

வருஷம் ஒன்று உருண்டு ஓடிவிட்டது. காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கோபால்சாமிக்கு அதில் ஒரு கட்டமிட்ட செய்தி அவர் கவனத்தை ஈர்த்தது. அதைப்படித்துவிட்டு ‘காமு காமு’ என்று அலறிக்கொண்டு உள்ளே ஓடினார்.
காமு என்கிற காமாக்ஷி அடுக்களையிலிருந்து என்னமோ ஏதோ என்று புடவைத்தலைப்பில் கையைத் துடைத்துக்கொண்டு கூடத்துக்கு ஓடிவந்தாள். கூடத்துக்கு வந்த கோபல்சாமி "பேப்பர்லே ஒரு செய்தி வந்திருக்கு பார்! யாரோ செத்துப்போனவன் மயானத்துக்கு கொண்டுபோகும்போது உயிரோடே எழுந்து விட்டானாம்! தூக்கிண்டு போனவங்க அப்படியே போட்டுட்டு ஓடிப்போயிட்டாங்களாம்! தீச்சட்டி தூக்கிண்டு போன அவன் புள்ளையும் தீச்சட்டியை போட்டுட்டு ஓடிப்போய் விட்டானாம்! கட்டம் போட்டு நியூஸ் போட்டு இருக்கான்! இதோ பார்!" பேப்பரை அவளுக்குக் காண்பித்தார்.
‘”ஐய்யே, இதுக்குத்தான் இப்படி கூச்சல் போடுறீங்களாக்கும்!? நான் பதறிப்போய் ஓடிவரேன்! காலங்காத்தாலே வேறே வேலை இல்லையா உங்களுக்கு? வெள்ளிக்கிழமையும் அதுவுமா சாவு, மயானம்னு..! பேப்பரை தூக்கிப்போட்டுட்டு வேறே வேலையிருந்தால் போய் பாருங்கோ..! " என்று அதட்டி விட்டு மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள் காமு.
“அதுக்கில்லே காமு, என் மனசுலே ஒண்ணு நினைத்தேன், இது போல நம்ம கோதண்டராமனும் உயிரோடு வந்தால்..?.”
“ஊயிரோடு வந்தால்?"
“அந்த ஐந்து ரூபாயை கேட்டு வாங்கிடலாமில்லையா?”
"ஐயே… உங்க அல்பபுத்தி இன்னும் உங்களை விட்டு போகலயா? பாவம், அவர் செத்துப்போய் ஒரு வருஷமாச்சு! இப்ப அந்த ஐந்து ரூபாய்க்கு இப்படி அலையரீங்க… எனக்கு வெட்கமா இருக்கு.”