
நான் தான் ரோபோட் பேசறேன். மனிதர்கள் தனக்கு தேவையான விதத்தில் என்னை படைச்சாங்க சார். தினமும் காலை விடிந்தவுடனேயே கம்ப்யூட்டரில் டப் டப்புனு பொத்தானை தட்றாங்க; இல்லை என்றால் remote ல் press பண்றாங்க. இதை செய், அதை செய் என்று ஆர்டர் போடுறாங்க.
காலையிலிருந்து ராத்திரி முழுவதும் ஒரே வேலை தான் எங்களுக்கு. இவர்களுக்கு வித விதமான சாப்பாட்டை கையில் கொடுக்க வேண்டும். கேட்டதை கொடுக்க வேண்டும். அப்பப்பா...போதும்..போதும்..
சார், போன வாரம் அப்படிதான் சார், என்ன ஆச்சு தெரியுமா? அய்யோ இந்த முதலாளி அம்மாவோட ஒரே லொள்ளா போச்சு சார். அவங்களோட ப்ரெண்ட்ஸை வீட்டிற்கு கூப்பிட்டிருந்தாங்க. அய்ய்யோ...அம்மா அந்த ப்ரெண்ட்ஸ் ஆன்டிகள் எல்லாம் சேர்ந்து என்னை ஒரு வழி ஆக்கி விட்டாங்க சார்.
ஒரு ஆன்டி , ஏய் ரோபோ, come here, switch on the fan என்று சொல்றாங்க. இன்னொரு ஆன்டி, ஏய் ரோபோ, switch on the tv என்று சொல்றாங்க. அப்பப்ப சாப்பிட இதை கொண்டு வா அதை கொண்டு வா என்று ஒரே கூச்சல் தான் சார். அவங்க எல்லோரும் கிளம்பி போன பிறகு முதலாளி அம்மா லைனா வேலையை எங்கிட்ட சொல்லிட்டு நிம்மதியாக உறங்கிட்டாங்க.
சார், தினமுமே அவங்களோட இரண்டு குழந்தைகள் படுத்தற பாடு இதை விட அதிகம். சார், அந்த குழந்தைகளுக்கு time table கூட நான் தான் அடுக்கி கொடுக்கிறேன். எனக்கு அப்படி programming பண்ணி வைத்திருக்காங்க. சார் காலிங் பெல் சத்தம் வந்தால் நான் தான் போய் கதவை திறக்க வேண்டும். என்ன பிழைப்பு சார் இது?
ஏன் சார், நான் தெரியாமல் தான் கேட்கிறேன், மனிதர்கள் design பண்ணி அவர்களைப் போலவே எல்லா வேலையையும் எங்களை செய்ய சொல்கிறாங்க. ஆனா, ஏன் சார் இவர்கள் எங்களுக்கு சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் programming பண்ணல? நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டும். ஆனால் ஒரு நாள் ஒரு தடவை கூட சாப்பிடுவதற்கோ அல்லது குடிப்பதற்கோ இவர்கள் சொல்வதில்லை.
சார், இவர்கள் எல்லோரும் டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு என்னை பரிமாற சொல்வாங்க. அதுவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் non-veg சும்மா சமையா இருக்கும் சார். அது மட்டுமில்லாமல் சரக்கையும் என்னை ஊற்ற சொல்வாங்க. ஆனால், என்னால் குடிக்கவும் முடியாது, சாப்பிடவும் முடியாது.
ஏய் ரோபோ இதை சாப்பிடு, ஏய் ரோபோ இங்க வா, இதை குடி என்று சொன்னால் எப்படி இருக்கும் சார். சொல்ல மாட்டாங்க சார். நானும் பல வருடமாக எதிர்பார்த்து எதிர்பார்த்து ஓய்ந்து போய்ட்டேன். சார், சில நேரத்தில் மனிதர்கள் சொல்வார்கள், "நான் என்ன இயந்திரமா? வேலை செய்து கொண்டே இருக்க வேண்டுமா?" என்று.
ஆனால், இவர்கள் இயந்திர மனிதர்களாகிய எங்களை பற்றி நினைப்பதே இல்லை சார். எங்களுக்கு பசி, தூக்கம் என்று எதுவுமில்லை சார். இவர்கள் தன்னோட வசதிக்காக மட்டும் தான் சார் எங்களை படைத்திருக்காங்க. அதனால் நாங்க மனிதர்கள் சொல்கிறபடி தான் நடக்க வேண்டும். எதாவது சிறிது தவறு நடந்தால் கூட ஜோரா கூச்சலிட்டு உடனே அதை திருத்தி விடுவாங்க.
ஆனால் இவர்களை படைத்த கடவுளின் இஷ்டபடி இவர்கள் நடந்து கொள்றாங்களா? அவருக்கு கட்டுபட்டு தான் நடக்குறாங்களா??இவர்கள் படைப்பாகிய நாங்கள் மட்டும் நில் என்றால் நிற்க வேண்டும், உட்கார் என்றால் உட்கார வேண்டும். ஆனால் இவர்கள் மட்டும் கடவுளுக்கு அடங்காமல் இஷ்டம் போல் நடக்கலாம், இங்கும் அங்குமாக சுற்றலாம், இஷ்டம் போல சாப்பிடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
சார், மனிதர்கள் எங்களை எப்படி remoteஐ அழுத்தியோ அல்லது பொத்தானை தட்டியோ இயக்குவது போல், கடவுளும் மனிதர்களை தன் கட்டுக்குள் வைத்து இயக்க ஆரம்பித்தால், ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள். நிலைமை எப்படி இருக்கும்னு...