

இன்று வள்ளி அக்காவின் மகனுக்குப் பொண்ணு பாக்கக் கெளம்புறோம். அவனியாபுரத்தில் வரன். எங்கள் ஆண்டார்கொட்டாரத்திலிருந்து அந்த ஊரு பத்துக் கிலோமீட்டருக்கு உள்ளாறதான் இருக்கும்.
ஷேர் ஆட்டோல, அம்மா, நான், வள்ளியக்கா, செல்வியக்கா, அவளோட புருஷன் கணபதி, அப்புறம் டிரைவர் பக்கத்துல மாப்பிள்ளப் பையன் தினேஷ்.
ரொம்ப வருஷம் களிச்சி வள்ளியக்கா நல்ல சீல உடுத்திப் பாக்கறேன். மொகத்துல கொஞ்சம் சிரிப்பு கூட இருக்கு. செல்வி போல தலைல கொஞ்சம் பூ வச்சிருந்தா இன்னும் அளகா இருக்கும் வள்ளி. ஆனா யார் சொன்னாலும் வெச்சுக்காது.
நாங்க பொறந்து வளந்த நெருஞ்சிக்குடி முள்ளா மாறி எங்களைப் பேத்து எடுத்து ஆண்டார்கொட்டாரத்துல போட்டு இருபத்தேளு வருஷம் ஓடிப்போச்சு.
எல்லாம் இருபத்தேளு நாளுக்கு முந்தி நடந்தா மாரி நெஞ்சில இருக்கு.
அன்னிக்கி அக்காவை அடிக்கும்போது அம்மா நெலையிலேயே இல்ல. நானும் செல்வியும் தடுக்கப் போம்போது அக்காவை எட்டித் தள்ளி அறைக்குள்ளாற இளுத்துட்டுப் போயிருச்சு.
கதவைத் தெறக்காதபடிக்குச் சாத்திருச்சு. எதையோ சொல்லிச் சொல்லிக் கன்னத்தில அறையுது.
‘இந்த வயசுலயே கேக்குதா?‘ன்றது மட்டுந்தா வெளிய எங்க காதுக்குக் கேக்குது.
என்ன கேக்குது அக்காவுக்குன்றது கேக்கவும் இல்ல. புரியவும் இல்ல. அம்மாக்குப் புடிக்காத ஏதோ தப்பான காரியம் பண்ணிருக்கு வள்ளி அக்கா. அது மட்டும் நிச்சயம்.
அன்னி வரைக்கும் அம்மா எங்க மூணு பேரையுமே அடிச்சதேயில்ல. கொறைஞ்ச பட்சம் திட்டும். கத்தும். அவ்ளோதான்.
அப்பா கட்டட மேஸ்திரி. நல்லா குடிப்பாரு. ஒரு நா சாரத்துலேருந்து விளுந்திட்டாரு. பத்து நாள் திருச்சி கவர்மன்ட் ஹாஸ்பிட்டல்ல வச்சு பாத்துச்சு அம்மா. அப்புறம் வீட்டுக்கு வந்து ஒரு மாசம் இருந்தாரு. அவ்ளோதான்.
அத்தோட எங்களுக்கு அம்மா தான் எல்லாம். அப்பா இருக்கும்போதே பூ வியாபாரம் செஞ்சிது அம்மா. அவரு போனபிறகு பூவோடு காய்கறி பழ வியாபாரம் எல்லாம் சேத்துக்கிச்சு.
நாங்க மொத்தம் மூணு பேரு. அடிவாங்குன வள்ளி அக்கா மூத்தது. அப்போ பத்தாவது படிக்கிது. அடுத்தது செல்வி. அது எட்டாவது. நான் ரெண்டு பேருக்கும் கடைக்குட்டித் தம்பி மணிகண்டன். ஐந்தாவது வகுப்பு. மூணு பேருமே கவர்மென்ட்டு ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தோம்.