

அப்பா, அம்மா செய்த தவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் யார்? அவர்களுடைய பிள்ளைகளா? இல்லை... பிள்ளைகள் பெற்ற பிள்ளைகளா?
எல்லா பெற்றோர்களுக்குமே தன்னுடைய குழந்தைகள் நன்றாக இருக்கவேண்டும். படித்து முடித்தவுடன் ஒரு நல்ல வேலை கிடைக்கவேண்டும். நல்ல வேலை கிடைத்தவுடன் திருமணம் நடத்தவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்களுடைய குழந்தையின் நலனை மட்டுமே யோசிப்பார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால், தங்களுடைய குழந்தைகளிடம் இருக்கும் மனநிலை பாதிப்பையோ அல்லது உடல்நிலை பாதிப்பையோ மறைத்து திருமணம் செய்யும்போது அதனால் பாதிக்கப்படுவது யார்? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, பாதிக்கப்படுவது அவர்களுடைய துணை மட்டுமல்ல.. அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும்தான்.
பெற்றோர்கள் செய்யும் தவறினால் அவர்களுடைய பிள்ளைகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை. பாதிப்பு யாருக்கு என்று கேட்டால், அந்த ஆண்/பெண்ணிற்கு வந்த துணைக்கும் மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கும்தான்.
பொதுவாக நாம் என்ன சொல்லுவோம்...
மாதா, பிதா செய்த பாவம் அல்லது தவறு மக்களைத்தான் பாதிக்கும் என்று. மன்னிக்க வேண்டும் இந்த இடத்திலே மக்கள் என்பது அவர்கள் பெற்ற பிள்ளைகள் அல்ல, மாறாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு பிறந்த குழந்தைகள்தான்.
உதாரணத்திற்கு, ஒரு மகனுக்கு டிப்ரஷன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. தொட்டதற்கெல்லாம் கோபம். சில சமயங்களில் தற்கொலை செய்துகொள்ள கூட முயற்சி செய்திருக்கலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்...
இப்படி இருக்கும் இந்த மகனுக்குத் திருமண வயது வந்தவுடன், அவனுடைய பெற்றோர்களின் நினைப்பு என்னவாக இருக்கும்? காலா காலத்தில் ஒரு திருமணத்தை செய்து வைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்புதான். உடனே என்ன செய்வார்கள்? அந்தப் பையனுக்கு இருக்கும் குறைகளை மறைத்துவிட்டு உடனடியாக ஒருபெண்ணைத் தேடி திருமணத்தை முடித்து வைப்பார்கள்.
முதலில் அந்தப் பெண் இவனுடைய குறைகளை தெரிந்துகொண்ட பிறகு மிகவும் சிரமப்படுவாள். பிறகு குழந்தையும் பிறந்துவிடும் அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்தபிறகு இந்த மனைவியைவிட அந்தக் குழந்தைத்தான் அதிகமாக பாதிக்கப்படும்.
இன்னும் சொல்லப்போனால் தந்தையின் அந்தக் குணம் அந்த குழந்தைக்கும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆகவே, இந்த தந்தைக்கு என்ன குணமோ அதே குணம்தான் அந்தக் குழந்தைக்கு வரும்.
ஆக, அந்தப் பையனுடைய பெற்றோர்கள் பண்ணத் தவறினால் அவனுடைய மனைவியும் பாதிக்கப்படுகிறாள். அவனுடைய குழந்தைகளும் பாதிக்கப் படுகிறார்கள். ஆனால் அந்தப் பையனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவன் எப்பொழுதும்போல கோபப்பட்டுக்கொண்டும் காரணமே இல்லாமல் கத்திக்கொண்டும், பொருட்களைத் தூக்கி எறிந்துக்கொண்டும் இருக்கிறான்.
இதைப்போலவே ஒரு பெண்ணிற்கும் மனதளவில் குறைபாடு இருந்து அவளுடைய பெற்றோர்களும் மறைத்து திருமணம் செய்துவைத்தால், பாதிக்கப்படுவது அந்தப் பெண்ணினுடைய கணவரும் குழந்தைகளும்தான்.
சரி, ஒரு வேளை உடல்நிலையில் ஏதாவது பிரச்னை இருந்து அதை மறைத்து திருமணம் செய்து வைத்தாலும் இந்தப் பாதிப்பு வருமா? என்று கேட்டால் கண்டிப்பாக வரும். ஆணுக்கு இருந்தாலும் சரி, பெண்ணிற்கு இருந்தாலும் சரி, கண்டிப்பாக பிறக்க போகும் குழந்தைக்கும் அதே நோய் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு சர்க்கரை நோய், காச நோய், ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால் கண்டிப்பாக குழந்தைகளுக்கும் வரும்.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் குறைகளை மறைத்து திருமணம் செய்வதால் அடுத்துவரும் சந்ததியினர்தான் அதற்கான பாதிப்பை மிக அதிக அளவில் எதிர்கொள்கிறார்கள்.
பெற்றோர்களே, உங்களுடைய எண்ணம் நியாயமானதுதான். இல்லை என்று நான் சொல்லவில்லை. எல்லா பெற்றோருக்குமே எப்படியாவது திருமணத்தை முடிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான்.
ஆனால், ஒன்றை நீங்கள் நிச்சயமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகளுக்கு அதாவது மகனோ அல்லது மகளோ யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு ஏதாவது குறை உடலளவிலோ அல்லது மனதளவிலோ இருந்தால், குழந்தைப் பருவத்திலேயே அதைக் கண்டுபிடித்து அதற்கான முறையான சிகிச்சையை அளித்து, முழுவதும் குணமான பிறகு திருமணத்தைப் பற்றி யோசியுங்கள். இல்லை என்றால் பாதிக்கப்படுவது உங்களுடைய வருங்கால சந்ததியினர்தான் என்பதை மறவாதீர்கள்!