புதுச்சேரியில் பாடப்படும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் எது? அதை எழுதியது யார்?

Manonmaniyam Sundaranar and Bharathidasan
Manonmaniyam Sundaranar and BharathidasanCredits: annacentenarylibrary
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள், 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட புகழ் பெற்ற நாடக நூலான ‘மனோன்மணீயம்’ எனும் நூலில் உள்ள பாயிரத்தில் இடம் பெற்ற 'தமிழ்த் தெய்வ வணக்கம்' எனும் தலைப்பிலுள்ள ஒரு பகுதியினை, கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு மார்ச்11 அன்று 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலாகத் தேர்வு செய்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து விழாக்களிலும், விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடும் வழக்கம் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில், ‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இடம் பெற்று வருவது சரி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான, புதுச்சேரியில் பாடப்படும் ‘தமித்தாய் வாழ்த்து’ பாடல் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?

புதுச்சேரியில், கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘இசை அமுது’ என்னும் பாடல் தொகுப்பிலுள்ள இரண்டாம் பகுதியின் முதல் பாடலான, ’வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்று தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாலாகவும், மாநிலப் பாடலாகவும் அமைந்திருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்க அரசியல் வரலாற்றில் இப்படியும் ஒரு ஒற்றுமையா? ஆச்சரியம், ஆனால் அத்தனையும் சரித்திர உண்மை!
Manonmaniyam Sundaranar and Bharathidasan

“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே

மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே

வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!

வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ

தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ

சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்

தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே உயிரே நறுந் தேனே

செயலினை மூச்சினை உனக்களித் தேனே

நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது

மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது

செந்தாமரைக் காடு பூத்தது போலே

செழித்த என் தமிழே ஒளியே வாழி!

செழித்த என் தமிழே ஒளியே வாழி!

செழித்த என் தமிழே ஒளியே வாழி!”

எனும் இந்தப் பாடலுக்கு,

“வாழ்க்கையை நேர்மையானதாக, அழகானதாகச் செய்பவள் நீயே. நிறைவான புகழுக்குரியவள் நீயே, என் தமிழ்த் தாயே! வாழ்வினில் தமிழரைத் தாழாது காப்பவள் நீதான். வீரனுக்குள் இருக்கும் திறனும், அவனது வெற்றிக்குக் காரணமும் நீதான். நான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உன்னை விட்டுப்பிரியமாட்டேன். தமிழன் நான் என்றும் தலைகுனிய மாட்டேன். எனைச் சூழ நின்று எனக்கு இன்பத் தரும் தாயே, என் உடலுக்குள் உயிராய் இருக்கும் உனை மறக்கமாட்டேன். பெருமைமிகு தமிழே, என்னுயிரே, தேனே, எனது செயலும் உயிரும் உன்னைச் சார்ந்தே இயங்கும். நீ சிதைந்து போனால் நானும் சிதைவேன்; நல்லநிலையடைந்தால் நானும் நல்லநிலையடைவேன். களங்கமற்ற புது நீர்நிலை போன்ற தொன்மையான நல்ல மாந்தர் கூட்டத்தில் செந்தாமரை செழித்து வளர்ந்தது போல் வளர்ந்து செழித்த என் தமிழே வாழ்க! ஒளியான தமிழே நீ வாழ்க!”

என்பதேப் பொருள்.

இதையும் படியுங்கள்:
குளிரூட்டப்பட்ட நடைபாதைகளுடன் குளு குளு நகரமாக மாறுகிறது துபாய்!
Manonmaniyam Sundaranar and Bharathidasan

புதுச்சேரி அரசின் அதிகாரப்பூர்வ விழாக்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் தொடக்கத்தில் இந்தப் பாடல் பாடப்படுகிறது. விழா நிறைவில், இந்திய தேசிய கீதம் இடம் பெறுகிறது.

logo
Kalki Online
kalkionline.com