகிலா நாலு வயது குழந்தை ரகுவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். கோபத்தில் அவள் முகம் வசீகரம் இழந்து காணப்பெற்றது. முரளியும் பயந்து போய் பேசாமல் இருந்து விட்டான்.