

கோடை காலத்தில் நம் உடல் சூட்டைத் தணிக்கவும், உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்கவும், உணவு உட்கொள்ளும் முறைகளில் நாம் பலவித மாற்றங்களைச் செய்து கொள்கிறோம். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்த்து மோர், தயிர், லஸ்ஸி, பழ ஜூஸ் வகைகள் மற்றும் இளநீர் போன்றவைகளை அதிகம் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறோம். இப்படிப்பட்ட நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்கும்போது அவை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். மேற்கூறிய உணவுகளில் இளநீர் மிகவும் பாதுகாப்பானது. இயற்கை முறையில் பேக் செய்யப்பட்டு கலப்படமில்லாத கனிமச் சத்துக்கள் கொண்டவை. இளநீர் வாங்கும்போது நாம் கவனிக்கவேண்டியது என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
இளநீர் நாம் இருக்கும் இடங்களுக்கே தள்ளு வண்டிகளில் கொண்டு வரப்பட்டு, மலிவான விலைகளில் கிடைக்கக் கூடியது. அப்படிக் கிடைக்காதபோது, நம் தெரு முனைகளிலேயே கொட்டிவைத்து விற்கப்படுவதைக் காணலாம்.
எல்லா இளநீர்க் காய்களும் ஒரே மாதிரி படைக்கப்படுவதல்ல. இளசான காய்கள் பளபளக்கும் பச்சை நிறத்தில், புத்துணர்ச்சியூட்டும் இளநீர்த் தண்ணீர் அதிகம் கொண்டதாக இருக்கும். அதாவது காயைக் கையில் எடுக்கும் போது கனமாக இருக்கும்.
கனமில்லாத காயில் நீர் அளவு குறைவாக இருக்கும். மேலும், காய் முற்றவும் ஆரம்பித்திருக்கும். அடுத்ததாக, காயை கையில் எடுத்து லேசாக குலுக்கிப் பார்த்தால், உள்ளிருக்கும் தண்ணீர் குலுங்கி 'சல சல' ன்னு சத்தம் வந்தால் உள்ளே தண்ணீர் அளவு குறைவாகவே உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். மெல்லிய நுட்பமான சத்தம் வந்தால் தண்ணீர் அளவு காயில் நிறைய உள்ளது என அர்த்தம் கொள்ளலாம்.
முற்றிய காய்களுக்குள் "வழுக்கை" எனப்படும் சதைப் பற்று அதிகமாகவும், (இள)நீரின் அளவு குறைவாகவும் இருக்கும். இவை சமையலில் பாயாசம் போன்ற உணவுகளின் தயாரிப்பிலும், டெசெர்ட்களிலும் (dessert) பயன்படுத்த உதவும்.
வாடிக்கையாளர்கள் அவரவர் தேவைக்கேற்ப நீர் அதிகமுள்ள காயையோ அல்லது வழுக்கை அதிகம் உள்ள காயையோ தேர்ந்தெடுத்து வாங்கிப் பயன் பெறலாம். தேங்காய் முற்றும் நிலைக்கு மாறும்போது திடமான சதைப் பகுதி அதிகரித்து திரவ அளவு குறைந்து கொண்டே போகும்.
உடலை குளிர்ச்சியடையவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் விரும்பி இளநீர் வாங்குபவர்களுக்கு, முற்றிய நிலைக்குச் சென்றுவிட்ட இளநீர் ஏமாற்றமடையச் செய்யும். இளநீர்களுக்குள் இருக்கும் நீரின் அளவு மற்றும் ஃபிரஷ் ஆனது, அவை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கால அளவு மற்றும் வெளியுலக வெயிலின் தன்மைக்கேற்பவும் குறைந்து போவதும் உண்டு. பழுப்பு நிறத்தில், காய்ந்து போய் மங்கலாக தோற்றமளிக்கும் காய்களை வாங்குவதைத் தவிர்த்து விடுவது நலம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் தேவையை நூறு சதவிகிதம் புரிந்துகொண்டு, வாங்கும் பொருளானது அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு சமமானதா என்பதையும் அறிந்து கொண்டு, இளநீர்க் காயை நன்கு பரிசோதித்து வாங்கினால் நற்பயன் பெறலாம்.