

பள்ளிக் கூடங்கள் வெறும் பாடங்களைக் கற்பிக்கும் இடமல்ல; மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் விதைக்கும் ஆலமரங்கள் என்பதை உணர்த்தி, ஆசிரியர் - மாணவர் உறவின் புனிதத்தையும் ஆரோக்கியமான பள்ளிச் சூழலின் அவசியத்தையும் விளக்குகிறார் குழந்தைகள் நல மருத்துவர் க. இராவணன் M.D.
பள்ளி என்பது மாணவர்களுக்கு அறிவைப் புகட்டும் இடம் மட்டுமல்ல, ஆசிரியர்களை மதிப்பது, பொறுப்புடன் நடப்பது, கருத்து வேறுபாடுகளை நாகரிகமாகக் கையாள்வது போன்ற வாழ்க்கைப் பண்புகளைக் கற்றுக்கொள்ளும் இடமும் ஆகும். ஒரு பள்ளியின் அமைதியும் ஒழுக்கமும் ஆசிரியர்களால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாணவர்களும் அதற்கு சமமான பொறுப்பாளர்கள்தான். இருதரப்பினரின் பற்பல நல்ல செயல்களும் ஒழுக்கங்களும் ஆரோக்கியமான பள்ளிச்சூழலை உருவாக்குகின்றன.
1. ஆசிரியர்களிடம் மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
ஆசிரியரைப் பார்க்கும்போது மரியாதையுடன் வணக்கம் கூறுதல், அவர் பேசும்போது இடையில் குறுக்கிடாமல் கவனித்தல், சந்தேகம் இருந்தால் கையை உயர்த்திக் கேட்பது போன்ற எளிய பழக்கங்களே நல்ல பண்பாட்டின் அடையாளங்கள். ஆசிரியருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், குரலை உயர்த்தாமல் நாகரிகமாகத் தெரிவிக்க வேண்டும்.
2. ஆசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
மாணவர்களை மதிப்பது என்பது அவர்களின் ஒவ்வொரு செயலையும் ஏற்றுக்கொள்வது அல்ல. தவறைச் சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் மென்மையான சொற்களால் விளங்க வைத்தல். ஆனால் மாணவனின் தன்மையை அல்ல. எல்லோருக்கும் முன்னால் அவமானப்படுத்துவதைவிட, தனியாக அழைத்துப் புரியவைப்பது பல நேரங்களில் சிறந்த பலனைத் தரும்.
3. வகுப்பறையில் மாணவர்களின் கடமை என்ன?
ஆசிரியர் பாடம் நடத்தும்போது பேசிக்கொண்டிருத்தல், பிற மாணவர்களைத் தொந்தரவு செய்தல், தேவையில்லாமல் எழுந்து செல்வது போன்றவை வகுப்பின் கவனத்தைச் சிதைக்கும். நேரத்திற்கு வருதல், தேவையான புத்தகங்களைக் கொண்டு வருதல், வகுப்பறையில் குப்பைகள் போடாமல் தூய்மையாக வைத்தல், மற்றவர்களின் கற்றலுக்கு இடையூறு செய்யாமல் இருப்பது ஆகியவை ஒவ்வொரு மாணவரின் பொறுப்பு.
4. வகுப்பறையை ஆசிரியர்கள் எப்படி அமைதியான கற்றல் இடமாக மாற்றலாம்?
ஒழுக்கம் என்பது பயத்தை உருவாக்குவதல்ல. தெளிவான விதிமுறைகள், அனைவருக்கும் சமமான அணுகுமுறை, மாணவர்களின் கேள்விகளைக் கேட்கும் பொறுமை ஆகியவை வகுப்பறையில் நல்ல சூழலை உருவாக்கும். கேள்வி கேட்கும் மாணவனைத் தடுக்காமல், கேள்வி கேட்கும் துணிச்சலை வளர்த்தெடுப்பதே சிறந்த ஆசிரியத்துவம்.
5. பள்ளி வளாகத்தில் இருதரப்பினரும் எதை நினைவில் கொள்ள வேண்டும்?
வகுப்பறைக்கு வெளியேயும் மரியாதை தொடர வேண்டும். நடைபாதையில் ஓடுதல், தள்ளுமுள்ளு செய்தல், சுவர்களில் எழுதுதல், குப்பைகளை வீசுதல் போன்றவை செய்யக் கூடாது . ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளி வளாகத்தை தங்களுடைய பொதுவான பொறுப்பாக கருத வேண்டும்.
6. தவறான புரிதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மாணவன் தவறு செய்திருக்கலாம், ஆசிரியரின் புரிதலிலும் சில நேரங்களில் தவறு இருக்கலாம். உடனடியாக கோபப்படுவதற்குப் பதிலாக இருதரப்பினரும் நடந்ததை அமைதியாகப் பேசித் தெளிவுபடுத்த வேண்டும். கேட்பதற்கு முன் தீர்ப்பு வழங்குவது பிரச்சினையை பெரிதாக்கும், முதலில் கேட்டு, பின்னர் முடிவு செய்வது உறவைப் பாதுகாக்கும்.
7. ஆசிரியர்–மாணவர் உறவில் எல்லைகள் ஏன் அவசியம்?
அன்பும் மரியாதையும் இருந்தாலும், பள்ளியில் ஒழுக்கமான எல்லைகள் அவசியம். மாணவர்களிடம் ஆசிரியர் நியாயமான தூரத்தையும் தொழில்முறை அணுகுமுறையையும் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் மாணவர்களும் ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனியுரிமையை மதிக்க வேண்டும். நல்ல உறவு என்பது எல்லையற்ற நெருக்கம் அல்ல, எல்லைகளை மதிக்கும் நம்பிக்கையாகும்.
8. இப்படிப்பட்ட பள்ளிச்சூழல் உருவானால் என்ன பயன்?
மாணவர் அச்சமின்றி கற்க முடியும். ஆசிரியர் மனநிறைவுடன் கற்பிக்க முடியும். தேவையற்ற சண்டைகள், புகார்கள், தவறான புரிதல்கள் குறையும். ஒருவரை ஒருவர் மதிக்கும் பழக்கம் பள்ளிச் சுவர்களைத் தாண்டி குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சென்றடையும்.
முடிவுரை:
நல்ல பள்ளியை உருவாக்குவது கட்டிடங்களோ, கருவிகளோ அல்ல.அங்கு வாழும் மனிதர்களின் நடத்தைதான்.
மாணவர் ஆசிரியரை மதிக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவரை நல்ல முறையில் வழிநடத்த வேண்டும்.
இருவரும் ஒருவரையொருவர் புரிந்து நடக்க வேண்டும்.
கருத்து வேறுபாட்டை பகையாக மாற்றாமல் உரையாடலாக மாற்றி சுமூக தீர்வு காண வேண்டும்.
“பள்ளியில் கற்பது பாடங்களை மட்டும் அல்ல, ஒழுக்கமான ஒப்பற்ற வருங்காலத்தையும் கற்போம்!”