

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் கோலிவுட் To கோட்டை – “உங்கள் பார்வையில் தளபதியின் புதிய வழி” பற்றிய கருத்தை கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் இரண்டாவது கட்டுரை இதோ…
தன் பெயரிலேயே வெற்றியை தாங்கி நிற்கும் தலைவர். எந்த வித அரசியல் பின்புலமும் இன்றி அரசாள வந்திருக்கும் அரிய மனிதர். படிப்பில் பெற்றோர் எதிர்பார்த்த 'படி'யை அடைய விருப்பமின்றி நடிப்பில் நாட்டம் கொண்டார். நாடிய துறையில் முழு ஈடுபாடுடன் உழைத்து முன்னேறி முன்னணி நடிகருள் ஒருவரானார்.
'நான் மன்னர் பரம்பரையில் வந்தவன் அல்ல' என்று எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது. ஆனால் பல ஆண்டுகளாக மத்திய வர்க்க மக்களோடு கலந்து அவர்களின் தேவைகளைப் புரிந்து, அதற்கு தன்னாலான உதவிகளை எப்படியெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனை அவர் மனதில் முழுவதுமாக பதிந்துவிட்டது என்று கூறலாம்.
தனது புதுப்பட ரிலீஸ் மற்றும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் திரைத்துறை சார்ந்த மக்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தொண்டர்களுக்கும் டிபன் பாக்ஸில் பிரியாணி வழங்கி வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ள பண்பாளர் விஜய்! இவ்வாறே முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு முன்பே தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மனதில் நீங்காது நிலைத்து நிற்கும் ஓர் இடத்தில் அமர்ந்துவிட்டார்.
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என முடிவெடுத்ததே அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான உதவிகளை அள்ளி வழங்கவும், ஊழலற்ற தூய்மையான இந்தியாவை உருவாக்க, தனது பங்களிப்பாக தமிழ்நாட்டை சீர்படுத்தவேண்டும் எனவும் எண்ணியதின் விளைவு எனலாம். அவர் இலக்கை அடைந்துவிட்டார். மக்களுக்கு சேவை செய்யவும் ஆரம்பித்துவிட்டார். எவரும் எதிர்பாராத அளவுக்கு எளிமையை கையாள்கிறார்.
ஆம்... மதிய உணவை கையோடு கொண்டு வந்து பணி செய்யும் இடத்திலேயே பசியாற்றிக்கொள்கிறார். பைக்கில் அலுவலகம் செல்லவும் தயங்குவதில்லை. தேர்தல் வாக்குறுதிகளை திறம்பட நிறைவேற்ற, மீட்டிங் போட்டு ஆலோசனை செய்கிறார். சாத்தியப்படாதவற்றையும் எப்படியாவது சாத்தியப்படச் செய்வோம் என தன்னம்பிக்கையோடு பேசுகிறார். இவரின் தொண்டர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று, "அண்ணா, நீங்க ரொம்ப கஷ்டமெல்லாம் படாதீங்க. நாங்க சமாளிச்சிக்கிறோம்" என்று குரல் எழுப்புகின்றனர். இப்பேற்பட்ட மக்களின் சப்போர்ட் இருக்கும்போது விஜய் எதையும் சாதிப்பார்.
மாநகர பேருந்துகளில் ஓட்டுநர் கைபேசியை தவிர்க்க வேண்டும், ரேஷன் பொருள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இருக்கக்கூடாது என்றெல்லாம் அவர் போடும் உத்தரவுகளில் மக்கள் நலனில் அவர் காட்டும் அக்கறை வெளிப்படுகிறது. பராபவ ஆண்டில் பதவி ஏற்றுள்ள விஜய்யின் ஆட்சி, "பரவாயில்லை" என்று சொல்லிவிடாமல் "பண்புற்ற ஆட்சி" என்று சொல்ல வைக்கும் என நம்பலாம்.