
இந்தியாவில் போக்குவரத்தை மேம்படுத்த என்னதான் Mono rail, புல்லட்ரயில் என்று வந்தாலும் மக்கள் தொகை ஏற ஏற இன்னும் பல மேம்பாடுகள் அவசியம் தேவைப்படுகிறது. அப்படி என்னென்ன போக்குவரத்து திட்டங்களை வருங்காலங்களில் இங்கு கொண்டு வரலாம்? என்னென்ன புதுமைகள் புகுத்தலாம்?
வான்வழி கேபிள் கார்கள் (Aerial cable cars) அல்லது நகர்ப்புற கோண்டோலாக்களை (Urban gondolas) போன்றவற்றை செயல்படுத்துவது எதிர்காலத்தில் நன்மை அளிக்கலாம். இந்த விஷயங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளில்தான் காணப்படுகின்றன.
இதை நெரிசலான சாலைகளைக் கடந்து செல்லவும், தடையற்ற போக்குவரத்தாகவும், சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றவாறும் மாற்றியமைக்கப்படலாம்.
மற்றொரு புதுமையான யோசனை ஹைப்பர்லூப்பின் (Hyperloop systems) அறிமுகம் ஆகும். இது நகரங்களுக்கு இடையே அதிவேக பயணத்தை உறுதியளிக்கிறது. பயண நேரத்தையும் வெகுவாக குறைக்கிறது.
கூடுதலாக, ஸ்மார்ட் சிட்டி உள்கட்டமைப்பு வசதியோடு நம் எல்லா நகரமும் புதுப்பிக்கப்பட்டால் அமெரிக்கா, சீனாவில் இருப்பதுபோல் தானியங்கி மின்சார ஷட்டில்கள் (Autonomous electric shuttles) போன்ற வசதியான நகர்ப்புற போக்குவரத்தைக்கூட வருங்காலங்களில் அறிமுகப்படுத்தலாம்.
ஆரம்பக் கட்டம் கொஞ்சம் சவால்தான்..
இப்படிப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் சில தனித்துவமான சவால்களுடன்தான் நடைமுறைக்கு வருகின்றன.
வான்வழி கேபிள் கார்களுக்காக மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பல டவர்கள், கேபிள்களை நிறுவ வேண்டும்; இதனால் சாலை மூடல் மற்றும் ஒலி மாசு உள்ளிட்ட தற்காலிக இடையூறுகளை சந்திக்கக்கூடும்.
ஹைப்பர்லூப் போக்குவரத்திற்கு இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு இடையே பெரிய சுரங்கப்பாதைகள் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்ற தேவைகள் உள்ளதால் ஹைப்பர்லூப்கான கட்டுமானம் பல புவியியல் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
ஸ்மார்ட் சிட்டி உள்கட்டமைப்பு இல்லாத வரை பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற காரணங்களால் தானியங்கி மின்சார ஷட்டில் போன்ற விஷயங்களுக்குத் தடை ஏற்படலாம்.
பரஸ்பர ஒத்துழைப்பு நம்மிடம் உள்ளதா?
இந்தத் தடைகளை கடக்க அரசு மற்றும் பொதுமக்கள் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
அரசாங்கம் மற்றும் மக்களுக்குள் இருக்கும் வெளிப்படையான (Transparent) தொடர்பு, திட்டத்தின் காலக்கெடு, அதன் நன்மைகள், பின் ஏற்படக்கூடிய பிரச்னைகளை சரி செய்யக்கூடிய உத்தரவாதம் மூலம் குடிமக்களிடம் சுலபமாக கொண்டு செல்லலாம்.
பொது-தனியார் கூட்டணியோடு (Public-private partnerships) தேவைப்படும் நிபுணத்துவம் (Experts) மற்றும் நிதியுதவியை சீக்கிரம் கொண்டு வர முடியும். இது திட்டம் சம்பந்தமான முடிவெடுப்பதிலும், சமூக ஈடுபாடு, நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் வளர்க்கும்.
இறுதியாக இதனால் பாதிப்பை சந்திக்கக்கூடும் குடியிருப்பாளர்களுக்கான இழப்பீடு, கட்டுமானத்தின்போது ஏற்படும் வேலை வாய்ப்பு சலுகைகள் போன்றவை இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தலாம்.
இந்த இடர்களுக்குப் பிறகு நாம் என்ன பெறுவோம்?
இந்த போக்குவரத்திற்கான கட்டுமானங்கள் முடிந்தவுடன் நாம் இப்போது பார்க்கும் நகர்ப்புற இயக்கம் முற்றிலும் மாறிவிடும்.
வான்வழி கேபிள் கார்களால் மக்கள் விரும்பும் சுலபமான பயணங்களை வழங்க முடியும்; இதனால் சாலை நெரிசல் மற்றும் மாசுபாடு குறையும்.
ஹைப்பர்லூப் அமைப்புகளால் சில நிமிடங்களில் நகரங்களை இணைக்க முடிவதால் பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பை (Regional integration) அதிகரிக்கும்.
இறுதியில் இந்த Autonomous electric shuttles முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பயன்பெறுவர். அவர்களுக்குத் தேவையான ‘வீல்சேர் வசதி’ மற்றும் தங்கள் கை, கால்களைப் பயன்படுத்தாமல் குரல்வழி (Voice recognition) மூலம் இயக்கும் வசதி இதில் இருப்பதால் மிகவும் பயனளிக்கும்.
இந்த வகையான திட்டங்கள் வருமோ...? வராதோ...? ஆனால், இது சாத்தியமானால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிரச்னையின்றி மக்கள் பயணம் மேற்கொள்ளலாம்.