

என் தங்கை தீபிகா யாரோ ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனுடன் அவளை இரண்டு, மூன்று இடங்களில் சேர்த்து வைத்து பார்த்ததாகவும் என் காதில் அதிர்ச்சித் தகவல்கள் விழுந்த போது நெஞ்சு கொதித்தது.
போன வருடம் தான் பனிரெண்டாவது முடித்திருந்தாள். முடிக்கக் கூட இல்லை. இரண்டு பாடங்களில் அவுட். (தமிழ் உட்பட)
‘தையல் கற்கிறேன், அழகுக் கலை பயில்கிறேன்’ என்று ஆர்வக் கோளாறில் குதித்தவளை ‘கொஞ்ச நாட்கள் அமைதியாக இரு’ என்று நான் தான் அடக்கி வைத்திருந்தேன்.
சுயஅலங்காரம் செய்து கொள்வதில் பிரியம் அதிகம். பீரோவில் வழிய வழிய ஆடைகள் நிரப்பியிருக்கிறாள். கப்போர்டு ரேக்கில் ஏதேதோ கச்சாமுச்சா ஃபேன்சி பொருட்கள். எப்போதும், எங்கேயாவது பரபரப்பாக போய்க் கொண்டே இருப்பாள்.
உடன் படித்த தோழிகள் அருகிலிருந்த கம்பெனிகளில் வேலைக்குப் போக.. சுதந்திர ஆசையில் ‘நானும் வேலைக்குப் போவேன்..’ என அடம்பிடித்தாள்.