

காரோட்டினபடியே சுவாரசியமாக தன் மலரும் நினைவுகளை சொல்லிக்கொண்டிருந்தாள் கீர்த்திஸ்ரீ.
“ஹைதராபாத்ல ஒரு தெலுங்குப்பட சூட்டிங்.. மறக்கவே முடியாது! என்னைச் சுத்தி பாதுகாப்புக்கு யூனிட் ஆட்கள் இருந்தும் ஆம்பளைங்க அத்தனை பேரு என்னைச் சூழ்ந்துட்டாங்க. எனக்கு கூட்டம் அலர்ஜி. அலர்ஜியைவிட பயம்! ஏன்னா கும்பலாக சேர்ந்துட்டா அவங்க மனநிலை வேற. என்னை பொதுச் சொத்தாக்கிடுவாங்க. அவங்க உடம்பு முழுக்க கைகள் மட்டும்தான் இருக்கும்!
அன்னைக்கு நான் சீனுக்குப் போட்டிருந்த ட்ரஸ்சும் சரியில்லை. அது ஒரு பெரிய தப்பு. நான் என்ன பண்றதுன்னு தெரியாம மலைச்சுப்போய் நிக்கறேன். என்னைத் தொட்டுப் பார்க்கறதிலே, சீண்டறதுல, நான் நிஜமான்னு தெரிஞ்சுக்கறதிலே அத்தனை வெறி அவங்களுக்கு. கடவுளேன்னு கதர்றேன்... சொன்னா நம்பமாட்டே... வில்லன் நடிகர் லோகிதாஸ் தான் ஓடிவந்து என்னைக் காப்பாத்தினார்!
அவர் உண்மையிலேயே பலசாலி. ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை கட்டுமஸ்தா வெச்சிருந்தாரு. என்னை மறைச்சுநின்னு ‘டேய்..’ன்னு ஒரு சத்தம் விட்டாரு... கூட்டம் மிரண்டுடுச்சு. எல்லை மீறின எல்லோருக்கும் அடியும், உதையும்.! ஆனா என்ன ஒரு அபத்தம் பாரு... வில்லன், கதாநாயகியை நிஜத்தில் காப்பாத்தினாரு!”