மரணத் தண்டனை அளித்த பிறகு நீதிபதி பேனாவை உடைத்து விடுவார். ஏன் தெரியுமா?
பெரும்பாலும் இந்த நிகழ்வை நேரில் காண யாருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால், நமது இந்திய சினிமாக்களில் பலமுறை நாம் இதைக் கண்டுள்ளோம். மரணத் தண்டனை அளித்த பிறகு உடனே நீதிபதி அந்தப் பேனாவை உடைத்து விடுவார்.
ஏன்? எதற்காக? எந்தக் காரணத்திற்காகப் பேனா நிப்பை உடைக்கிறார்கள் என நாம் முழுமையாக அறிந்ததில்லை. யாரிடம் இருந்து இம்முறையை இந்தியா பின்பற்றி வருகிறது என்றும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மரணத் தண்டனை தீர்ப்புகள் அரிது! கடந்த தசாப்தங்களில் நாம் பெரிதாக மரணத் தண்டனை தீர்ப்புகளைப் பார்த்ததில்லை.
உலகளவில் மரணத் தண்டனை தவறு, மனிதத்தன்மை அற்ற செயல் எனப் போர்க்கொடிகள் தூக்கப்பட்டு, மிக அரிதாகத்தான் மரணத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.
மனிதாபிமான அடிப்படை, நல்லொழுக்கம் காரணம் காட்டி சிலரது மரணத் தண்டனைகள் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிகழ்வுகளையும் நாம் கண்டுள்ளோம்.
அஜ்மல் கசாப் - மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்பு இருந்த காரணத்தால், கடந்த மே 3, 2010 அன்று அஜ்மல் கசாபிற்கு மரணத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி எம்.எல். தஹில்யாணி தீர்ப்பு எழுதிய பிறகு பேனாவை உடைத்தார்.
அப்சல் குரு - அப்சல் குருவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். அதனால் சுப்ரீம்கோர்ட் வழங்கிய தீர்ப்பு நீடித்தது. அப்சல் குருவிற்கான தீர்ப்பு உறுதியான போதும் பேனா உடைக்கப்பட்டது.
இது தான் சமீபத்தில் நாம் கண்ட மரணத் தண்டனை மற்றும் பேனா உடைக்கப்பட நிகழ்வுகள்.
இந்தியா பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட நாடு. அவர்கள் கொண்டுவந்த சட்டதிட்டங்கள் பலவன 69 வருடங்கள் கடந்த பிறகும் கூட இன்றளவும் நாம் கடைபிடித்து வருகிறோம்.
ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது கடைபிடிக்கப்பட்டு வந்த முறைதான் இந்தப் பேனா நிப் உடைப்பது.
ஒரு நபரின் உயிரை 'குடித்த' நிப்பை (மரணத் தண்டனை என்னும் தீர்ப்பை எழுதிய நிப்பை) வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. சோகத்தை வெளிப்படுத்த தான் இதைச் செய்து வந்துள்ளனர்.
சிலர், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஒருவரது உயிரை பறித்த குற்ற உணர்வு காரணமாக அந்தப் பேனாவை அவர்களிடமே வைத்துக் கொள்ள நிப்பை உடைப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், நமது இந்திய சட்டப்புத்தகத்தில் எந்த இடத்திலும் மரணத் தண்டனை அளித்த பிறகு பேனா நிப்பை உடைக்க வேண்டும் என்ற குறிப்பு இல்லை.