

ரிடையர்டு ப்ரொஃபஸர் தர்மராஜன் போனில் தன் பிள்ளையிடமிருந்து வந்த செய்தியை படித்ததும் மனமுடைந்து போனார். நிறைய செலவழித்து நல்ல இடத்தில் மணமுடித்து, தன் செல்வாக்கினால் பெரிய பதவியில் அமர்ந்த தன் மகன் இப்படி அப்பட்டமாக பதில் தருவான் என்று எதிர்பார்க்கவே இல்லை.
மேலும் வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் தர்மராஜனுக்கு தனது மனைவியின் உடல்நிலை மிகுந்த கவலையை அளித்துக் கொண்டிருந்தது. பென்ஷன், சொந்த வீடு கொஞ்சம் பேங்கில் பணம் ஆகியவைகளால் பொருளாதார நிலையை சமாளிக்க முடிந்தாலும், வயது முதிர்ச்சி, தனிமை வாழ்க்கை ஆகிய சூழல் மனதில் கவலையை அளித்துக் கொண்டிருந்தது.
மனிதன் பதவியில் இருக்கும் பொழுது இருந்த கௌரவம், மதிப்பு, மரியாதை எல்லாம் ரிடையரானபின் பரிபோய்விடுகிறது. உறவெல்லம் அற்றகுளத்தில் அருநீர் பறவைபோல் உற்றுழித்தீர்ந்தனர். எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டனர். வயது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் தோற்றம் வசீகரம் எல்லாவற்றையும் பாழ்படுத்துகிறது. நாம் அலட்சியப்படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம் மேலொங்கி நிற்பதால் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள்.
அந்த நிலையில் மகனை வந்து போகும்படியும், மனைவியின் உடல்நிலை மோசமாகி வருகிறது என்றும் போனில் பேசினார்.
'ஆகட்டும் லீவு போட்டு விட்டு வருகிறேன்' என்று சொன்னவன் சற்று நேரம் கழித்து செய்தி அனுப்பிவிட்டான்.
'அடிக்கடி இப்படி வந்து போய்க்கொண்டிருக்க முடியாது, அடிக்கடி லீவுபோட்டால் ஆபீசில் என்னுடைய முன்னேற்றம் தடைபடும். என் மனைவிக்கும் உடல் நிலை சரியில்லை. பையனின் படிப்பையும் கவனிக்க வேண்டியுள்ளது. நான் அடிக்கடி வருவது சாத்தியமில்லை… உதவிக்கு யாரையாவது வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள். அல்லது நிறைய முதியோர் இல்லங்கள் தோன்றியுள்ளன. அவர்கள் நன்றாக பார்த்துக் கொள்ளுவதாக கேள்வியுற்றேன். நல்ல முதியோர் இல்லமாக தேர்வுசெய்து சேர்ந்து கொள்ளுங்கள். அதுதான் நல்லது; என்னுடைய எம்.டி கூட தன் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில்தான் சேர்த்திருக்கிறார்.' என்று செய்து அனுப்பிவிட்டான்.
பற்றற்ற இந்த செய்தியை அவர் எதிர்பார்க்கவில்லை. தன் மகனா இப்படி? முதலில் சரி என்று சொன்னவன் இப்பொழுது ஏன் இந்த மனமாற்றம்? அவருக்குப் புரியவில்லை. மனமுடைந்து போனார்.
தள்ளாத உடல் நிலையுடன் நோயுற்ற மனைவியுடன் காலம் தள்ளிவந்தார். ஒரு நாள் டி.வி.யில் தமிழ் பேச்சாளர் ஒருவரின் உரையை கேட்டார்.