

'WAIT பண்ணுங்க Sir...' - முக்கால்வாசி ஆங்கிலத்திலும் கொஞ்சம் தமிழும் கலந்த ஒரு வார்த்தை. எல்லா இடங்களிலும் பரவலாக இது சொல்லப்படும்.
'காத்திருங்கள் அய்யா' என்று தூயத்தமிழில் யாரும் சொல்வதில்லை.
சொல்ல முயற்சி செய்வதுமில்லை. தப்பித்தவறி யாராவது சொன்னால் கேட்கும் நபர் தம்மை அவர் கிண்டல் செய்வதாக நினைக்க வாய்ப்புகள் அதிகம்.
பாஸ்போர்ட் வாங்குவது தொடர்பாகவோ, ஏதாவது காணாமல் போனால் புகார் அளிக்கவோ காவல் நிலையம்... அதாங்க... போலீஸ் ஸ்டேஷன் சென்றால் நம்மைப் பார்த்து அங்குள்ளவர்கள் Wait பண்ணுங்க sir இன்ஸ்பெக்டர் கொஞ்ச நேரத்தில் வந்துடுவாருன்னு சொல்வார்களா...?
அலுவல் நிமித்தமாக அரசு அலுவலகங்களுக்கு செல்ல நேரிடும் போது இது போன்ற பணிவான வார்த்தைகள் கேட்க முடியுமா...?அரிதினும்... அரிதாய்.. ஒரு சில இடங்களில் மட்டுமே கேட்க முடியும்.
எம்.ஜி.ஆர் வாழ்க்கையில் 'காத்திருத்தல்' தந்த வெற்றி!
மக்கள் திலகம் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'நினைத்ததை முடிப்பவன்'.
அந்த படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் ஊர்வசி சாரதா பிரமாதமாக நடித்திருப்பார். இந்த படம் தொடங்கும் போது இந்த வேடத்திற்கு பொருத்தமானவர் சாரதா தான் என்று முடிவு செய்து அவரிடம் கால்ஷீட் வாங்குங்கள் என்று சொன்னாராம். அப்போது சாரதா அவர்கள் தெலுங்கில் ரொம்ப பிசியான நடிகையாக இருந்தார். தற்சமயம் கால்ஷீட் கொடுக்க இயலாது என்று வருத்தப்பட்டு சொன்னாராம். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள், "கால்ஷீட் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு நடிகையை போட வேண்டாம்" என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் கால்ஷீட் கொடுத்து நடித்தார். அந்த ஒரு படத்தில் மட்டுமே அவர் எம்.ஜி.ஆர். அவர்களோடு நடித்தார். மக்கள் திலகத்தின் பெருந்தன்மையையும் படம் வெளியான பிறகு எங்கு என்றாலும் தலைவரோட தங்கச்சி என்று மக்கள் அன்போடு அழைத்ததையும் அந்த ஒரு படம் நூறு படங்களுக்கு சமம் என்றும் பெருமையோடு பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார் சாரதா. 'பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த' என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் நம் வீட்டுத் திருமணம், நம் தங்கையின் திருமணம் நடப்பது போல ஒரு உணர்வு ஏற்படும்.
தலைவர் அவர்கள் சொன்ன 'WAIT பண்ணுங்க' என்ற அந்த வார்த்தைகள் இன்றும் என்றும் எவ்வளவு சந்தோஷத்தை நமக்கும் ஊர்வசி சாரதா அவர்களுக்கும் தந்து கொண்டே இருக்கிறது.
WAIT பண்ணுங்க காதலில் அதிகமாக இடம் பெறும். அப்படி ஒன்று தான் படகோட்டி படத்தில் வரும்
'என்னை எடுத்து தன்னைக்கொடுத்து போனவன் போனாண்டி...
தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி'
என்ற பாடல்.
காத்திருத்தலின் வலியை வெளிப்படுத்தும் விதமாக வாலி எழுதியிருப்பார்.
காத்திருக்கும் இன்னொரு காதலி 'பாஞ்சாலி'.
வேலை தேடி சென்னை சென்ற அவள் காதலன் தனக்கு செய்தி அனுப்புவான் என்று காத்திருக்கிறாள். அவளுக்கு தூதாக வருவது 'கிழக்கே போகும் ரயில்' தான்.
ஒரு நாள் 'வசந்தம் வந்தது' என்று அவள் காதலன் 'பரஞ்சோதி' அந்த ரயிலின் கடைசிப் பெட்டியில் சாக்பீசால் எழுதுகிறான். அந்த செய்தியை அவள் பார்க்கிறாள். 'பூவரசம் பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதி வந்தாச்சு...' என்று சந்தோஷமாக ஆடிப்பாடுகிறாள். முதன் முதலாக ஒரு அஃறிணை தூதாக அனுப்பப்பட்டது.
கட்டுரைக்கான தலைப்பாக எதை எடுத்துக்கொண்டாலும் அதன் பெயரில் ஒரு நாவல் யாரவது எழுதியிருப்பார்கள். பிரபல நாவலாசிரியர் ஹா ஜின் அவர்கள் காத்திருப்பு (WAITING) என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதியுள்ளார். சீனாவில் பிறந்த இவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.
இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் விரும்பாமல் திருமணம் செய்து கொண்ட தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மருத்துவமனையில் தன்னோடு பணிபுரியும் செவிலியர் ஒருவரை காதல் திருமணம் செய்ய நினைக்கிறார். அதற்காக 18 வருடங்கள் காத்திருந்து விவாகரத்து பெற்று தன் காதலியை மணந்து கொள்கிறார்.
அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது. காத்திருப்பு அவருக்கு சந்தோஷமான வாழ்கையை தந்ததா என்பதே நாவலின் சுருக்கம். இந்த நாவல் 1999 ஆண்டில் அமெரிக்காவில் வழங்கப்படும் தேசிய புத்தக விருதைப் பெற்றது.
'WAIT பண்ணுங்க sir' என்று அன்பாக சொல்லிப் பழகுங்கள். அது ஒரு அழகான ஆங்கிலம் கலந்த மரியாதையான பதில். கேள்வி கேட்டவருக்கு திருப்தியை தரும் பதில். அதற்கும் காலக்கெடு உண்டு.
நீண்ட நாட்களாக முடிவு தெரியாத ஒன்றுக்கு ஒரு மெயில் அனுப்பினால் அதற்கு 'WAIT பண்ணுங்க sir' என்று பதில் அனுப்பி மீண்டும் முடிவு தெரியாத நிலைக்கு கேள்வி கேட்டவரை தள்ளினால் 'WAIT பண்ணுங்க sir' சந்தோஷத்தை தராது.
WAIT பண்ணுங்க sir... என்பது தற்காலிகம். (ஆங்கிலத்தில் சொன்னால் STOP GAP ARRANGEMENT). நிரந்தர தீர்வு அல்ல.